இலங்கையின் சகல இன முதுசம் செனட்டர் அல் – ஹாஜ் எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானாவின் 04 ஆவது ஆண்டு நினைவு


ரேபியா யெமன் நாட்டில் இருந்து இஸ்லாத்தை இலங்கை மக்களுக்கு போதிக்க வருகை தந்த ஸெய்யித் உஸ்மான் மௌலானா (கி.பி 15ஆம் நூற்றாண்டு)வின் பரம்பரையின் வழி வந்த எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானா 1932. 01. 31இல் பிறந்தார். ஸெய்யித் ஐதுறுஸ் மௌலானாவின் மகனான ஸெய்யித் ஸெயின் மௌலானா, இஸ்மாலெப்பைப் போடியார் செய்னம்பு என்பவருக்கு மகனாக இலங்கையின் மருதமுனையில் பிறந்து, 2015-12-04ஆம் திகதி தனது இல்லமான கொழும்பில் இறையடி சேர்ந்தார். மருதமுனையில் நடைபெறும் கூட்டங்களில், எனது வேண்டுகோளினை ஊர் மக்களாகிய நீங்கள் நிறைவேற்ற வேண்டும் என குறிப்பிட்டு பேசுவார். 

அது என்னவெனில் “நான் உயிர் நீத்தால் எனது உடல் என்னைத்தாலாட்டி, சீராட்டி வளர்த்த என் மருதமுனை மண்ணில்தான் நல்லடக்கம் செய்ய வேண்டும்”. இதற்கமைய 2015.12.05ஆம் திகதி மருதமுனையில் குடும்பத்தவர்களின் ஒத்துழைப்புடன் நல்லடக்கம் செய்யப்பட்டார். அவர் இறந்து இன்றுடன் 4 வருடங்கள் பூர்த்தியாகின்றது. 

அவர் இறக்கும் போது வயது 83. இவரின் நல்லடக்கத்தின் போது கலந்துகொண்ட இலங்கையின் பல்லின அரசியல் வாதிகள், அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சமயத்தலைவர்கள், உயர்பதவி வகிப்போர்களின் பங்குபற்றலானதும் வெளிவந்த இரங்கல் உரைகளும் எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானாவின் முக்கியத்துவத்தினையும், அவரது நன் மதிப்பினையும், தமிழ், சிங்கள, முஸ்லிம் உறவினையும் அது பறை சாற்றியது மட்டுமல்ல, இலங்கை நாட்டின் முஸ்லிம் - சிங்கள தமிழ் அரசியல் உறவு எவ்வாறு அமைதல் வேண்டும் என்பதையும் எடுத்து இயம்புவதாக அந் நிகழ்வு அமைந்திருந்தது. இது தற்போதைய காலத்தின் தேவையாகும்.

ஆரம்பக் கல்வியை மருதமுனை அல் - மனார் கல்லூரியில் கற்ற இவர், ஆறாம் வகுப்பு தொடக்கம் உயர் வகுப்பு வரை மட்டக்களப்பு சிவானந்தா வித்தியாலயத்திலும், மட்டக்களப்பு மத்திய கல்லூரியிலும் ஆங்கில மொழியில் கற்று அப்போதைய சிரேஷ்ட தராதரபத்தரப்பரீட்சையில் (எஸ்.எஸ்.சி) முதல் மாணவனாக சித்தியடைந்தார். 

1942இல் ஜந்தாம் வகுப்பு புலமைப்பரிசல் பரீட்சையில் (டென்ஹாம் Scholor ship) அப்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மூன்று மாணவர்களுள் முதலாவது மாணவனாக தெரிவு செய்யப்பட்டார். 1955இல் அகில இலங்கை ரீதியாக நடைபெற்ற தமிழ் பேச்சு போட்டியில் தங்கப்பதக்கம் வென்று மருதமுனை கிராமத்துக்கு புகழ் சேர்த்தார்.

“1945இல் ஆங்கிலம் படிப்பது ஹராம்” என்று முஸ்லிம் சமூகத்தில் அறை கூவல் விடுக்கப்பட்ட போது ஆங்கிலம் ஒரு மொழி அதனை படிப்பதில் ஆபத்து எதுவுமில்லை என்று ஐதுறூஸ் மௌலானா முழங்கினார். அவருடைய கருத்தின் வெளிப்பாடாக அக்காலத்தில் அவரது பேரனாகிய மசூர் மௌலானாவை ஆங்கிலம் கற்க மட்டக்களப்புக்கு அனுப்பினார். அங்கு பன்முக ஆளுமை பெற்று மருதமுனை அல் - மனார் மத்திய கல்லூரியில் ஆங்கில ஆசிரியரானார். பின்னர் மசூர் மௌலானாவின் ஆளுமைகள் கொழும்பு ஸாஹிராவில ஆங்கில ஆசிரியராக பணியாற்றும் போது புடம் போடப்பட்டன. பின்னர் சட்டக்கல்லூரியில் வீ ஆனந்த சங்கரியும், நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரனும், மசூர்மௌலானாவும் ஒன்றாக சட்டம் பயின்றனர்.

ஊரின் மீது அதிக பற்றுள்ள மசூர் மௌலானாவுக்கு அவர் பிறந்த ஊரான மருதமுனையில், அவர் உயிர் வாழும் காலத்திலே இரு முறை பாராட்டு விழா வெகு விமர்சையாக நடாத்தப்பட்டது. அதன் போது ‘மருதமுனையின் முத்து’ எனும் தலைப்பில் ஒரு நூலும், ‘விடி வெள்ளி’(2007) எனும் தலைப்பில் மற்றொரு நூலும் வெளியிடப்பட்டது. அவ்விழாவில் மருதமுனையின் முதற் பிரமுகர்கள், தேசிய அரசியல்வாதிகள் புடை சூழ ‘முஸ்லிம் நேசன்’ எனும் பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். இது அவரது சேவைக்கும், ஒழுக்க விழுமியத்துக்கும் நன்மதிப்பிற்கும் கிடைத்த சான்றாகும்.

 மசூர் மௌலானா மரணித்த போது அவருக்காக முன்னாள் நிதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் எழுதிய இரங்கல் உரையில்(2018) மருதமுனை பற்றியும் மசூர் மௌலானாவின் நற்பண்புகள் பற்றியும் கூறும் விதம் தமிழ் - முஸ்லிம் உறவு, அவரது பண்புகளை எடுத்துப்பேசும் விதம் எதிர்கால சந்ததியினரும், பாடசாலை பல்கலைக்கழக மாணவர்களும் தமது ஆளுமை விருத்தி தொடர்பாக அறிய வேண்டிய விடயமாகும். அது வருமாறு: “மசூர் மௌலானாவின் அனல் பறக்கம் பேச்சுக்கள் எனக்கு புதுமையாகவும், புத்துணர்வு கொடுப்பதாகவும் அமைந்திருந்தன. ஒரு பேச்சினால் மக்களை ஒருமித்து கிழந்தெழச்செய்ய முடியும் என்பதை மசூர் மௌலானா பேசிய போது தான் நான் உணர்ந்து கொண்டேன். 

அவரை நண்பனாக நான் ஏற்றுக்கொண்டது அவர் சட்டக்கல்லூரியில் கூட்டமொன்றில் தமிழ் பேசியபோதுதான். அவரின் குரலோ, தமிழோ, பேசிய பொருளோ எதுவென்று அறியேன். ஆனால் அவரின் பேச்சு மயிர் சிலிர்க்க வைத்தது. அதன்மூலம் “அடடா அழகு தமிழ் பேசுவோர் முஸ்லிம்களுக்குள்ளும் இருக்கிறார்கள்” என யோசித்துக்கொண்டேன். அன்று மாணவப்பருவத்தில் ரோயல் கல்லூரியில் முஸ்லிம்கள் பொதுவாக ஆங்கிலம் பேசுவர். 

கொழும்பு முஸ்லிம்கள் சிங்களம் பேசுவர். நான் பிறந்த புதுக்கடையில் முஸ்லிம் பேசும் தமிழ் வேறு, நான் மசூரிடம் கேட்ட தமிழ் வேறு என வியக்கிறார்” முன்னாள் நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன். அப்போதுதான் கேட்டேன் இவர் யார் அதற்கு விடையாக இவர்தான் மசூர் மௌலானா, எஸ்.ஜே.வி. செல்வநாயகம் தத்தெடுத்த புத்திரன் என்றார் என் யாழ்ப்பாணத்தமிழ் நண்பர். இவர் ஒரு மௌலவியா? எனக்கேட்டேன். இஸ்லாமிய மத நூல், சட்ட நூல்கள் போன்றவற்றில் பாண்டித்தியம் பெற்ற அறிஞர்களை மௌலானா, மௌலவி என கேள்விப்பட்டிருந்தேன். இல்லை அது வம்சப்பெயர் எனக் கூறினார். இதன் பின் தான் கிழக்கிலங்கை பற்றியும், மருதமுனை பற்றியும் அறியத்தொடங்கினேன்.எனக் கூறுகிறார். இத்தகைய ஒரு நபரின் ஆளுமைப்பண்பு இன்னொரு வரலாற்றைத்தேடச்செய்திருக்கிறது. என்ற செய்தி மசூர்மௌலானாவைப்பற்றி வியக்கவைக்கிறது.

நீதியரசர் சீ.வி.விக்னேஸ்வரன் மசூர் மௌலானா பிறந்த மருதமுனை பற்றி பின்வருமாறு கூறுகிறார். “மருதமுனை மக்கள் தமிழறிவு பெற்றவர்கள். தமிழில் அழகாக அளவளாவக்கூடியவர்கள். மதுரமான தமிழ் பேசும் மக்கள் செழித்து வளரும் மருத மரங்களின் கீழ் தோண்டப்படும் கிணறுகளிலிருந்து ஊற்றெடுக்கும் நீர் சுத்தமான, தெளிந்த நீராக இருக்கமென கூறுவதை நான் கேட்டுள்ளேன்.

போய்ப்பார்த்ததில்லை என குறிப்பிடுகிறார். இதன் மூலம் மருதமுனையின் ஆதி கால குடி நீரின் தரத்தையும், தற்கால நீரின் தரத்தையும் ஒப்பிட்டு அறிய வேண்டியுள்ளது. மருத மரத்தில் ஊற்றெடுத்து பருகிய தண்ணீர் பாக்கியம் இப்போதைய தலைமுறைக்குக் கிடைக்கவில்லை என்பது கவலைக்குரியது.

மட்டக்களப்பு சிவானந்தா கல்லூரியில் ஏ.ஆர். மன்சூர், எஸ்.இஸட்.எம். மசூர் மௌலானா ஓய்வு பெற்ற அதிபர் மருதமுனை ஏ.எம்.ஏ. ஜெலீல் ஆகியோர் ஒன்றாக கற்றனர். அக்கல்லூரியின் தமிழ் மன்றத்தின் தலைவராக மசூர்மௌலானா செயற்பட்டார். அப்போது விழா ஒன்றிற்காக தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகம், பொதுச்செயலாளர் அமிர்தலிங்கம், பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை, ஈ.எம்.வி. நாகநாதன், வனியசிங்கம் போன்றோர் மட்டு நகரில் உள்ள சிவானந்தா கல்லூரியில் அவர்களுக்கு ஒரு வரவேற்பு விழா நடைபெற்றது. கல்லூரியின் மாணவனான மசூர்மௌலானா உரையொன்றை ஆற்றினார். 

அவரது உரையைச் செவிமடுத்த விருந்தினர்கள் கட்சிக்கு பிரசாரப்பீரங்கி ஒன்று கிடைத்துவிட்டது என்று மகிழ்வுற்றனர். அவர்கள் உடனே மசூர் மௌலானாவின் தந்தையார் ஸெய்யித்செய்ன் மௌலானாவை காண மருதமுனைக்கு வந்து தகப்பனிடம் “அழகாக தமிழ் பேசும் உங்கள் மகன் தமிழ் - முஸ்லிம் உறவுக்கு இலக்கணமாக திகழ்கின்றார். ‘அவரை எங்கள் கட்சிக்கு தானமாக தாருங்கள்’ அதற்கு உங்கள் அனுமதி தேவை. அவர் எதிர்காலத்தில் சிறப்பாக இருப்பார். என்று கேட்ட போது, மசூர் மௌலானாவின் தகப்பன் 17ஆவது வயதில் தந்தை செல்வாவின் பாதுகாப்பில் மகன் மௌலானாவை அனுமதித்து ஆனந்த கண்ணீர் சிந்தினார்.

 பின் அரசியலில் பிரவேசித்து அரசியலில் பிரசாரம் செய்தார் என அவருக்காக வெளியிடப்பட்ட விடி வெள்ளி எனும் நூலில் அறியக்கிடைக்கிறது. இச்செய்தி ஒரு முஸ்லிம் தகப்பன் ஒரு தமிழ் தகப்பனிடம் தன் பிள்ளையை பொறுப்பு கொடுத்துள்ளார். எனும் விடயம், தற்கால தமிழ் - முஸ்லிம் உறவில் இன்றைய தலைமுறையினருக்கு எடுத்துச் சொல்ல வேண்டிய விடயமாகும். தமிழரசு கட்சியில் மௌலானா அங்கத்தவரான தன் பின் தமிழ் அரசுக்கட்சியின் தந்தை செல்வாவின் உற்ற நண்பராகவும், உடன் பிறந்த சகோதரர் போலவும் அக்கால அரசியலில் இணைந்து செயற்பட்டார். அன்று இலங்கையை ஆண்ட அரசுக்கு இரு சபைகள் இருந்தன. ஒன்று மேல்சபை (செனட்) மற்றையது கீழ்சபை (பாராளுமன்றம்) இதில் தமிழரசு கட்சியினால் அக்கால அரச சபையில் செனட் சபை (மேல் சபையில்) செனட்டர் (மூதவை உறுப்பினர்) பதவி கொடுத்து மௌலானா கௌரவிக்கப்பட்டார்.

இப்பதவியைக்கொடுப்பதற்கு மசூர் மௌலானாவை அழைத்த போது, பாராளுமன்றச் செயலாளர் சாம் விஜேசிங்கா மசூரின் வயது என்ன என்று கேட்க, மர்ஹும் ஏ.எச்.எம். அஸ்வர் ஹாஜியார் 35 எனக்கூற, அதை பாராளுமன்றச்செயலாளர் இவர் 25 வயது போல் உள்ளார். மேலவைக்கு நியமிக்க 35 வயதை எட்டியிருக்க வேண்டும். அதனால் இவரது பிறப்பத்தாட்சிப்பத்திரத்தை எடுத்து வாருங்கள் என்று கேட்டதாக ‘மருதமுனை முத்து’ என்ற நூலில் அஸ்வர் ஹாஜியார் கூறுகிறார். அவ்வாறாயின் இவரது இளமையின் வடிவு எத்தகையது என்பது புலனாகிறது. இப்பதவி மூலம் எஸ்.ஜே.வி.செல்வநாயகம், அமிர்தலிங்கம் போன்ற தமிழ் தலைவர்களோடு தோளோடு தோள் நின்று சிறுபான்மையினருக்காக குரல் கொடுத்து தமிழ் - முஸ்லிம் உறவுப் பாலமாகத் திகழ்ந்தார்.

அழகு தமிழ் பேசும் இவருக்கு இந்தியாவில் தமிழகத்தில் ‘நாவலர்’ பட்டம் கொடுத்து கௌரவித்தது. தமது கிராமத்தை பற்றி பேசும் போது, “தனது ஊரில் இஸ்லாமியக்கலாசாரங்களும், பள்ளிவாசல்களும் நிரம்பப்பெற்றிருப்பதால் “மக்கத்துக்கு போகாவிட்டாலும் மருதமுனைக்கு செல்லுங்கள்” என்றும் கிழக்கு இலங்கையின் தமிழ் முஸ்லிம் உறவை எடுத்துக்காட்ட “ஏறாவூரிலிருந்து பாணம வரை தமிழ் முஸ்லிம் இனத்தவர்கள் பிட்டும் தேங்காய்ப்பூவும் போன்று வாழ்கின்றனர்” என்றும் “நான் மதத்தால் முஸ்லிம் இனத்தால் தமிழன்” என இடித்துரைப்பார். “இன்பத்தமிழ் என் மொழி இஸ்லாம் என் வழி” என தமிழரசு கட்சி மேடையில் முழங்கிடுவார்.

இலங்கைத்தமிழரசுக்கட்சி உறுப்பினராக இருந்து பல்வேறு போராட்டங்களில் பங்கெடுத்த இவர், 1960 களில் தனிச்சிங்கள சட்டத்தை எதிர்த்து நடாத்தப்பட்ட போராட்டங்களில் உறுப்பினர்களோடு இணைந்து போராடி சிறை சென்றார். கொழும்பு - காலி முகத்திடலில் நடைபெற்ற சத்தியாக்கிரகப் போராட்டம் வெறியாட்டமாக மூண்டதால் வெறியர்களால் பேரையாற்றில் தூக்கி வீசப்பட்ட அவர், படுகாயங்களுடன் உயிர்தப்பியமை விஷேட நிகழ்வாகும்.

1962இல் கொழும்பு ஸாஹிராக் கல்லூரியில் ஆளுனர் சபை ஒழுங்கு செய்திருந்த இலங்கைப்பாடசாலைகளை தேசிய மயப்படுத்தும் அரச கொள்கைக்கு எதிரான முக்கிய பிரமுகர்கள் கூட்டத்தில் மசூர் மௌலானா ஆற்றிய பெரும் உரை எல்லோரையும் ஈர்த்தது மட்டுமல்ல, ஒரு முக்கிய போராளியாகவும்திகழ்ந்தார் என முன்னாள் தென் கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் பேராசிரியர் ஏ.ஜீ ஹுசைன் இஸ்மாயீல் குறிப்பிடுகின்றார்.

கல்முனைத்தொகுதியில் 1960, 1965, 1968 ஆண்டுகளில் 3 தடவை பொதுத்தேர்தலில் போட்டியிட்டார். இத்தேர்தல்களில் 1960இல் - 212 வாக்குகளாலும்,1965இல் - 495 வாக்குகளாலும், 1968இல் - 1254 வாக்குகளாலும் தோல்வியுற்றார். பின்னைய காலத்தில் அம்பாறை மாவட்ட பாராளுமன்றத் தேர்தலில் தமிழ், முஸ்லிம், சிங்கள வேட்பாளர் பலர் பாராளுமன்றம் செல்வதற்கும், அமைச்சர்கள் ஆவதற்கும் ஏணிப்படியாக நின்று உழைத்தார். 

இதனை ஆதாரப்படுத்துவதற்கு ஏ.ஆர்.மன்சூருக்கு மருதமுனையில் வெளியிடப்பட்ட ‘விருட்சம்’ (2013) எனும் நூலுக்கு எஸ். இஸட்.எம். மசூர்மௌலானா வழங்கிய ஆசிச்செய்தியில், “1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஜ.தே.க. சார்பில் கல்முனைத்தொகுதியில் போட்டியிட்டு முதன்முறையாக ஏ.ஆர். மன்சூர் பாராளுமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றதில் நானும், எனது மருதமுனை மண்ணும் நூற்றுக்கு நூறு வீத பங்களிப்பு செய்து சரித்திரம் படைத்துள்ளோம். அன்று ஜக்கிய தேசியக் கட்சியின் வெற்றிக்காக ஜே.ஆர். ஜெயவர்தன, ஆர். பிரேமதாச போன்றோருடன் நாடு முழுவதும் சென்று நான் சூறாவளிப்பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த போதிலும் கூட மன்சூரின் வெற்றிக்காக என்னை நேசித்து எனது தலைமைத்துவத்தை ஏற்றிருந்த நமது மருதமுனை மக்களையும் கல்முனை, பாண்டிருப்பு, பெரிய நீலாவணை போன்ற கிராமங்களின் தமிழ் மக்களையும் ஓர் அணியில் திரட்டி ஆதரவளிக்கச்செய்து கடின உழைப்புடன் விசேடமான பங்களிப்பை வழங்கியிருந்தேன் என்பதை வரலாறு என்றும் நினைவு கூரும்!” என்று கூறியுள்ளார்.

1970 களில் ஜக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்த மௌலானா, 1990 வரை இரண்டு தசாப்த காலம் பணியாற்றி தேசிய அரசியலில் இடம் பிடித்தார். 1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்வி அடைந்த ஏ.ஆர். மன்சூர், மசூர் மௌலானா ஜக்கிய தேசிய கட்சியை தழுவிய பின்னர் 1977இல் மௌலானாவின் ஆதரவுடன், மருதமுனை வாக்குகளுடன் வெற்றி பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அதன் மூலம் மருதமுனைக்கு மன்சூரின் உதவியுடன் நல்ல பல சேவைகள் செய்தார். அவ்வாறே அம்பாறை மாவட்ட முன்னாள் அமைச்சர் பீ. தயாரட்னாவுடனும் தேர்தலில் முன்னின்று உழைத்து அவரையும் வெற்றியடையச்செய்து அதன் மூலமும் மருதமுனைக்கு நல்ல பல சேவைகள் செய்தார்.

1960 இல் அகில இலங்கை முஸ்லிம் லீக்கின் தலைவர் டாக்டர் எம்.சீ.எம். கலீலிடம் ஏ.எச்.எம். அஸ்வருடன் இணைந்து அங்கத்துவம் பெற்று அதில் துணைச்செயலர் பதவி பெற்றார். மறைந்த ஜே.ஆர். ஜெயவர்தனா ஜனாதிபதியாக இருந்த பொழுது மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தில் நடந்தேறிய அகில இலங்கை முஸ்லிம் லீக் மா நாட்டுக்கு பிரதம அதிதியாக வருகை தந்து உரையாற்றிய பொழுது முதன் முதலில் அவரது உரையை தமிழாக்கம் செய்து ஜே.ஆர் இன் உன்னத தோழனானார். தொடர்ந்து மறைந்த முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாசவுடன் இணைந்து அவரது உரைகளை மொழிபெயர்ப்புப் செய்து உற்ற நண்பனாக மாறினார். இதனால் மௌலானா ஒரு பாராளுமன்ற உறுப்பினராக இல்லாவிடினும் அமைச்சர் ஒருவர் போன்று மருதமுனைக்கு சேவைகள் செய்தார். 

இவ்வாறு சிங்கள ஆட்சி தலைவர்களுடன் வைத்திருந்த மௌலானாவின் உண்மை உறவு முஸ்லிம் மக்களுக்கு சிங்கள மக்களுடன் உறவை ஏற்படுத்தியது. இதன் மூலம் கல்வி அபிவிருத்தி, வீட்டுத்திட்டம் (40), அக்பர் கிராம வீட்டுத்திட்டம் (100), வீதிகள், பொது நூலகம், மின்சாரம், நெசவு, கடல் மீன்பிடி அபிவிருத்தி, பள்ளிவாசல் அபிவிருத்தி, சமாதான நீதவான்கள் நியமனம், கோட்டா முறையில் வேலைவாய்ப்பு, பாடசாலைகள் தரமுயர்வு என்பன முன்னேற்றப்பட்டன. 

இத்தகைய நல்ல பல சேவைகள் மூலம் மருதமுனை பொது அமைப்புக்கள் ஒன்று சேர்ந்து அவரினால் ஏற்பட்ட அபிவிருத்திகள் சிலவற்றிற்கு மசூர்மௌலானா வீட்டுத்திட்டம் என்றும், மசூர் மௌலானா வீதி எனவும், மசூர் மௌலானா விளையாட்டுத்தொகுதி எனவும் பெயரிட்டு இன்று வரை மசூர் மௌலானாவின் பெயர் மக்களால் பேணிப்பாதுகாக்கப்பட்டு வருகிறது.குறிப்பாக 1972க்கு முன் இருளிலிருந்த மருதமுனைக்கு கல்முனைப்பிரதேசத்தில் ஏனைய கிராமங்களுக்கு மின்சாரம் கிடைப்பதற்கு முதல் மின்சாரத்தை கொண்டு வந்தார்.

1966ஆம் ஆண்டு மருதமுனை மக்கள் ஆதரவுடன் 1974வரை கரவாகு வடக்கு கிராம சபையின் தலைவராக தெரிவு செய்யப்பட்டார். மட்டுமல்லாது அம்பாறை மாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் சம்மேளனம் ஒன்றை அமைத்து அதன் தலைமையை ஏற்று மாவட்டத்தை வழிநடாத்தி நிருவாகம் செய்தார். 

இப்பதவி மூலம் இருளிலிருந்த மருதமுனைக்கு மின்சாரம், அம்பாறை மாவட்டத்தில் முதலாவது தெரு விளக்கு, பொது நூலகம், வாளி மலசலகூடத்துக்கு பதிலாக நீரடைப்பு மலசலகூடம், வீட்டு கட்டுமான சட்டதிட்டம், மணல் நிறைந்த பாதைகளை கிறவல் வீதிகளாக மாற்றியமைத்தமை, வறிய மாணவர்களுக்கு கல்வி புலமைப்பரிசில், மீன் பிடிப்பதற்கான கடல் எல்லைகள் என்பன போன்ற சேவைகள் கிராம சபையின் தலைவராக இருந்து இவர் ஆற்றிய அளப்பெரிய சேவையாகும். 1974ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்த ஸ்ரீமாவோ ஆட்சியில் உள்ளூராட்சி அமைச்சராக இருந்த பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்க என்பவரால் சகல கிராம சபைகளும் கலைக்கப்பட்டன. அதனால் மௌலானா பதவி இழந்தார்.

முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகள் பற்றி காலத்துக்குக்காலம் ஆராய்ந்து தீர்வு காணும் நோக்கத்துடன் 1964இல் தோற்றம் பெற்ற அகில இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டை அதன் ஸ்தாபகர் கொழும்பு ஸாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர் எஸ்.எல்.எம். ஷாபி மரிக்கார், ரீ.பி. ஜாயாவின் மகன் ரீ.ஏ. ஜாயா, முன்னாள் அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் போன்றவர்களுடன் இரண்டறக்கலந்து முஸ்லிம்களின் கல்வி பிரச்சினைகளைப்பற்றி ஆராய்ந்து தீர்வு காணும் நோக்கத்துடன் அரசியல் தலைவர்களுக்கு அழுத்தங்களைக் கொடுத்தார். 

இது பற்றி தென்கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர், பேராசிரியர் ஏ.ஜீ. ஹுசைன் இஸ்மாயீல் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “இலங்கை முஸ்லிம் கல்வி மாநாட்டு அங்கத்தவர்கள் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த போது, மசூர்மௌலானா தென்கிழக்கு பல்கலைக்கழகத்தை முழு வளர்ச்சியும் சகல வசதிகளும் கொண்டதொன்றாக கட்டியெழுப்புவதற்கு ஆவண புரியுமாறு பணிவுடன் ஜனாதிபதியை வேண்டிக்கொண்டார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகளின் சங்கம் (வை.எம்.எம்.ஏ) வளர்ச்சியில் கைகொடுத்த இவர், அதன் ஸ்தாபகர் எம்.ஏ. பாகீர் மாக்காருடன் இணைந்து முஸ்லிம் வாலிபர்களுக்கு அரசியல் சிந்தனையுடன் செயற்படக்கூடிய உந்து சக்தி சிந்தனைகளை மசூர்மௌலானா புகட்டி வந்தார்.அவ்வியக்கத்தினால் ஆண்டு தோறும் நடைபெற்ற மீலாத் விழாவில் மௌலானா மாணவர்களை எதிர்கால சவால்களை எதிர்கொள்வது பற்றி உரையாற்றுவார்.

1960ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் எம்.எஸ் காரியப்பருடன் மசூர் மௌலானாவும் போட்டியிட்டு தோல்வியுற்றார். அப்போது கல்முனைத்தொகுதி தமிழ் மக்கள் மௌலானாவுக்கே வாக்களித்தனர். 1960 இல் எம்.சி. அகமதுக்கு தமிழரசு கட்சி சர்பாக போட்டியிட விட்டுக்கொடுத்து மௌலானாவின் வேண்டுகோளை ஏற்று மருதமுனை வாக்காளர்கள் எம்.சி அகமதுக்கு வாக்களித்து வெற்றி பெறச்செய்தார்கள். அதேபோல் 1970 இலும் எம்.சி. அகமதே பாராளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1970ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் தோல்வியடைந்த ஏ.ஆர்.மன்சூர், 1977ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் மௌலானாவின் ஆதரவுடன் மருதமுனை வாக்குகளையும் பெற்று பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டார். அக்காலத்தில் வர்த்தக வாணிபத்துறை அமைச்சராக இருந்த ஏ.ஆர். மன்சூரோடு துணையாக இருந்தும் மருதமுனைக்கு மௌலானா கல்வி, சமூக, ஆன்மீக பணிசெய்தார்.

1978ஆம் ஆண்டு பெரும் சூறாவளிக்குப் பின்னரான காலப்பகுதியில் மருதமுனையில் நடாந்த கல்விப்புரட்சி உயர் கல்விப்பெறுபேறுகளிலும் பல்கலைக்கழக அனுமதியிலும் அரச உயர் பதவிகளிலும் இளைஞர்கள் வருவதற்கும் அது வழி செய்தது. இன்று எமது ஊரில் வைத்தியர்கள், பொறியியலாளர்கள், சட்டத்தரணிகள், அமைச்சின் செயலாளர்கள், உயர் நீதிமன்ற நீதிபதிகள், முகாமையாளர்கள், விரிவுரையாளர்கள், பட்டதாரிகள், ஆசிரியர்கள், தாதிமார்கள் என பட்டியலிடலாம்.

 இதற்கெல்லாம் பின்னணி மசூர்மௌலானா கல்வி எனும் மண்வெட்டி கொண்டு மருதமுனை மண்ணினை மிக ஆரம்ப காலத்திலே வளமாக பண்படுத்தியமை ஆகும். அதனை இஸ்லாம் ‘இமாரத்’ எனும் சமயக்கடமையாக குறிப்பிடுகிறது. 1972ஆம் ஆண்டு கல்விஅமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூதின் கிழக்கு மாகாண விஜயமும், அல் - மனாரின் பதியுதீன் மண்டபமும் இதற்குச் சான்றாகும். 1973இல் கல்வி அமைச்சராக இருந்த பதியுதீன் மஹ்மூதை மருதமுனையின் அபிவிருத்திக்கு கல்முனை பாராளுமன்ற பிரதிநிதித்துவம் தடுத்த போதிலும் பதயுதீன் மஹ்மூதோடு இணைந்து மருதமுனை கல்வி அபிவிருத்தியில் இணைந்து அதீத ஈடுபாடு காட்டினார்.

1983ஆம் ஆண்டு ஆயுதப்போராட்டத்துக்கு மத்தியில் பிரதர் ஆர்.பிரேமதாசவை மருதமுனைக்கு அழைத்த வந்து, அரை நாள் மருதமுனையில் தங்கவைத்து, மசூர்மௌலானா வீட்டுத்திட்டத்தை திறந்து வைத்தார். 1977இல் பொதுத்தேர்தலில் ஜக்கிய தேசிய கட்சியின் மேடைகளில் மக்களை கவர்ந்து இழுக்கும் ஒரு பீரங்கிப் பேச்சாளராக இருந்தார். அவரது பேச்சில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் என்பன கலந்திருக்கும் இதனால் நாடு முழுவதும் பிரபல்யமானார்.

டட்லி சேனாநயக்க அரசில் தொழில் வாய்ப்பு, வீடமைப்பு அமைச்சராக பதவி வகித்த காலத்தில் எம்.எச். முஹம்மத் ஆரம்பித்த முஸ்லிம் ஜக்கிய முன்னணியில் மறைந்த ஏ.எச்.எம். அஸ்வருடன் இணைந்து மசூர் மௌலானா இணை, துணைச்செயலாளராகச் செயற்பட்டார். 1991ஆம் ஆண்டு மக்கா சென்ற அவர், 1994 இல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸோடு இணைந்தார். 1989இல் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்றத்தேர்தலுக்கு முகங்கொடுத்த போது, மசூர்மௌலானாவின் ஆதரவு அப்போது கிடைக்கவில்லை. அதனால் அம்பாறை மாவட்ட 3 பிரதிநிதிகளில் 1ஐ மாத்திரம் பெற்று இரண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை எம்.எச்.எம். அஷ்ரப் இழந்தார். பின்னர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் மௌலானாவின் ஆதரவைப்பெற்று, இழந்த அம்பாறை மாவட்ட 02 பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தை வென்று 3 ஆக மாற்றினார். 

இதன் மூலம் முஸ்லிம் காங்கிரஸின் மேலதிக கொள்கை பரப்பு செயலாளராகவும், உயர் பீட உறுப்பினராகவும் பதவி வகித்தது மட்டுமல்லாது முக்கிய அரச நிறுவனங்களில் உயர் பதவிகளையும் வகித்தார். இதனால் அம்பாறை மாவட்ட முஸ்லிம்களால் பெரிதும் மதிக்கப்பட்டார். 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை ஒப்பந்தத்தினால் உருவான வடகிழக்கு மாகாண சபையில் ஐக்கிய தேசிய கட்சியின் சார்பில் உறுப்பினராக மசூர் மௌலானா கடமையாற்றி தமிழ் முஸ்லிம் உறவுக்கும், இனப்பிரச்சினைத்தீர்வுக்கும் குரல் கொடுத்தார்.

மறைந்த அமைச்சர் எம்.எச்.எம். அஷ்ரபின் தொடர்ந்து வந்த காலம் முதல் மரணிக்கும் வரை முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அமைச்சர் றவூப் ஹக்கீமுடன் இணக்கமாக செயற்பட்டார். அதன் மூலம் 2006ஆம் ஆண்டு கல்முனை நகர சபைத்தேர்தலில் மருதமுனை மக்களின் ஆதரவுடன் வெற்றி பெற்று, பிரதி மேயர், மேயர்(முதல்வர்) பதவிகளைப் பெற்று கல்முனை நகர சபை ஆளுகைக்கு உட்பட தமிழ், முஸ்லிம் பிரதேசங்களுக்கெல்லாம் தன்னால் முடிந்த அபிவிருத்தி திட்டங்களை அமுல்படுத்தினார். குறிப்பாக கல்முனை நகர சபையினால் பன்னெடுங்காலமாக திறைசேரி மூலம் பல முதல்வர்கள் இருந்தும் பெறாமல் இருந்த பல மில்லியன் ரூபா முத்திரை வரியினை நாட்டின் அரசியல் தலைவர்களோடு பேசி பெற்றுக்கொடுத்தார்.

மருதமுனையின் உயர் கல்வி எழுச்சிக்கு ஓங்கிக் குரல் கொடுத்து அதற்காக செயற்பட்டு அம்பாறை மாவட்டத்தில் மருதமுனையை முன்னணிக்கு கொண்டு வந்தார். அதன் மூலம் உயர் பதவிகளுடன் இலங்கையின் பல பாகங்களிலும் மருதமுனை அரச ஊழியர்களாக பணியாற்றுவதற்கு வித்திட்டார். அதுபோல மருதமுனையின் நெசவுத்தொழிலுக்கு புத்துயிரூட்டி அரச மானியம் பெற்றுக்கொடுத்து, பொருளாதாரத்தை உயர்த்தி செல்வந்தர்கள் உருவாக வழிவகுத்தார். வர்த்தக கோட்டாக்களையும் அறிமுகம் செய்து மருதமுனையை வர்த்த நகராக்கினார்.

தமிழ்மொழி, ஆங்கிலம், இஸ்லாமிய இலக்கியம், சிங்களம் என்பவற்றில் ஆர்வம் கொண்ட இவர், இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகியநாடுகளில் இடம்பெற்ற தமிழாராய்ச்சி மாநாடு, இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாடு என்பவற்றில் விசேட பிரமுகர்களில் ஒருவராக கலந்து கொண்டு இலங்கை மண்ணின் மணத்தை எல்லோரையும் முகரச்செய்து மருதமுனையையும் பிரபல்யப்படுத்தினார். இதனால் கவிஞர், இலக்கியவாதி, இலக்கிய எழுத்தாளர் என மதிப்பு பெற்றார். 1966ஆம் ஆண்டில் மருதமுனை அல் - மனார் மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற முதலாம் இஸ்லாமிய தமிழாராய்ச்சி மாநாட்டை நடாத்துவதில் எஸ்.ஏ.ஆர்.எம். ஸெய்யித் ஹசன் மௌலானாவுடன் உழைத்தார். பல அரபு நாடுகளுக்கும், மேற்குலக நாடுகளுக்கும் பயணங்கள் பல மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமூகசேவைகள் செய்வதற்கான மென்திறன்கள் (ண்ணிஞூt ண்டுடிடூடூண்) இயல்பாகவே இவருள் இருந்தது. கோபமாக பேசிக் கடிந்து கொள்ளாத அன்பான மனிதர், பிறரை நேசிக்கும் பண்பு, மற்றவர்களை உயர்த்தி மதிக்கும் உன்னத குணம், தன்னலம் கருதாது பிறருக்கு சேவை செய்யும் மனப்பாங்கு, நிதானமான போக்கு, அமைதி, இசைவுறுதல், சுத்தம், நேர்த்தி, கம்பீரமான, அழகான ஆடை, மனவெழுச்சி நுண்மதி என்பன அவரது பன்முக ஆளுமையை நிரூபித்த விடயங்களாகும். இதனால்தான் அவர் பாராளுமன்றம் செல்லாது அவர் ஏணியாக இருந்து மற்றோர் பலர் பாராளுமன்றம் செல்ல தனது பீரங்கப்பேச்சு மூலமும், மருதமுனை வாக்கு மூலமும் உதவினார். 

ஒரு வேலைத்திட்டம் தாமதாகும் போது அவற்றை தொடர் மேற்பார்வை செய்து தனி நபருக்கும், நிறுவனத்துக்கும் விழிப்புணர்வு செய்வதில் வல்லவர். இவரது தமிழ், முஸ்லிம் உறவின் பயனாக சென்னை இந்திய தூதுவர் ஆலய முதல் செயலாளர் பதவியையும் பெற்றார். மருதமுனை கரைவாகு வடக்கு கிராம சபையின் தலைவர் முதல் கல்முனை முதல்வர் வரை அரச அதிகாரங்களை பெற்றிருந்த போதிலும் அவர் அரசியலில் நுழைந்த 17 வயது முதல் மரணித்த 83 வயது வரை ஒரு பாராளுமன்ற உறுப்பினர் ஆக வேண்டுமென்று நினைத்தார். அதற்காக ஐ.தே.க., ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் என்பவற்றோடு கைகோர்த்தும் அது அவருக்கு நிறைவேறவில்லை. அது தீராத மனக்குறையாகவே இருந்தது. இதுபற்றி மேடைகளில் பின்வருமாறு பேசுவார். 

“பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இறைவன் நாடினால் வேலியை பிய்த்துக்கொண்டு தருவான் என எல்லோரும் என்னிடம் கூறுகின்றனர். நானோ வீட்டின் கூரையின் ஓட்டினை கழட்டி காத்துக்கொண்டிருக்கிறேன்” இவ்வாறு சுமார் 25 வருட காலமாக தனது மன வருத்தத்தை அரசியல் தலைவர்களிடம் கூறி வந்திருக்கிறார்.

மசூர் மௌலானா பற்றி பேராதனைப் பல்கலைக்கழக பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ்(2017) பின்வருமறு பேசுகிறார். “மசூர் மௌலானா பழுத்த அரசியல்வாதி, கிழக்கு மாகாணத்தில் தேசிய அரசியலில் தனக்கென்ற இடத்தை பிடித்த அரசியல் தலைவர். செனட்டர் பதவி தேசிய அளவில் புகழைத்தந்திருந்த போதிலும் அவரது பேச்சாற்றல்தான் அவரது அரசியல் மற்றும் சமூக நடவடிக்கைகளின் உயிர் நாடியாக இருந்தது. 

தமிழுக்கு சம அந்தஸ்து தரப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்காக 1956.01.21இல் புத்தள இளைஞர் இயக்கம் சிங்கள மொழிச்சட்டத்தை எதிர்த்துப்பேசுவதற்காக மசூர்மௌலானா, டி.பி ஜாயா, ஏ.எம்.ஏ அஸீஸ், சேர். ராஸீக் பரித் உட்பட 20 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு, அன்று புத்தளத்தில் மசூர்மௌலானா ஆற்றிய உரைதான் புத்தள முஸ்லிம்களினதும், தமிழ் பேசும் மக்களினதும் ஒருமைப்பாடு சிதறடிக்கப்படாது வெற்றி பெற்றது என பாராட்டுகின்றார்.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்மந்தன்(2017) குறிப்பொன்றில் பின்வருமாறு கூறுகிறார். “மசூர் மௌலானா, ஒரு நீண்ட கால அரசியல் வரலாற்றுக்கு உரித்துடையவர். தமிழரசுக்கட்சி ஆரம்பித்த காலந்தொட்டு தமிழ், முஸ்லிம் மக்களுடைய உரிமைகளுக்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்து செயற்பட்டவர் என்பதில் எவ்வித சந்தேகத்துக்கும் இடமில்லை”

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் (2017) இவர் பற்றிய குறிப்பொன்றில், “மசூர்மௌலானா மருதமுனைக்கோ, அம்பாறை மாவட்டத்திற்கோ, கிழக்கு மாகாணத்திற்கோ மட்டும் உரிய சொத்து அல்ல இலங்கை வாழ் முஸ்லிம்களுக்கும் உரிய முதுசம்”

ஓய்வு பெற்ற நீதியரசர் சீ.வி. விக்னேஸ்வரன் (2016) பின்வருமாறு குறிப்பிடுகிறார். “உணர்ச்சிமிக்க இளைஞன், அரசியலில் முழுக்கவனம் செலுத்தியபடியால் மசூர் சட்டப்படிப்பை இடை நிறுத்தினார். இல்லையென்றால் அவர் ஒரு சட்டத்தரணியாக உலவி வந்திருப்பார்”

தமிழர் விடுதலை கூட்டணியின் தலைவர் வீ. ஆனந்த சங்கரி (2017) அவருக்கு எழுதிய வாழ்த்துரையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார். “தமிழர்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையில் இரு சமூகங்ளையும் இணைக்கும் பாலமாக செயற்பட்டார். தமிழரசுக்கட்சியின் பிரசாரப்பீரங்கி எனப் பெயர் பெற்றார். தமிழ், இஸ்லாமிய மக்கள் ஒன்றுபட்டு செயற்பட வேண்டுமென்று வலியுறுத்தினார். தந்தை செல்வாவோடு மட்டுமல்ல, தலைவர் அமிர்தலிங்கம், அமரர் சிவசிதம்பரம் போன்ற பெரும் தலைவர்களுடன் அவர்கள் மறையும் வரை மிக நெருங்கிய தொடர்புகளை வைத்திருந்த போது இனப்பிரச்சினைத்தீர்வுக்கு அவ்வப்போது நல்ல ஆலோசனைகளையும் வழங்கி வந்தவர் மசூர்மௌலானா”

பேரியல் இஸ்மாயீல் அஷ்ரப் (2017) பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார். “தேசிய ஜக்கிய முன்னணியின் ஸ்தாபகத்தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபுடன் மசூர் மௌலானா மிக நெருங்கிச்செயற்பட்டார். தமிழ், முஸ்லிம் நல்லுறவு தொடர்பான அவரது அரசியல் அனுபவங்களை தலைவர் அஷ்ரப் மசூர் மௌலானாவிடமிருந்து அறிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்.

இவரது ஆளுமைப்பண்புகள் தற்காலத்தில் இவரது பிள்ளைகளிடமும் சமூகசேவை, ஆன்மீக செயற்பாடு என்றவாறாக சிறந்து விளங்குகிறது. மேலும் இவரது ஆளுமைப்பண்புகளையும், ஆளுமை விருத்தி நிகழ்ந்த விதத்தினையும் இன்றைய இளைய தலைமுறையினரான பாடசாலை மாணவர்களுக்கு இணைப்பாடவிதானத்தில் கற்பிப்பதற்கு நிறையவே உள்ளது. மேற்கூறிய நல்ல பல சேவைகள் செய்த மௌலானாவுக்கு பாராளுமன்றத்தில் இடம் கிடைத்திருந்தால் முழு நாடும் பயன் பெற்றிருக்கும். ஏனென்றால், அவர் தமிழ், முஸ்லிம் மக்களால் மட்டுமல்ல சிங்கள மக்களாலும் நன்கு அறியப்பட்டு மதிக்கப்பட்டார். இவர் மரணித்து 04 வருடம் பூர்த்தியாகும் இத்தினத்தில் இவருக்கு மேலான சுவர்க்கம் கிடைக்க வேண்டுமென பிரார்த்திப்பதோடு, அவரது துயரினால் துன்புறும் மனைவி புஸ்ரதுன் நயிமா, அவரது அருமை பிள்ளைகளான பாத்திமா யஸ்மின், அக்ரம் மௌலானா, சியாம் மௌலானா, இல்ஹாம் மௌலானா, மபாஹிர் மௌலானா, நௌசாத் மௌலானா என்போரின் உள நலனுக்காகவும் பிரார்த்திக்கின்றேன்.

ஏ.ஜே.எல். வஸீல்
விரிவுரையாளர்
தேசிய கல்வியல் கல்லூரி
அட்டாளைச்சேனை




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -