கெளரவ காதர் மஸ்தான் எம்.பி.
இலங்கையின் 7வது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபாய ராஜபக்ஷ அவர்களை தெரிவு செய்வதற்காக இரவு பகலாக எம்மோடு இணைந்து பணியாற்றிய எமது விசுவாசிகளுக்கும் எமது ஆதரவாளர்களுக்கும் எனது இதயயபூர்வமான நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் புனர்வாழ்வு மீள் குடியேற்றம் வடக்கு அபிவிருத்தி முன்னாள் பிரதி அமைச்சருமான கெளரவ காதர் மஸ்தான் அவர்கள் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது.
ஜனநாயக ரீதியாக இலங்கையின் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபாய ராஜபக்ச அவர்களுக்கு எனதும் எனது மக்களது சார்பிலும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
நடைபெற்ற இந்த தேர்தலில் மக்கள் தெளிவாக வாக்களித்துள்ளனர். நாட்டின் பொருளாதாரம், உறுதிப்பாடு,ஊழலற்ற நிர்வாகம் என்பனவற்றுக்காக ஆதரவாக மக்கள் தமது தெளிவான தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
இந்த உயரிய பணியில் என்னோடு ஒத்துழைப்பு நல்கிய அனைத்து வன்னி மாவட்ட மக்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்.
மேலும் எம்மைக் கடந்து சென்ற தேர்தல் கால கசப்புணர்வுகளை மறந்து அனைவரும் இலங்கையர்கள் எனும் உயரிய நோக்கோடு எமது தேசத்தினை கட்டியெழுப்ப நாம் ஒன்றிணைந்து செயற்பட அனைவருக்கும் தனது அன்பான அழைப்பை விடுப்பதாகவும் அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.