நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தேசிய ரீதியாக நாம் ஆதரவளித்த புதிய ஜனநாயக முன்னணியின ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச பின்னடைவைக் கண்டபோதும் தொழிலாளர் தேசிய சங்கம் தொழிலாளர் தேசிய முன்னணி உடன் இணைந்து தமிழ் முற்போக்கு கூட்டணி யாக நுவரலியா மாவட்டத்திலும் ஏனைய மலையக மாவட்டங்களில் பல தொகுதிகளையும் அன்னம் சின்னத்தின் வெற்றிக்காக உழைத்த அனைவருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கின்றோம் என மலைநாட்டு புதிய கிராமங்கள் உள்கட்டமைப்பு சமுதாய அபிவிருத்தி அமைச்சின் தலைமையிலான தொழிலாளர் தேசிய சங்கம் தொழிலாளர் தேசிய முன்னணி சார்பில் விடுக்கப்பட்டு இருக்கும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்றுள்ள கொட்டபய ராஜபக்ஷ வுக்கு எமது அமைப்பின் சார்பாக வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம். அதேநேரம்
மலையக அரசியல் வரலாற்றில் மாற்று அணியாக உருவெடுத்துள்ள தொழிலாளர் தேசிய முன்னணி தனித்தும் கூட்டணியாகவும் மலையக அரசியல் கலாசார மாற்றம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளமையை தேர்தல் பெறுபேறுகளின் ஊடாக வெளிப்படுத்தி உள்ளது.
மலையகத்துக்கு தேவையான அரசியல் மாற்றத்தை வேண்டி நின்ற மக்களுக்கு தலைமை கொடுத்து கடந்த 2010, 2015, 2019 ஆகிய மூன்று ஜனாதிபதி தேர்தல்களிலும் தேசிய நிலை எது வான போதும் மலையக நிலையில் எமது அணியை வெற்றி பெறச் செய்துள்ளோம். கடந்த தேர்தலில் தேசிய ரீதியாகவும் வெற்றி பெற்றதன் காரணமாக அமைச்சு பதவிகளையும் பெற்று அபிவிருத்தி பணிகளின் செல்நெறியை தீர்மானித்ததோடு பாராளுமன்ற பதவிக்காலத்தையும் உரிய முறையில் உரிமை சார் விடயங்களை முன்வைத்து வெற்றி பெற்றுள்ளோம். இப்போது இடம்பெற்று முடிந்திருப்பது ஜனாதிபதி தேர்தல்தானே தவிர எதிர்வரும் பாராளுமன்ற, மாகாண சபை தேர்தல்களில் மீண்டும் எமது இதே பலத்தை நிரூபித்து எமது அரசியல் பயணத்தை தொடர்வோம் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.