கிழக்கு மாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளராக அண்மையில் நியமிக்கப்பட்ட கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் எ.அலாவுதீன் மீண்டும் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளராக 17) வியாழன் முதல் பதவியேற்றுள்ளார்.
கிழக்கு மாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளர் டாக்டர் எஸ்.அருள்குமரன் இந்த உத்தரவுக்கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார்.
அவருக்கு ஏலவே வழங்கப்பட்ட மாகாண சுகாதாரப்பணிப்பாளர் நியமனத்தை ஜனாதிபதித்தேர்தல் முடியும்வரை ரத்துச்செய்வதாகவும் அவர் முன்னர் கடமையாற்றிய பதவியை தொடர்ந்து வகிக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அதற்கமைய டாக்டர் ஏ.அலாவுதின் மீண்டும் (17)வியாழன் மாலை கல்முனையில் பதவியேற்றுள்ளார்.
தேர்தல் முடிந்ததும் மீண்டும் அவர் கிழக்கு மாகாண சுகாதாரசேவைப்பணிப்பாளராக நியமிக்கப்படுவாரென தெரியவருகிறது.
இதேபோன்று அங்கு பதில் கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளராக அண்மையில் நியமனம்பெற்ற டாக்டர் ஜி.சுகுணனின் நியமனத்தை தேர்தல்முடியும்வரை ரத்துச்செய்யப்பட்டு முன்னர்வகித்த பிரதி கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளராக கடமையாற்றுமாறு கேட்கப்பட்டுள்ளார்.
அதன்படி தற்போது கல்முனைப்பிராந்திய சுகாதாரசேவைப்பணிப்பாளராக டாக்டர் அலாவுதீனும்
கல்முனைப்பிராந்திய பிரதி சுகாதாரசேவைப்பணிப்பாளராக டாக்டர் ஜி.சுகுணனும் பதவியேற்று இயங்கிவருகின்றனர்.
தேர்தல் காலத்தில் திட்டமிட்டு இந்நியமனங்கள் நடந்தகாரணத்தினால் அரசமருத்துவ உத்தியோகத்தர்கள் சங்கம் மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழு போன்றவற்றின் தலையீட்டினால் இவை ரத்தாயிருப்பதாகத் தெரியவருகிறது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அக்கரைப்பற்று வைத்தியசாலைப் பணிப்பாளர் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் நியமனங்கள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சுகாதார போசணை மற்றும் சுதேசவைத்திய அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜெயசிங்கவினால் இரத்துச் செய்யப்பட்டிருந்தமை தெரிந்ததே.
மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஜீ.சுகுணனும் அக்கரைப்பற்து வைத்தியசாலைப் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஐ. எம்.ஜவாஹீரும் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளராக வைத்திய கலாநிதி ஆர்.ஷகீலா இஸடீனும் நியமனம் வழங்கப்பட்டு கடந்த புதன்கிழமை (16.10.2019)பதவியேற்று பின்னர் மறுநாள் (17) வியாழக்கிழமை மீண்டும் அவர்களது பழைய இடங்களில் பதவியேற்றமையும் தெரிந்ததே.
ஆனால் இவர்கள் மூவரது புதிய நியமனங்கள் தொடர்பான சுகாதார போசணை மற்றும் சுதேசவைத்திய அமைச்சின் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அனில் ஜெயசிங்கவின் ரத்துக்கடிதத்தில் கிழக்கு மாகாணசுகாதாரப் பணிப்பாளரது நியமனம் தொடர்பாகவோ ரத்துதொடர்பாக குறிப்பிடப்பட்டிருக்கவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
இதனை அரசமருத்துவ அதிகாரிகள் சங்கமும் தேர்தல் ஆணைக்குழுவும் கவனத்திற்கொள்ளவேண்டும் என பொதுமக்கள் கேட்டுள்ளர்.
என்னதான் நடக்கிறது ? மக்கள் கேள்வி-
கிழக்கு மாகாணத்தில் அதுவும் சுகாதாரத்துறையில் மட்டும் இவ்வாறு நாளுக்கொரு பணிப்பாளரும் நியமனமும் இடமாற்றமும் தேர்தல் காலத்தில் நடந்துவருவது குறித்து பொது மக்கள் பலவாறு கேள்வியெழுப்புகின்றனர்.
உண்மையில் கிழக்கு சுகாதார நிருவாகத்துறையில் என்னதான் நடக்கிறது ? என்று பொதுமக்கள் விசனத்தோடு கேள்வியெழுப்புகின்றனர்.
கிழக்கில் இன்னும் பல அமைச்சுகள் திணைக்களங்கள் உள்ளன. அங்கு இவ்வாறான தேர்தல் சட்டதிட்டங்களுக்கு மாறாக ஒருவித இடமாற்றமோ நியமனமோ இடம்பெறவில்லை.
இந்தநிலையில் சுகாதாரத்துறையில் மட்டும் இவ்வாறு வேடிக்கைக்குரிய இடமாற்றமும் நியமனங்களும் தொடர்வது குறித்து மக்கள் விசனம் தெரிவிக்கிறார்கள். இதுதொடர்பாக கிழக்குமாகாண சுகாதாரஅமைச்சின் செயலாளர் விளக்கமான கருத்துக்களை பொதுமக்களுக்குத் தெரிவிப்பாரா என அவர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இருந்தபோதிலும் சட்டத்தையும் தேர்தல்கால ஒழுங்கையும் நீதியாக நிலைநாட்டிய
அரசவைத்தியஅதிகாரிகள் சங்கத்திற்கும் தேர்தல் ஆணைக்குழுவிற்கும் மக்கள் நன்றிகளைத்தெரிவிக்கின்றனர்.