பெரும்பான்மைச் சமூகம் விரும்பும் தலைமைக்கு எதிராக முஸ்லிம்கள் செயற்படுவது குறிப்பாக, தென் இலங்கை முஸ்லிம்களின் இருப்புக்களில் தாக்கத்தை ஏற்படுத்துமென்ற பீதியைப் போக்கவே கோட்டாபய ராஜபக்ஷ்வை ஆதரிக்கத் தீர்மானித்தேன்.
இதில் வெற்றி தோல்வியை விட, முஸ்லிம் சமூகத்தின் அச்ச உணர்வைப் போக்குவதற்கே தான் விரும்புவதாகவும், முன்னாள் அமைச்சரும் ஸ்ரீல.சு.க. பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.
முஸ்லிம் அரசியல்வாதிகள் ஒரு பக்கத்தில் இருந்து முஸ்லிம் மக்களைக் காட்டிக்கொடுக்க முடியாது. அதனால், சமூகத்தின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டே கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்கத் தீர்மானித்ததாகவும், பாராளுமன்ற உறுப்பினர் பைஸர் முஸ்தபா சுட்டிக்காட்டினார்.
தமிழ் மொழி மூல ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடல், இராஜகிரியவிலுள்ள அவரது அலுவலகத்தில் (12) வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றபோதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கும்போது, முஸ்லிம் சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தைக் கருத்திற்கொண்டே நான் எப்போதும் அரசியல் தீர்மானங்களை மேற்கொண்டிருக்கின்றேன். எனது சுய நல அரசியலுக்காக ஒருபோதும் செயற்பட்டதில்லை.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு பல்வேறு நெருக்கடிகள் ஏற்பட்டன. அப்போது, அந்த அரசாங்கம் எமது சமூகத்தின் பாதுகாப்பு தொடர்பில் உரிய நடவடிக்கைகளை எடுக்கத் தவறியது. அதனால்தான், கடந்த ஜனாதிபதித் தேர்தலின்போது அந்த அரசாங்கத்தில் இருந்து விலகி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவளிக்க முன்வந்தேன்.
முஸ்லிம் தனிக்கட்சிகள் இருக்கலாம். ஆனால், அவை வடக்கு கிழக்கில் மட்டும் இருப்பதே முஸ்லிம்களுக்கு நல்லது. எங்களது முஸ்லிம் மக்களின் வாக்குகளைப் பெற்ற முஸ்லிம் கட்சிகள் பேரம் பேசுகின்றார்கள். அவை எது சம்பந்தமான பேரம் என்பதை மக்கள் அறிவர். இவர்கள், தமக்கான அமைச்சுப் பதவிகளையே பேரம் பேசுகின்றனர்.
ஒரு ஜனாதிபதி வென்றால், நம்மால்தான் அந்த ஜனாதிபதி வென்றார் என முஸ்லிம் கட்சிகள் கூப்பாடு போடுவதால், இவை சிங்கள மக்கள் மத்தியில் துவேஷத்தை ஏற்படுத்தி விட்டன.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கு ஆதரவளிக்க எடுத்த தீர்மானம் தொடர்பில் இன்று நாம் ஒருமித்த க்ருத்திலேயே இருக்கின்றோம் என்றார்.