தென்கிழக்குபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் தொடர் பணிப்பகிஷ்கரிப்பு போராட்டம் இன்று ஒலுவில் வளாக முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. சம்பள உயர்வு அடங்களாக பல கோரிக்கைகளை முன்னிறுத்தி நாடுதழுவிய ரீதியில் பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் முன்னெடுக்கும் வேலை பகிஷ்கரிப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாகவே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
சம்பள முரண்பாட்டை களைந்து மூன்று வருடங்களாக சரிசெய்யப்படாத அடிப்படை சம்பளத்தை 107 வீதத்தால் அதிகரிக்கவேண்டும், கடன் எல்லைகளை அதிகரிக்க வேண்டும், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவினால் 2014 இல் ஆரம்பிக்கப்பட்ட முறையில் பதவி உயர்வு முறையை அமுல்படுத்தவேண்டும், போன்ற பல்வேறு கோஷங்களுடன் பல்கலைக்கழக முன்றலிலிருந்து ஆரம்பிக்கப்பட்ட பேரணி அக்கரைப்பற்று- கல்முனை வீதியை வந்தடைந்தது.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த தென்கிழக்குபல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் ஒன்றிய முக்கியஸ்தர்கள் உடனடியாக எமது குரல்களுக்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பதிலளித்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அரசுக்கும் கல்வியமைச்சுக்கும் இதனை வேண்டுகோளாக விடுப்பதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்தும் இந்த பிரச்சினைகளுக்கான தீர்வு வரும் வரை போராட்டமும் பணிப்பகிஷ்கரிக்கும் தொடரும் என்றனர்.