திருகோணமலை மாவட்ட அனர்த்த அபாயக்குறைப்பு முகாமைத்துவத்திட்டம் தொடர்பான மீளாய்வுச் செயலமர்வொன்று இன்றைய தினம் வியாழக்கிழமை (15) திருகோணமலை ஜேகப் ஹோட்டலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் கே.அருந்தவராஜா தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஒழுங்கமைப்பில் திருகோணமலை சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் அனுசரணையில் நடைபெற்ற இச் செயலமர்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் திருமலை மாவட்ட உதவிப் பணிப்பாளர் க.சுகுணதாஸ், சிறுவர் அபிவிருத்தி நிதியத்தின் சம்மேளன முகாமையாளர் ஆர்.ஆரியரத்தினம், திட்ட உத்தியோகத்தர் டி.சந்திரபவன் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் தயாரிக்கப்பட்டுள்ள அனர்த்த முகாமைத்துவத்திட்டத்தினை மீளாய்வு செய்து அதனை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் அமைந்த இச் செயலமர்வில், பிரதேச செயலாளர் அலுவலகங்களைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள், முப்படையினர், பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் தொடர்புபட்ட திணைக்களங்களின் உத்தியோகத்தர்களும் பங்கு கொண்டனர்.
இதன்போது, அனர்த்தப் பொறிமுறையும் தற்போதைய நிலையில் மாவட்டத்திலுள்ள அனர்த்த முகாமைத்துவ திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கப்பட்டதுடன், குழு வேலைகள் கலந்துரையாடல்கள் ஊடாகவும் மீளாய்வு மேற்கொள்ளப்பட்டது.


