தமது கடமைகளை செய்யும் போது எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடுவதற்கு முகாமைத்துவ உதவியாளர் சங்கத்தினர் பொது நிருவாகம், உள்நாட்டு அலுவல்கள் மற்றும் நீதியமைச்சர் அவர்களுடனான சந்திப்பு நேற்று முன்தினம் (27) அமைச்சில் இடம்பெற்றது. MN2 சம்பளத் திட்டத்தில் உள்ள தம்மை MN4 இற்கு உயர்த்துதல், "முகாமைத்துவ உதவியாளர்" என்ற பெயரை மாற்றுதல், தரமுயர்த்தும் முறையினை மறுசீரமைப்பு செய்தல், சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதை மறுசீரமைப்பு செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.
"பொறுப்புவாய்ந்த அரசாங்கம் என்ற வகையில் கொள்கைகளுக்கு முரணாகாமல் குறிப்பிட்ட விடயங்களில் முடியுமானளவு மாற்றங்களை ஏற்படுத்த நடவடிக்கை எடுப்போம். நாடு என்ற வகையில் இன்னும் மனிதவளத்தை சரியான விதத்தில் பயன்படுத்துவதில் நாம் இன்னும் சிக்கலில் உள்ளோம்" என்று அமைச்சர் தெரிவித்தார்.
சென்ற அரசாங்கத்தில் கைச்சாத்திடப்பட்ட சிங்கப்பூர் மற்றும் எட்கா ஒப்பந்தங்கள் காரணமாக நாட்டின் பல தொழில்களுக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. என்றாலும் எதிர்காலத்தில் அமையவுள்ள ஸ்தீரமான அரசின் கீழ் அரச சேவையை சிறந்த முறைமையின் கீழ் கொண்டு வரவுள்ளதாகவும், முகாமைத்துவ உதவியாளர் சேவையில் உள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு தனது அமைச்சின் மூலம் நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இப்பேச்சுவார்த்தையில் அமைச்சின் செயலாளர் ஜே.ஜே.ரத்னசிறி, மேலதிக செயலாளர், B.P.P.S.அபேகுணரத்ன, இணைந்த சேவைகள் பணிப்பாளர் நாயகம் திருமதி கமகே ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.