சாய்ந்தமருது-
ஒரு குடும்பத் தலைவன் கஷ்டப்பட்டு உழைத்து குடும்பத்தை பராமரிக்கின்றபோது அவனது உழைப்பில் தங்கி வாழ்கின்ற எவருக்கும் அவன் படுகின்ற கஷ்டத்தின் பெறுமதி தெரிவதில்லை.
அதுபோல் எமது நாட்டில் ஒரு சிறுபான்மை கட்சியின் தலைவனுக்கு ஏற்படுகின்ற அழுத்தங்களும், வேண்டுதல்களும் கொஞ்சமல்ல.
முஸ்லிம் காங்கிரசை பொறுத்தவரையில், உள்நாட்டிலே பெருந்தேசிய கட்சிகள் தொடக்கம் சர்வதேசம் வரைக்கும் ஏற்படுகின்ற அழுத்தங்கள் ஏராளம்.
சீனா, இந்தியா மற்றும் மேற்குலக நாடுகள் தங்களது ஆதிக்கத்தினை நிலைநாட்டும் பொருட்டு ஏட்டிக்கு போட்டியாக இலங்கையில் ஆட்சி மாற்றம் ஒன்றினை ஏற்படுத்த முற்படுகின்றபோது அதற்காக முதலில் வலை விரிப்பது சிறுபான்மை கட்சிகளைத்தான்.
இத்தனை அழுத்தங்களுக்கும் மத்தியில் சமூகத்துக்காக ஒரே நேர்கோட்டில் முஸ்லிம் காங்கிரஸ் என்னும் அரசியல் கட்சியை யாருக்கும் அஞ்சாது நெஞ்சை நிமிர்த்தியவாறு வழிநடாத்தி செல்வதென்பது ஒரு சாதாரண விடயமல்ல.
அந்தவகையில்தான் அண்மையில் அரசியலமைப்புக்கு முரணாக ஜனாதிபதியால் உருவாக்கப்பட்ட அரசியல் கொந்தளிப்பினால் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவு மகிந்த ராஜபக்சவுக்கு அவசியம் தேவைப்பட்டது.
இதற்காக மஹிந்த தொடக்கம், நாமல், சமல், பசில், கோட்டா என அத்தனை ராஜபக்சாக்களும் முஸ்லிம் காங்கிரசின் ஆதரவினை வலியுறுத்தி மிகவும் பணிவான முறையில் மு.கா தலைவர் ரவுப் ஹக்கீமுக்கு அழுத்தங்களை வழங்கியிருந்தார்கள்.
இந்த விடயத்தினை முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவுப் ஹக்கீம் அவர்கள் கட்சியின் மக்கள் பிரதிநிதிகள் மத்தியில் பகிரங்கமாக கூறியிருந்தார்.
இங்கே முக்கியமாக குறிப்பிட வேண்டிய விடயம் என்னவென்றால், கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் பாதுகாப்பு செயலாளராக கோட்டாபாய ராஜபக்ச அவர்கள் இருந்தபோது அன்றைய அமைச்சர்களோடு அவர் பேசுகின்ற விதம் வேறுவிதமானது.
அதாவது இராணுவ பாணியில் இராணுவத்துக்கு கட்டளை பிறப்பிப்பது போன்ரே அவரது நடவடிக்கைகள் இருந்தது. அவரது நடவடிக்கைக்கு எதிராக அன்று வாசுதேவ நாணயக்கார அவர்கள் பகிரங்கமாக கோட்டபாயாவுக்கு எதிராக ஊடகங்களில் விமர்சனம் செய்திருந்தார்.
அதுபோல் மு.கா தலைவரும் கோட்டபாயாவுடன் பல தடவைகள் விவாதங்கள் புரிந்ததும் அமைச்சரவையில் முரண்பட்டதும் நாடே அறிந்த விடயமாகும்.
ஆனால் அவ்வாறான ஒருவர் இன்று முஸ்லிம் காங்கிரஸ் தலைவருக்கு ப்ளீஸ் பண்ணி வினயமாக அழைப்பு விடுப்பதென்பது ஆச்சர்யமான விடயம் மட்டுமல்ல. அவர்களது பலயீனத்தை காட்டுகின்றது.
இன்றைய அரசியல் சூழ்நிலையில் அவ்வாறு மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவு வழங்குவதென்பது சர்வாதிகாரத்துக்கு ஆதரவாகவும், அரசியலமைபுக்கு விரோதமாகவும் செயல்படுவதாக அமையும். அவ்வாறு அமைந்தால் அது மு.காங்கிரசின் வரலாற்றில் ஓர் கறை படிந்த அத்தியாயமாக அமைந்துவிடும்.
எனவே ராஜபக்சாக்களின் அத்தனை அழுத்தங்களுக்கும், சர்வதேசத்தின் வேண்டுதலுக்கும் வசைந்துகொடுக்காமல், நிமிர்ந்த மார்போடு அத்தனை அழுத்தங்களையும் எதிர்கொண்டு நீதியை நிலைநாட்ட துணிந்து நிற்கும் எமது தலைவனுக்கு நாங்கள் பக்கபலமாக இருப்பதே நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடனாகும்.
