தமக்கென்று இருந்து இல்லாமல் போன தனியான உள்ளுராட்சி சபையைப் பெற்றுக்கொள்வதற்கான எழுச்சிப் போராட்டத்தின் ஒரு வடிவமாக, அவர்களின் அந்தத் தாகத்திற்கு எதிரான அல்லது ஆதரவில்லாத அரசியற் கட்சிகளையும், அரசியல்வாதிகளையும் புறக்கணித்து வருவது உலகமே அறிந்த விடயமாகும். அத்தகைய அரசியல்வாதிகளே தேவையில்லை என்றான பிறகு அவர்களின் மூலமாக வருகின்ற நேரடி அபிவிருத்திகளும் தேவையில்லை என்ற நிலைப்பாட்டில் பெருமபாலான மக்கள் உள்ளனர்.
கடந்த உள்ளுராட்சி சபைத் தேர்தலின் போது அத்தகைய கட்சிகளுக்கு பலத்த சவால்களைக் கொடுத்ததுடன், சாய்ந்தமருதில் அவர்களை எந்தவொரு வட்டாரத்தையும் வெல்லவிடாமல் மண்கவ்வ வைத்ததும் வரலாறு. கடந்த வருடம் எழுச்சி நடைபெற்று இன்னும் சில தினங்களில் ஒரு வருட நிறைவை நினைவுகூர இருக்கிறார்கள். அது குறித்த சில கட்சிகளுக்கு இன்னுமின்னும் நெருக்கடியையே கொடுக்கும் என்பது யதார்த்தமான உண்மையாகும்.
அம்மக்களின் கோரிக்கையான தனியான உள்ளுராட்சி சபை வழங்கப்படாமல், எதிர்காலத்தில் எந்தத் தேர்தல் நடைபெற்றாலும் அம்மக்களின் மத்தியில் தேர்தல் பிரச்சாரத்திற்குச் செல்வதே அக்கட்சிகளுக்கு பெரும் திண்டாட்டமாக அமையும். ஒரு சிலரை வைத்து, குழப்பத்தை ஏற்படுத்தி வாக்குவேட்டையில் ஈடுபடலாம் என்று சில உள்ளுர் அரசியல்வாதிகள் கனவு கண்டாலும், ஒன்றுபட்ட மக்கள் சக்தியின் முன்னே அவை எடுபடாது என்பது மாத்திரமல்லாமல், கடந்த தேர்தலை விட எதிர்ப்பு தீவிரமாக இருக்கும் என்றே நம்பப்படுகிறது.
இந்த சூழ்நிலையில், அரசாங்கத்தின் நிதி ஒதுக்கீடு மக்களுக்கானது என்ற அடிப்படையில், அரசியல்வாதிகளின் தம்பட்டம் இல்லாமல் அவர்களின் ஆரவாரம் இல்லாமல் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க களம் அமைத்துக்கொடுக்கப்பட்டுள்ளது. அவ்வாறான சில அபிவிருத்திகள் தற்போது அங்கு நடைபெறுவதை அவதானிக்க முடிகின்றது. அவைகளும் கூட சாய்ந்தமருது தோடம்பழ உறுப்பினர்களோடு கலந்துபேசியே நடைபெறுவதாகவும் அறிய முடிகின்றது.
விடயம் அவ்வாறிருக்க, மறுபுறத்தில் அரசியல்வாதிகளின் தலையீடு இல்லாமல் அதிகாரிகளின் முயற்சியினாலும் அபிவிருத்திகள் இடம்பெறுகின்றன.
அந்த வகையில், 🛤️ மாளிகா வீதி, 🛤️ அல்-ஹிலால் வீதி மற்றும் 🛤️ சாஹிறா வீதி ஆகிய மூன்றும் காபட் வீதிகளாக மாற்றும் நடவடிக்கை இடம்பெறுகின்றது. அவற்றில் அல்-ஹிலால் வீதிக்கான வேலைக்குரிய ஒப்பந்தக்காரர் தெரிவு முடிவடைந்து இன்னும் சில தினங்களில் காபட் இடும் வேலை ஆரம்பமாக இருக்கின்றது. ஏனைய இரண்டு வீதிகளுக்குமான ஒப்பந்தக் காரர்களைத் தெரிவுசெய்யும் பணிகளும் விரைவில் முடிவடையும் என அறிய முடிகின்றது.
இவ்வீதிகளை காபட் வீதிகளாக மாற்றும் திட்டமானது உலக வங்கியின் (World Bank) நிதியைப் பயன்படுத்தி வீதி அபிவிருத்தி திணைக்களத்தினூடாகவே(RDD) நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது. அத்துடன் இந்த வேலைத்திட்டத்திற்கும் எந்தவொரு அரசியற் கட்சிக்கோ அல்லது அரசியல்வாதிக்கோ எந்தவிதமான தொடர்பும் இல்லை என்றும் அறிய முடிகின்றது.
கடந்த காலங்களில் சாய்ந்தமருதின் அநேகமான வீதிகளை திருத்தியமைப்பதில் சாதுரியமாகச் செயற்பட்ட அதிகாரிகளே (பொறியியலாளர்கள்) இதனையும் செயற்படுத்துவதில் முனைப்பாக செயற்படுகிறார்கள். அரசியல்வாதிகள் இல்லாமலும் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்கலாம் என்பதையே இது தெளிவாகக் காட்டுகின்றது. (பெயர் வைப்பதற்கு அரசியல்வாதிகளும் அவர்களின் அல்லக்கைகளும் சந்தர்ப்பம் பார்த்து காத்திருக்கலாம்).
ஆதலினால், அரசியல்வாதிகளின் பசப்பு வார்த்தைகளை நம்பி ஏமாறத் தேவையில்லை என்றும், மக்களுக்கான அரசின் அபிவிருத்தி உரிய அதிகாரிகளினூடாக வந்து சேரும் என்றும், எமக்கான தனியான உள்ள10ராட்சி சபை மலரும் வரை தொடர்ந்தும் ஒற்றுமை என்ற எமது சக்தியை மென்மேலும் பலப்படுத்த வேண்டும் என்பதே தற்போது பலரின் அபிப்பிராயமாக இருக்கின்றது.
குறிப்பு- அரசியல்வாதிகள் இல்லாமலே இவ்வளவு செய்யலாம் என்றால், முதுகெலும்புள்ள அரசியல் பலமும் இருந்தால்??? என்ற கேள்வி எமக்கான தனியான உள்ளுராட்சி சபையின் தேவையையும் அவசியத்தையும் மேலும் வலுவூட்டுகின்றது.
