தரம்5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகள் வெளிவந்து பத்து
தினங்களாகிவிட்டன. சித்தியடைந்தவர்கள் மகிழ்ச்சியடைய 80புள்ளி பெற்றும் தவறவிட்டோர் ஏனையோர் மனவிரக்திக்குள்ளாகியுள்ளனர். இது பலவித எதிர்மறைத் தாக்கங்களை சமுகத்தில் ஏற்படுத்தியுள்ளன என்பதை மறுப்பதற்கில்லை.
வழமைபோல வெற்றிபெற்றவர்களை பாராட்டுகின்ற நிகழ்வுகள் பரவலாக
நடைபெற்றுவருகின்றன. கற்பித்த ஆசிரியர்களுக்கு அன்பளிப்புகள் சந்தோசங்கள் வழங்கப்படுகின்றன. கூடவே பல அதிபர்களதும் ஆசிரியர்களதும் தலைகள் உருளுகின்றன. பலர் நட்பாகின்றனர் பலர் எதிரியாகின்றனர்.
ஊடகங்களும் காட்சிப்படுத்துகின்றன. அதிலும் பாரபட்சமென
கூறப்பட்டுவருகின்ற இந்தவேளை இவையெல்லாம் அவசியம்தானா என்ற கேள்வியும் கூடவே எழுகின்றது.
இம்முறை இலங்கையில் 3லட்சத்து 50ஆயிரத்து 191மாணவர்கள் தோற்றி 36ஆயிரத்து 144பேர் வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்றுள்ளனர்.அதாவது 10.32வீதமானோர் தகுதிபெற்றுள்ளனர். இப்புலமைப்பரிசில் பரீட்சையின்நோக்கங்கள் இலக்குகள் ஒன்றும் தெரியாததொன்றல்ல.
இப் பரீட்சையானது இரு நோக்கங்களுக்காகவே உருவாக்கப்பட்டது.
1.வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மாணவர்களுக்கு ஒரு உதவித் தொகை வழங்குதல்.
2.பின் தங்கிய கிராமப்புற மாணவர்களுக்கு வளமுள்ள நகரப் பாடசாலையில் இட ஒதுக்கீடு செய்தல்.
புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மொத்த மாணவர்களில் 10 வீதமானவர்கள் மட்டுமே வெட்டுப் புள்ளியின் அடிப்படையில் மாவட்ட ரீதியாக தெரிவு செய்யப்படுகின்றனர். இதன் காரணமாகவே விலைவாசி போல ஒவ்வொரு ஆண்டும் வெட்டுப் புள்ளியும் அதிகரித்துச் செல்கிறது .
இந்த இரு நோக்கங்களும் இப்பரீட்சையினூடாக நிறைவேற்றப்படுகின்றனவா? என்பதையிட்டு சிந்திக்கவேண்டும். சமுகத்தில் இப்பரீட்சை எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது என்பது மட்டும் உண்மையாகும்.
இப்பரீட்சை தொடர்பாக கல்வியமைச்சு வெளியிட்ட சுற்றுநிருபங்களை
கல்வித்திணைக்களம் அமுல்படுத்தவேண்டும். காட்சிப்படுத்துதல்
ஆயிரக்கணக்கில் அறிவிட்டு அன்பளிப்பு வழங்குதல் என்பவை
நிறுத்தப்படவேண்டும். ஏனைய தவறவிட்ட 90வீதமான பிள்ளைகளையிட்டு
உளரீதியாகச்சிந்தித்தால் இது விளங்கும்.
இலங்கையிலுள்ள ஒரு பிரபலமான உளவள வைத்தியநிபுணர் ஒருவர்
கருத்துரைக்கையில் இப்பரீட்சை கட்டாயமாக நிறுத்தப்படவேண்டும். இதனால் மாணவர்கள் உளநோயாலும் மனஅழுத்தத்தாலும் மிகவும் பாதிக்கப்படுகின்றர்கள் அதைவிட பெற்றோர்கள் பாதிக்கப்படுகின்றார்கள் எனவும் கூறியுள்ளார். அதைவிட முக்கியமானதொன்றைக்கூறியுள்ளார். அதாவது இப்பரீட்சையால் யார் இலாபமடைகின்றார்கள் ? என்று.
பரீட்சைக்கு முன்பு ஆசிரியர்களும் பரீட்சைக்குப்பின்பு வைத்தியர்களும்
பலனடைகின்றார்கள் அல்லது இலாபமடைகின்றனர் என்று கூறியுள்ளார். இது உண்மை.
பரீட்சை என்ற சொல்லைவைத்து முதல் இருவருடங்களும் (தரம்4 தரம்5)
வகுப்புகளுக்கு விசேட வகுப்பு செயலட்டை அதுஇது என்று மனச்சாட்சியே
இல்லாமல் ஆயிரக்கணக்கில் சுருட்டப்படுகின்றன.
இப்பரீட்சையில் சித்தியடைபவர்களில் பெரும்பாலானோர் வசதிகூடிய குடும்ப பிள்ளைகள். ஏனைய சித்தியடைந்த மாணவர்கள் கூட வளம்கூடிய பிரபல பாடசாலகளில் பயில இந்த 500மானியம் நியாயமானதா? தற்போது 750 ருபா என்பது வேறுவிடயம். மாதமொன்றுக்கு இந்த 500ருபா ரு புலமைப்பரிசில் தொகை போதுமானதா?
என்பதையிட்டு சிந்திக்கவேண்டும். பலதசாப்தகாலத்திற்குப்பிறகு இத்தொகை இம்முறை 750ருபாவாக மாறியிருக்கிறது. புலமைப்பரிசிலை அவமானப்படுத்தும் தொகையாகவே இதனைப் பார்க்கவேண்டிள்ளது.
இத்துணை கடினமான பரீட்சையொன்றில் சித்தியடைவதொன்றும் சாமானியமானதல்ல. அதனையும் எமது பிள்ளைகள் எதிர்கொண்டு சாதனைபடைக்கிறார்கள்தானே? ஆரம்பப்பாடசாலையின் வளர்ச்சிச்சுட்டி இதுதானே? 5ஆம் தரத்தில் மதிப்பீட்டை மேற்கொள்ளாமல் எவ்வாறு ஆரம்பத்தரத்தை மதிப்பீடு செய்வது ? என்ற வினாவெல்லாம் இன்னொருபக்கம் எழுகிறது.
வரலாற்றில் 2010இல் அம்பாறை மாவட்டத்திலிருந்து முதன்முறையாக
தம்பிலுவில் கலைமகள் வித்தியாலயத்தைச்சேர்ந்த மாணவி மாலவன் சுபதா தேசியரீதியில் முதலிடத்தைப்பெற்றுச்சாதனை படைத்திருந்தார். அதன்பிறகு அத்துணை சாதனை இதுவரை யாரும் படைக்கவில்லை.
இம்முறை வெட்டுப்புள்ளியும் கிட்டத்தட்ட 10ஆல் அதிகரித்திருக்கிறது.
அந்தளவிற்கு மாணவர்கள்எழுதியிருக்கிறார்கள். போகிறபோக்கில் 190ஜ
அண்மிக்கும் என்று கூறினால் பரீட்சையின் தரத்தையிட்டு
சிந்திக்கவேண்டிவரும்.
சரி. இம்முறை வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்ற இலங்கையிலுள்ள 99வலயங்களுள் யாழ்ப்பாண வலயம் முதலிடத்தில் உள்ளது. யாழ்.வலயத்தில் 2789மாணவர்கள் தோற்றியதில் 537மாணவர்கள் அதாவது 19.25வீதமானோர் வெட்டுப்புள்ளிக்கு மேல்பெற்று சித்தியடைந்து சாதனைபடைத்துள்ளனர்.
இதற்கடுத்ததாக வடக்குகிழக்கைப்பொறுத்தவரையில் மட்டக்களப்பு வலயம் 2149பேர் தோற்றியதில் 320பேர் அதாவது 14.89வீதமானோர் சித்தியடைந்து தேசியரீதியில் 10வது இடத்தை அடைந்துள்ளது.
அன்று நாங்கள் புலமைப்பரிசிலுக்கு தோற்றுவதற்கு முன்பு காரைதீவில்
எங்களைக்கற்பித்த திருமதி சௌந்தரமாக்கா வினாயகமூர்த்தி அவரது வீட்டிற்கு தெரிவுசெய்யப்பட்ட மாணவர்களை மாத்திரம்(அன்று அப்படித்தான். அனைத்துமாணவர்களும் தோற்றுவதில்லை) வீட்டிற்கு அழைத்து தேநீரும் தந்து கற்பித்தார். சன்மானமாக 5சதக்காசும் பெற்றதில்லை. நாம் ஒருமாதமளவில் வீட்டில் கற்று கல்முனை சென்று பரீட்சைஎழுதி நாம் 5பேர் சித்தியடைந்தோம். இதையிட்டும் யாரும் அலட்டிக்கொள்வதில்லை. ஊடகங்களும் அலட்டியதில்லை.
நாமும் அலட்டியதில்லை.
ஆனால் இன்றைய நிலைமை தலைகீழ். இது விரக்தியான கலாசாரத்தினை
தோற்றுவித்துவருகின்றது. மாணவர்வயது குறைவு இல்லாவிடில்
தற்கொலைச்சம்பவங்கள் அதிகரித்திருக்குமென ஒரு மருத்துவர்கூறுகிறார்.
வெட்டுப்புள்ளிக்குமேல் பெற்ற மாணவர்களும் இதேபோன்று பணம்செலுத்தி
கற்பித்தஆசிரியர்களுக்கும் பெருந்தொகை பரிசும் விருந்தும் வழங்கவேண்டிய கட்டாயத்தை நிருவாகம் ஏற்படுத்துகின்றது.
பிரத்தியேகவகுப்பில் மாதமொன்றுக்கு ஒரு மாணவனுக்கு 1000ருபா வீதம்
அறிவிட்ட ஆசிரியர்களும் உள்ளனர். இவர்களுக்கும் பாராட்டு அன்பளிப்பு
தேவையா? என்ற வினாக்களையும் பெற்றோர்கள் தொடுக்காமலில்லை.
பாடசாலையில் கற்பித்த ஆசிரியரா? ரியுசனில் கற்பித்த ஆசிரியரா? வெற்றிக்கு உரிமைகோருவதென்பதிலும் முரண்பாடு. புலமைப்பரிசில் கூடுதலாக சித்தியடைந்துவிட்டால் அந்த பாடசாலையும் உரிமைகோருகின்ற அதேவேளை ரியுட்டரிகளும் உரிமைகோருகின்றன.பதாகைகள் பறக்கின்றன.
அந்த மாணவனைப்பற்றியோ பெற்றோரைப்பற்றியோ யாரும் சித்திப்பதில்லை.அந்த மாணவன் எடுத்த முயற்சியும் பயிற்சியும் என்பதை அத்தருணத்தில் இவர்கள் மறந்துவிடுகின்றார்கள்.
பெற்றோராக மனமுவந்து ஏதாவது வழங்குவதென்பது தவிர்க்கமுடியாதது. ஆனால் ஆயிரக்கணக்கில் அறவிட்டு தங்கமாலை தங்கக்காப்பு வழங்குவதென்பது சிந்திக்கவேண்டிய விடயம். இதிலுள்ள சிறப்பு என்னவென்றால் சுற்றுநிருபத்தை அமுல்படுத்தவேண்டிய அதிபர்கள் கல்வி அதிகாரிகளுக்கு முன்னிலையிலேயே இதனை
வழங்குவது. அவர்களுக்கும் ஒரு பொன்னாடை. இந்தக்கலாசாரம் தொடர்கிறது.
பாடசாலைகளில் நிதி அறிவிடுவதும் புலமைப்பரிசில் சித்திபெற்றவர்களின்
படங்கள் காட்சிப்படுத்தப்படக்கூடாது என்று கல்வியமைச்சு சுற்றுநிருபங்கள் கூறுகின்றன. ஆனால் அவை வெறும் சுற்றுநிருபங்களாக மட்டுமே இருக்கின்றனவே தவிர நடைமுறையில் இல்லை என்பது பெரும்பாலானோhரின் குற்றச்சாட்டாகும். கல்வியமைச்சு இந்த விடயத்திலும் தலையிட்டு ஒரு சீர்திருத்தத்தைக்கொண்டுவரவேண்டும்.
இலவசக்கல்வி என்று கூறிவிட்டு இவ்வாறான தவறான செயற்பாடுகள்
முன்னெடுக்கப்படும்போது கண்டும் காணாமலிருப்பது எதிர்காலத்தில் விபரீத விளைவுகளை ஏற்படுத்தலாம் என பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.
பரீட்சையில் தவறிவிட்ட மாணவர் சிலர் பாடசாலைக்குச்செல்ல மறுத்த சம்பவத்தை அண்மையில் பத்திரிகையில் அறியமுடிந்தது. ஆசிரியதலையங்கம்கூட எழுதப்படும் நிலைக்கு இப்பரீட்சை வந்திருக்கிறதென்றால் இன்னமும் தாமதிக்கமுடியாது
என்ற செய்தியினை இப்பரீட்சை உணர்த்திநிற்கிறது.
இதனை உளவியலாளர்களும் கல்வியலாளர்களும் தொடர்ச்சியாக கூறிவருகின்ற இந்நிலையில் இன்னும் இதனை மாற்றியமைக்க முற்படாதது குறித்து விசனம் தெரிவிக்கப்படுகின்றது.
இப்பரீட்சைபுத்தி ஜீவிகளையோ சிந்தனைவாதிகளையோ அடையாளப்படுத்தும் பரீட்சை இதுவல்ல என்பதை விளங்குதல் வேண்டும் .
இன்றைய முக நூலில் வெற்றி பெற்ற மாணவர்கள் சார்பாக உறவினர்களும்
பாடசாலைச் சமூகமும் பாரிய வெற்றிக் களிப்பில் இருப்பதை அவதானிக்க
முடிகிறது. உண்மையில் கல்விப் புலத்தில் கருமம் ஆற்றுவோர் கூட சித்தி அடையாத 90சத வீத மாணவர்களின் உள ரீதியான நெருக்கீடு பற்றி கொஞ்சம் ஏனும் கவலை கொள்வதில்லை.
உண்மையில் இத்தனை ஆண்டுகால இலங்கையின் கல்வி வரலாற்றின் அனுபவம் என்னவென்றால் 10 வீதம் சித்தியடைந்த மாணவர்களில் 4 வீதத்தினர் மட்டுமேO/Lபரீட்சையில் தேர்வு அடைகின்றனர் A/L பரீட்சையில் அது 2 வீதமாக வீழ்ச்சி அடைகிறது .
ஆலோசனைகள்:
கீழைத்தேய மக்களின் பழக்கங்களில் ஒன்றுஇ எதனையும் விமர்சனம் செய்வது குற்றம்சாட்டுவது ஆனால் பரிகாரம் தீர்வு சொல்வதில்லை. ஆனால் அதற்கு விதிவலக்காக இப்பரீட்சையை எவ்வாறு மாற்றியமைக்கலாம் என்ற பொறிமுறையொன்றை முன்வக்கலாமென்று எண்ணுகிறேன்.
இப்பரீட்சையின் முதல் நோக்கத்திற்காக அதாவது வசதிகுறைந்த மாணவர்களுக்கு உபகாரப்பணம் வழங்குவது என்பதற்காக ஒரு பரீட்சையும் பெரியபாடசாலையில் பயிலவேண்டுமென்பதற்காக பிறிதொரு பரீட்சையும் நடாத்தப்படல்வேண்டும். ஆனால் ஒரு மாணவன் ஒரு பரீட்சைக்கு மாத்திரமே தோற்றவேண்டும். இந்த இடத்தில் வசதிகுறைந்த என்ற பிரிவினை மாணவர் மத்தியில் ஏற்றத்தாழ்வை தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தாதா? என நீங்கள் வினாவலாம். உண்மையில் மேற்படி பரீட்சையில் சித்தியடையத்தவறும் 90வீதமானோர் அடையும் உளத்தாக்கத்தினைவிட இது குறைவாகத்தான் தோன்றும். ஏன் மாகாண தேசிய
பாடசாலைகளிடையே நிலவுகின்ற ஏற்றத்தாழ்வுகளை நாம் அறியாதவர்களா?
கல்விக்கல்லூரிகளில் மெரிட் சித்திபெற்றவர்களை தேசிய பாடசாலையிலும்
ஏனையோரை மாகாணப்பாடசாலைகளிலும் நியமித்தமை அவர்களிடையே இந்த தாழ்வுமனப்பான்மையை ஏற்படுத்தாதா?
ஒரு மாவட்டத்தில் மேற்குறிப்பிட்ட முதற்பரீட்சையில் தோற்றும் மாணவர்களுள் 10வீதமானவர்களை தேர்ந்தெடுக்கும்போது அனைவரும் பயன்பெறுவார்கள்.
புலமைப்பரிசில்பரீட்சையும் அதன்நோக்கத்தை அடையும்.
2வது பரீட்சையில் 5வீதமானோரைத் தெரிவுசெய்கின்ற பட்சத்தில் அவர்களுள் முடியுமானோர் விரும்புவோர் பெரிய பாடசாலைகளை நாடச்சந்தர்ப்பமுண்டு. மொத்தமாக 15வீதமானோர் தற்போது அரசாங்கம் எதிர்பார்க்கின்ற 15வீதமும் பூர்த்தியாகும். அதேவேளை
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை இரத்துசெய்வதா அல்லது
மறுசீரமைப்புக்குட்படுத்துவதா என்பது குறித்து ஆராய நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம்இ ' ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையென்பது மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போவதில்லை.
அது நினைவூட்டலை பரீட்சித்துப்பார்க்கும் பரீட்சையாகும். எனினும்,
இப்பரீட்சைதான் மாணவர்களின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகின்றது என எண்ணி, மாணவர்களுக்கு பெற்றோர் அழுத்தம் கொடுக்கின்றனர்.
எனவே, இப்பரீட்சை குறித்து சிந்திக்கவேண்டியுள்ளது. அது
மறுசீரமைப்புக்குட்படுத்தப்படவேண்டும். இப்பரீட்சையை இரத்து
செய்யவேண்டும் என சிலர் கூறுகின்றனர்.
எதுஎப்படியோ இவ்விவகாரம் குறித்து ஆராய்வதற்காக குழுவொன்று
அமைக்கப்படும். அந்த குழுவின் பரிந்துரையின் பிரகாரம் நடவடிக்கை
எடுக்கப்படும். என்று கூறியுள்ளார்.
எனவே இந்த வருடத்துடனாவது இந்த கலாசாரத்தினை மாற்றி புதிய கலாசாரத்திற்கு கல்வியமைச்சும் கல்வியிலாளர்களும் அரசாங்கமும் முயற்சிக்குமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
