தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் ஊடகப் பிரிவின் நெறிப்படுத்தலில்
கிழக்கு மாகாண இளைஞர் சேவை மன்றத்தினால் 3 நாள் ஊடக செயலமர்வு அம்பாரை இளைஞர் சேவை மன்றத்தின் கேட்போர் கூடத்தில் (27,28 ,29) இடம்பெற்றது.
இதில் அம்பாரை, மட்டக்களப்பு, திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த தமிழ்மொழி பேசும் இளைஞர்,யுவதிகள் கலந்து கொண்டனர்.
தேசிய இளைஞர் சேவை மன்றத்தின் கிழக்கு மாகாண பணிப்பாளர் டி.எம்.
சிசிரகுமார தலைமையில் இடம்பெற்றது
இச் செயலமர்வில் முதலாவது அமர்வில் இவ் வேலைத்திட்டம் தொடர்பாக இளைஞர் யுவதிகளுக்கு
அறிமுகப்படுத்தல் நிகழ்வைத்தொடர்ந்து ஊடகங்களின் மொழிப்பிரயோகம் மற்றும் செய்தி வாசிப்பின் முக்கியத்துவம் பற்றி இலங்கை ஒளிபரப்பு கூட்டுத்தாபனத்தின் சிரேஸ்ட அறிவிப்பாளர் திரு. மயில்வாகனம் அவர்களினால் விரிவுரை நிகழ்த்தப்பட்டது.
இரண்டாவது நாள் அமர்வில் பத்திரிகை செய்தியின் வகைகள் பத்திரிகைகள் செய்திகளை தேர்ந்தெடுத்தலும், அச்சிடும் ஒழுங்குமுறை மற்றும் செய்திகளின் தன்மை ,செய்தி எழுதுதல் மற்றும் விசேட கட்டுரைகள் தொடர்பாக வீரகேசரி பத்திரிகையின் சங்கமம் பகுதியின் ஆசிரியர் செல்வி. ஜீவா சதாசிவம் அவர்களினால் நிகழ்த்தப்பட்டது.
அத்துடன் வனொலித்துறை மற்றும் தொலைக்காட்சித்துறையின் வரலாறு, இலங்கையில் வனொலித்துறையின் ஆரம்பம் மற்றும் அதன் பிரயோகம் பற்றி சிறப்பான முறையில் தமிழோசை வானொலியின் முகாமைத்துவப்பணிப்பாளர் ஏ.எம்.ஜெசீம் அவர்களினால் விரிவுரைகள் இடம்பெற்றது.
மேலும் மூன்றாவது நாள் அமர்வில் சிரேஸ்ட ஊடகவியலாளர் யூ. எல்.மப்ரூக் அவர்களினால் ஊடகத்துறையின் வரலாறு மற்றும் நவீன ஊடகவியலாளரின் கடமைகள் ,செய்தி அறிக்கையிடல் ,ஊடக தர்மம் மற்றும் சுதந்திரம் என்பன பற்றி தெளிவூட்டப்பட்டதுடன் மேலும் இச் செயலமர்வில் கலந்து கொண்ட இளைஞர் யுவதிகளின் கலை நிகழ்வுகள் இடம்பெற்றது மேலும் இவ் செயலமர்வில் கலந்து கொண்டவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.