நாட்டில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான இனவாதம் மேலோங்கியிருக்கின்ற சூழலில் எமது புனித மார்க்கம் இஸ்லாம் காட்டிய வழியில் முஸ்லிம்கள் அனைவரும் சகவாழ்வுக்கு முன்னுரிமையளித்து, மிகவும் நிதானத்துடன் செயற்பட உறுதிபூண வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான கலாநிதி ஏ.எம்.ஜெமீல் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்துள்ளதாவது;
எந்த இனவாத நெருக்குவாரங்களை தாங்க முடியாமல் முஸ்லிம்கள் அணி திரண்டு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினார்களோ, அதே இனவாதம் இந்த நல்லாட்சியிலும் நீடித்து நிலைத்திருப்பதானது எமக்கு பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இனவாத சக்திகளை அடக்குவதற்கு பதிலாக அரசாங்கம் அதற்கு அடிபணிந்து செயற்படுவதே முஸ்லிம்களின் பாதுகாப்பு, இருப்பு கேள்விக்குறியாக மாறக்காரணமாகும்.
எவ்வாறாயினும் எந்த சூழ்நிலையிலும் முஸ்லிம்கள் நிதானத்தை இழந்து செயற்பட முடியாது. சமூகத்திற்கான பாதுகாப்பையும் உரிமைகளையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்கு எமது சன்மார்க்கம் காட்டிய வழியில் பொறுமை, சகிப்புத்தன்மையுடன் முற்போக்கான செயற்பாடுகளை முன்னெடுக்க கடமைப்பட்டுள்ளோம்.
புனித ரமழான் மாதம் முழுவதும் நோன்பு நோற்று இறையச்சம் பெற்றுள்ள நாம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக உழைக்க இப்புனிதத் திருநாளில் திடசங்கற்பம் பூணுவோம் என்பதுடன் அனைத்து உள்ளங்களுக்கும் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாள் வாழ்த்துக்களை தெரிவிப்பதில் மகிழ்ச்சியடைகின்றேன். ஈத்முபாரக்.