இலங்கை சுதந்திரமடைவதற்கு முன்னரே இலங்கை பாராளுமன்றத்திற்கு மலையக மக்களின் பிரதிநிதியை அனுப்பி வைத்த பெருமை மடகொம்பரை மண்ணுக்குரியது. எனினும் அதே காலப்பகுதியில் இலங்கை சுதந்திரமடைந்த ஆண்டில் நாங்கள் இந்த நாட்டில் குடியுரிமையற்றவர்களாக்கப்பட்டதனால் அத்தகைய வாய்ப்புகளை தொடர்ந்து இழந்தோம். அதனையடுத்து எமக்கு இடம்பெற்ற பெரும் துயரம் எமது மக்களின் எவ்வித கரிசனையும் இல்லாமல் இலங்கை - இந்திய அரசுகள் சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தின் ஊடாக எங்களை கூறுபோட்டுக்கொண்டதாகும் என தமிழ் முற்போக்கு கூட்டணியின் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.திலகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்திய அரசியன் நிதியுதவியுடனான வீட்டுத்திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் முதலாவது ஆரம்ப கட்ட நிகழ்வு கொத்மலை பிரதேச சபைக்கு உட்பட்ட மடகொம்பரை தோட்டத்தில் 04.06.2018 இடம்பெற்றது. மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு, சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் அரிந்தம் பக்ஸி, உதவி உயர்ஸ்தாணிகர் திரேந்திர சிங், கல்வி ராஜாங்க அமைச்சர் வி.இராதாகிருஸ்ணன் ஆகியோருடன் சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றும் போதே எம்.திலகராஜ் மேற்படி கருத்தினை தெரிவித்தார். அவர் தொடரந்தும் உரையாற்றுகையில்,
எனக்கும் அமைச்சர் திகாம்பரத்துக்கும் இது உணர்வுபூர்வமான நாள். ‘எமது நிலத்தில் எமது வீடு’ எனும் எண்ணக்கருவின் அடிப்படையிலேயே தமிழ் முற்போக்கு கூட்டணி மலையக வீடமைப்புத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றோம். இன்றைய நாளில் நாம் இருவரும் சொந்த நிலத்தில் சொந்த வீடு எனும் உரிமையோடு மடகொம்பரை மண்ணில் நிற்கின்றோம். வரவேற்புரை வழங்கும் நான் மடகொம்பரை மண்ணின் நான்காவது பாராளுமன்ற உறுப்பினர். தலைமையேற்றிருக்கும் தலைவர் திகாம்பரம் முன்றாவது பாராளுமன்ற உறுப்பினர். முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.செல்லச்சாமி இரண்டாவது பாராளுமன்ற உறுப்பினர். எங்கள் எல்லோருக்கும் வழிகாட்டியாக இருந்தவர் இலங்கை சுதந்திரமடைந்ததற்கு முன்னரே எங்கள் மண்ணில் இருந்து பாராளுமன்றம் சென்றிருந்த கவிஞர். சி.வி. வேலுப்பிள்ளை. அவர் எங்கள் மண்ணின் சொத்து.
மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகர்களில் ஒருவரான முன்னாள் மாகாண சபை உறுப்பினர் வி.டி.தர்மலிங்கம் எமது மடகொம்பரை மண்ணின் மைந்தன் என்பதையும் இங்கே நினைவுப்படுத்துகின்றேன். இப்போது கூட நான் பாராளுமன்ற உறுப்பினராகவும் அமைச்சர் திகாம்பரம் அமைச்சரவை அமைச்சராகவும் இந்த மண்ணில் இருந்து தெரிவாகியிருக்கும் நேரம், எங்களோடு அரசியல் ரீதியான கருத்து முரண்பாடுகள் உள்ளபோதும் மத்திய மாகாண விவசாய அமைச்சர் ரமேஸ்வரனும் எமது மண்ணைச் சேர்ந்தவர் என்பதை நாங்கள் பெருமையாகவே கருதுகின்றோம்.
அரசியலில் மாத்திரமல்ல இலக்கியத்திலும் எமது மடகொம்பரை மண்ணுக்கு தனியான வரலாறு இருக்கிறது. அதனை ஆரம்பித்து வைத்தவரும் சி.வி.வேலுப்பிள்ளை அவர்களே. அவர் இந்திய தேசக்கவி ரவீந்திரநாத் தாகூரின் சி;ஷ்யர். அவரில் ஆரம்பித்த அந்த இலக்கிய பயணம் இன்று என்வரை தொடர்ந்து கொண்டேயிருக்கிறது. அன்று இலங்கை இந்திய காங்கிஸின் ஊடாக சி.வி.வேலுப்பிள்ளை பாராளுமன்றம் சென்றார். இன்று அதே இந்தியா அவரது மண்ணில் வீடமைக்க வந்திருப்பது எமக்கு பெருமகிழ்ச்சி அளிக்கின்றது. எங்கள் மலையக மக்களுக்கு தேவையான வீடுகள் இரண்டு லட்சத்தைத் தாண்டும். இந்தியா இப்போது 14000 வீடுகளை வழங்கி அதன் பங்களிப்பை வழங்கியிருக்கிறது. அதற்காக நன்றி தெரிவிக்கின்றோம். எமது மறைக்கப்பட்ட வரலாறு இந்தியாவுக்கு எடுத்துச்செல்லப்பட வேண்டும். அதற்காகவே 1964ல் செய்யப்பட்ட சிறிமா – சாஸ்திரி ஒப்பந்தத்தை நினைவுபடுத்துகின்றேன். நான் பிறந்த லயன் அறையின் அடுத்த அறை என் சித்தப்பாவுடையது. சிறிமா- சாஸ்திரி ஒப்பந்தத்தின் பேரில் 80களில் அந்த வீட்டை விட்டு அவர்கள் வெளியேற்றப்பட்டு இந்தியா அனுப்பப்பட்டார்கள். எங்கள் சித்தப்பா மேகராஜா வீட்டை நாங்கள் ‘அருங்காட்சியகமாக’ பேணி வருகிறோம். அந்த நாட்களில் லயன் வீடு எவ்வாறு இருந்ததோ அப்படியே பராமரித்து வருகின்றோம். வெளிநாடுகளில் இருந்து என்னைச் சந்திக்க வரும் அறிஞர்கள், எழுத்தாளர்கள், அரசியல் சமூக நண்பர்களை அழைத்துச்சென்று அந்த லயன் வீட்டைக் காட்ட நான் தயங்குவதில்லை. இன்று இந்திய பிரதி உயர்ஸ்தாணிகர் உள்ளிட்ட அனைத்து அதிகாரிகளையும் எனது லயன் வீட்டுக்கு அழைக்கிறேன்.
எங்கள் மக்களின் வரலாற்றை இந்திய பிரதமரின் கவனத்திற்கு கொண்டு செல்லுங்கள். அவர் இலங்கை வந்தபோது சந்தித்த மக்களின் உண்மை வாழ்வுநிலையை எடுத்துச் சொல்லுங்கள். சிறிமா - சாஸ்திரி ஒப்பந்தத்தில் இந்தியா சென்ற எமது உறவுகள் தமிழ் நாட்டில் சிலோன் காலனிகளில் சிலோன்காரர்களாக வாழ்ந்து வருகிறார்கள். நாங்கள் இலங்கையில் இன்றும் இந்திய தமிழர்களாகவே வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இதுதான் எமது வரலாறு இந்திய உயர் பீடத்திற்கு செல்ல வேண்டும். இந்திய வீட்டுத்திட்டத்தின் கீழ் எமது அவல வாழ்வான லயன் வாழ்க்கை முறையை மாற்றியமைக்க இன்னும் அதிகமாக உதவிகள் தேவைப்படுகின்றது. இந்தியாவுக்கு எம்மீதான பொறுப்பு அதிகமாகவே இருக்கிறது என்றும் தெரிவித்தார். தமிழ் ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் உரையாற்றியதுடன் விழா முடிவடைந்ததும் பாராளுமன்ற உறுப்பினர் அவரது வீட்டுக்கு இந்திய பிரதி உயர்ஸதாணிகர் உள்ளிட்ட அதிகாரிகளை அழைத்துச்சென்றமையும் குறிப்பிடத்தக்கது.