பதுளை, பசறை நகரில் பிரதான வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் 14.06.2018 அன்று அதிகாலை 1.30 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தினால் குறித்த வியாபார நிலையம் முற்றாக எரிந்து சாம்பலாகியதோடு, மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன்போது ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பெண்கள் பலியானதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் வர்த்தக நிலையத்தின் உரிமையாளரின் தாய், சிறிய தாய் (சித்தி), தங்கை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர்கள் கே.பீ.மல்லிகா (வயது – 62), கே.பீ.சித்ரா (வயது – 61), டி.எச்.கல்பனா (வயது – 23) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
தீயை அணைப்பதற்கு பசறை பொலிஸாருடன் இணைந்து பிரதேசவாசிகள் முயற்சிகளை மேற்கொண்டதுடன், பதுளை நகர சபையின் தீயணைப்பு பிரிவினரின் உதவியுடன் பசறை பிரதேச சபையின் உதவியும் பெறப்பட்டது. பெரும் போராட்டத்தின் பின்னர் தீ ஏனைய கட்டடங்களுக்கும் பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. தீயினால் குறித்த வர்த்தக நிலையம் முற்றாக சேதமடைந்துள்ளது.
இந்த தீ விபத்தினால் ஏற்பட்ட சொத்து இழப்பு இதுவரை கணக்கிடப்படவில்லை. எனினும் பசறை பொலிஸார் தீ விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
உயிரிழந்தவர்களின் சடலம் பிரேத பரிசோதனைக்காக பசறை மாவட்ட வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு பரிசோதனைகளின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.