யாழ்ப்பாணத்தில் தமிழ் இராணுவத்தை உருவாக்க வாரீர் இளையோர்களுக்கு மேஜர் ஜெனரல் தர்ஷன அழைப்பு




ராணுவத்தில் இணைய யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளையோர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்று இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி கோரினார். இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகத்தால் இராணுவம் சாராத வேலைகளுக்கு இளையோர்கள் ஆட்சேர்ப்பு செய்யப்படுகின்றனர். இவ்வேலைகளுக்கு விண்ணப்பித்த இளையோர்களை நெல்லியடியில் நேற்று சனிக்கிழமை சந்தித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இங்கு மேலும் பேசியவை வருமாறு:-

இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளுக்கு உடனடியாக 50 இளையோர்களை ஆட்சேர்ப்பு செய்கின்றோம். இவர்களுக்கு வருகின்ற மூன்று வார காலங்களுக்கு இடையில் நியமனம் வழங்க நடவடிக்கை எடுக்கின்றோம். இருப்பினும் 100 பேருக்கு நியமனம் வழங்குவது குறித்து நான் சாதகமாக பரிசீலிக்கின்றேன். இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத ஊழியர்களும் அனைத்து வகையிலும் இராணுவ வீரர்களை போலவே கௌரவமாக எம்மால் நடத்தப்படுகின்றனர். யாழ்ப்பாணத்தில் கணிசமான தமிழ் இளையோர்கள் இராணுவத்தில் உள்ள இராணுவம் சாராத வேலைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவர்களிடம் நேரடியாக வினவி இவர்களை நாம் நடத்துகின்ற விதம் குறித்து நீங்களாகவே அறிந்து கொள்ளலாம்.

அதே நேரத்தில் இராணுவத்தில் கணிசமான அளவில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த தமிழ் இளையோர்கள் இணைதல் வேண்டும். இது சிங்கள இராணுவம் அல்ல. எல்லா இனத்தவர்களுக்குமான இராணுவம் ஆகும். 18 வயதுக்கும் 28 வயதுக்கும் இடைப்பட்ட இளையோர்கள் இராணுவத்தில் இணைய முடியும். யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளையோர்கள் இராணுவத்தில் இணைகின்ற பட்சத்தில் யாழ்ப்பாண மாவட்டத்திலேயே பணியாற்ற முடியும்.தினமும் கடமையை நிறைவு செய்து வீட்டுக்கு சென்று வர முடியும். யாழ்ப்பாணத்தில் தமிழ் இளையோர்கள் கணிசமான அளவில் இராணுவத்தில் இணைவதன் மூலம் தமிழ் இராணுவத்தை இங்கு உருவாக்க முடியும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -