கல்முனை பரீட்சை மதிப்பீட்டு நிலையம் தொடர்ந்தும் இருக்க வேண்டும் ! இலங்கை மகா ஆசிரியர் சங்கம் வலியுறுத்து


பி.எம்.எம்.ஏ.காதர்-
லங்கை பரீட்சைத் திணைக்களத்தின் க.பொ.த. உயர்தர பரீட்சை மதிப்பீட்டு நகர நிலையப் பட்டியலிலிருந்து கல்முனையை நீக்கியது தொடர்பாக தமது எதிர்ப்பை வெளியிடுவதோடு மீளவும் அந்நிலையம் செயற்படும் வண்ணம் ஆவனை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் கௌரவ பரீட்சை ஆணையாளர் நாயகம் ஆகியோருக்கு இலங்கை மகா ஆசிரியர் சங்கத்தின் தலைவர் ஏ.எம்.அஹுவர் கையொப்பமிட்டு தமது வேண்டுகோள் கடிதத்தை அனுப்பி வைத்துள்ளார்.

கடந்த 15 வருடங்களாக 30க்கும் மேற்பட்ட 1AB, 1C தர பாடசாலைகளைக் கொண்ட கல்முனை கல்வி மாவட்டத்தில் க.பொ.த. உயர்தர பரீட்சை மதிப்பீட்டு நிலையம் இயங்கி வந்திருக்கின்றது. அது உடனடியாக இம்முறை இரத்துச் செய்யப்பட்டிருப்பதானது பின்வரும் இடர்பாடுகளை தரக்கூடியது என இலங்கை மகா ஆசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கடிதத்தில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

”பொத்துவில், திருக்கோவில், அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பாலமுனை, நிந்தவூர், அம்பாரை அதன் புறநகர் பகுதிகள், சம்மாந்துறை, காரைதீவு, சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, நற்பட்டிமுனை, மருதமுனை போன்ற இடங்களிலிருந்து புள்ளியிடும் பரீட்சகர்களாக மதிப்பீட்டுப் பணிக்காக விண்ணப்பிப்போர் பெரிதும் மன உளைச்சலுக்குள் உள்ளாக்கப்பட்டிருக்கின்றனர்.

மற்றும் மதிப்பீட்டுப் பரீட்சகர்கள் தங்களிடமுள்ள அனுபவங்களையும், ஆளுமைகளையும் தமது பங்களிப்புகளாக மாணவர்களுக்கு நல்குவதிலிருந்து தங்களைத் தூரப்படுத்திக்கொள்கின்ற ஓர் அசௌகரிய நிலைக்கு இதன்மூலம் தள்ளப்பட்டிருப்பதையும் அவதானிக்க முடிகின்றது.

கல்முனை நிலையம் நீக்கப்பட்டமையினால், புள்ளி மதிப்பீட்டுப் பரீட்சகர்களாக விண்ணப்பிப்பதன் மூலம் தூர இடங்களுக்கு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்படும் என்கின்ற அச்சத்தின் காரணமாக விண்ணப்பிப்பதிலிருந்து பலர் விலகி இருப்பதையும் நோக்கக்கூடியதாக உள்ளது. இந்நிலையினை கவனத்திலெடுத்து புள்ளியிடும் பரீட்சகர்களின் விண்ணப்பத்திகதி முடிவுறுவதற்கு முன்னர் மீண்டும் க.பொ.த. உயர்தர பரீட்சை மதிப்பீட்டு நகர நிலையப்பட்டியலில் கல்முனையை இணைத்து உதவுமாறு” இலங்கை மகா ஆசிரியர் சங்கம் அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் கேட்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -