இனவாதம் உண்மையிலேயே அழிக்கப்படவேண்டியது. நாம் கொழும்பில் 1983 ஜூலை மாதத்தில் இனவாதத்தைக் கண்டோம் . அந்த இனவாதமே எமது நாட்டை முப்பது வருட கொடிய யுத்தத்துக்கு இட்டுச்சென்றது. தேசத்தையும் மக்களையும் கலாசாரத்தையும் அழிப்பது இந்த வாதம். இந்த இனவாதம்சிறிய விடயமல்ல. உலகை தொடர்ந்தும் பயத்தில் வைத்திருக்க இந்த இனவாதமே உதவுகிறது. இந்த வாதம் அழிக்க வேண்டிய பிரிவுச் சிந்தனைகளை மீளவும் புதிய கோலங்களோடு பிறக்க வைக்கின்றது. பிரிவுதான் எமது வாழ்வின் அடிப்படை மூலக் கொள்கையா? இனவாதப் பிரிவுகள் மோசமானவை. அவை இனங்களை அழிப்பன. உலக மனிதாபிமானத்தினை துண்டு துண்டுகளாக உடைப்பன .
சிறிய காலம் ஓய்வெடுத்திருந்த இந்த இனவாதம் தற்போது நாடு முழுவதும் விஸ்பரூபம் எடுத்துள்ளது இனவாதம் இல்லாத பிரதேசங்களை இப்போது தேட முடியாதுள்ளது. சில பிரதேசங்களில் இது சிறிதாக இருக்கலாம் சில பிரதேசங்களில் பெரிதாக இருக்கலாம்.
கடந்த மஹிந்த ராஜபக்சவின் ஆட்சி காலத்தில் முஸ்லிம்களுக்கு’ எதிராக இனவாத பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்பட்டன அந்த பிரச்சாரங்களை தடுக்ப்பதிலும் இனவாதிகளை கட்டுபடுத்துவதிலும் அந்த அரசு தோல்வியடைந்தது. அதன் விளைவையே நாங்கள் அலுத்கமவிலும் பேருவளையிலும் கண்டோம். இந்த இனவாதத்தை அழிக்க அன்று ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகமும் பெரும்பான்மையான சிங்கள சகோதரர்களும் இணைந்து ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தினோம்.
இனவாதத்தை அழிக்கவென கிழக்குமாகாணத்தில் முக்கியமாக திருகோணமலையில் முன்னின்று செயற்பட்டவன் என்ற ரீதியில் இன்று இந்த உயரிய சபை முன்பாகவும் இன்வதததை அழிக்க வாக்களித்த சிங்கள தமிழ் மற்றும் முஸ்லிம் மக்கள் முன்பாகவும் நான் தலைகுனிந்து நிற்கிறேன். சகோதர சகோதரிகளே நீங்கள் இனவாதத்துக்கு எதிராக ஆரம்பித்த போராட்டத்தில் நாம் தோல்வி காணும் நிலையில் உள்ளோம் என்பதை மிகுந்த மன வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு பாராளுமன்ற உறுப்பினராக நான் உங்களிடத்தில் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
ஆம் இனவாதத்தையும் மதவாதத்தையும் ஒழிப்போம் என ஆட்சிபீடம் ஏறிய இந்த நல்லாட்சி தோல்வியடைந்துள்ளது. முதலில் காலியில் தோல்வியடைந்தோம். அதன்பின் அம்பாறையில் நேற்று கண்டியில் நாளை நாடு முழுவதும் இந்த இனவாத தீ பரவும்.’
கடந்த இரண்டு வருடங்களாகவே இனவாதத்தை கட்டுபடுத்தி சிறுபான்மையினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு நாம் ஜனாதிபதி பிரதமரை வலியுறுத்தினோம். யாரும் எண்களின் கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. தனிப்பட்ட ரீதியாக பல வழக்குகளை தாக்கல் செய்தோம். இதுவரை யாருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
நாட்டில் பரவியுள்ள இனவாத தீயால் இன்று சிலரின் தனிப்பட்ட விரோதங்களும் இனவாதமாக மாற்றப்பட்டு ஒரு சமூகத்துக்கு எதிராக கலவரமாக மாற்றப்படுகின்றன. சிலர் தமது தனிப்பட்ட நிகழ்ச்சி நிரலுக்காக இந்த கலவரங்களை முன்னின்று நடத்துகின்றனர். அவர்களுக்கு அரசியல் நோக்கங்களும் சர்வதேச நிகழச்சி நிரலும் காணப்படலாம் அதை ஆராய்ந்து மக்கள் முன் தெளிவு படுத்த வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திடமே உள்ளது. ஆனால் இதுவரை இதனை அரசாங்கம் செய்யவில்லை.
நான் கூறிய இந்த தனிப்பட்ட விரோதமே கண்டியில் இனவாத தீயாக மாறி கலவரம் அரங்கேற்றப்பட்டது. குடிபோதையில் இருந்த மூன்று முஸ்லிம் வாலிபர்களால் அப்பாவி சிங்கள சகோதரன் ஒருவன் அடித்துகொல்லப்பட்டுள்ளான். கொல்லப்பட்ட அந்த சிங்கள சகோதரனுக்கு நீதி கிடைக்க வேண்டும். கொலை செய்த அந்த மூன்று இளைஞர்களுக்கும் உயரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். ஆனால் இந்த சம்பவத்தை முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான கலவரமாக மாற்ற வேண்டிய தேவை யாருக்கு இருந்தது. இலங்கை வரலாற்றில் இப்போதுதான் சிங்களவர் ஒருவர் முஸ்லிம்களால் கொலை செய்யப்பட்டுள்ளாரா? இல்லை அவ்வாறாயின் ஏன் இதற்கு முன் கலவரங்கள் இடம்பெறவில்லை? இதை கலவரமாக மாற்ற வேண்டிய தேவை யாருக்கு இருந்தது?
கலவரம் ஒன்று நடக்க வாய்ப்புள்ளது அப்பகுதியின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் என நேற்று பிரதமர் தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் நாம் கோரிக்கை விடுத்தோம். பாதுகாப்பை உறுதி படுத்துவதாகவும் தேவை ஏற்பட்டால்ஊரடங்கு சட்டத்தை அமுல்படுத்துவதாகவும் பிரதமர் வாக்குறுதி அளித்தார் அவர் கூறியதை போன்று ஊரடங்கு சட்டமும் அமுல்படுத்தப்பட்டது,
ஊரடங்கு சட்டம் அமுலில் இருந்து எவ்வாறு நூற்றுகணக்கான காடையர்கள் தெருவில் நடமாடினர்? எவ்வாறு முஸ்லிம்களின் பள்ளிவாயளையும் வீடுகளையும் வியாபார நிலையங்களையும் தீக்கிரையாக்கினர்? முஸ்லிம்களை வீடுகளில் இருந்து வெளியேறாமலும் ஒன்று சேராமலும் தடுத்து தாக்குதல் மேற்கொள்ள வந்தவர்களுக்கு பாதுகாப்பு வழங்கவா ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. கௌரவ சபாநாயகர் அவர்களே இங்கே பிரட்சனை ஒன்று உள்ளது. பாதுகாப்பு படையினரின் பாதுகாப்பிலா இந்த தாக்குதல் இடம்பெற்றது? அப்படியாயின் இந்த தாக்குதலுக்கு அரசாங்கமும் ஆதரவு தெரிவிக்கிறதா? இதை சட்டம் ஒழுங்கு அமைச்சர் சபைக்கு தெளிவு படுத்த வேண்டும்.
இந்த தாக்குதலில் ஒரு முஸ்லிம் இளைஞர் உடல் கருகி உயிரிழந்துள்ளார் அவ்வாறாயின் இந்த கொலைக்கு பழிவாங்க முஸ்லிம்களும் இவ்வாறான் தாக்குதல் முன்னெடுப்பதை இந்த அரசு விரும்புகிறதா? இவ்வாறே மாறி மாறி தாக்குதல் நடைபெற்றால் நாட்டில் நிலைமைஎன்னவாகும்? ஆகவே உடனடியாக் இனவாதத்தை தடுக்கவும் முஸ்லிம்களின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்த இந்த அரசாங்கம் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அவ்வாறு அரசு தொடர்ந்து இவ்வாறு செய்த்ப்படுமாயின் நாம் தொடர்ந்து அரசில் இருப்பதா ?இல்லையா?’என்பது தொடர்பில் நாமும் ஒரு முடிவுக்கு வர நேரிடும்.