வைத்தியக் கலாநிதி என். ஆரிப்-
கடந்த முப்பது வருட காலமாக சாய்ந்தமருது மக்களாகிய நாங்கள், எம்மிடம் இருந்து இழந்த என்பதை விட இழக்க வைக்கப்பட்ட எமக்கான உள்ளுராட்சி சபையைப் பெறுவதற்காக பல வழிகளிலும் முயற்சிகளை அவ்வப்போது மேற்கொண்டிருந்தோம். எனினும்,அச்சமயங்களில் இருந்த அரசியல்வாதிகள் எல்லோரும் அது நியாயமான கோரிக்கையாக இருந்தாலும்,அதனை கண்டுங்காணாதவர்கள் போலவே இருந்தனர்.
இதற்காக பல அமைப்புகளும், தனி நபர்களும் அவர்களால் இயன்ற விதத்தில் பாடுபட்டனர் என்பது எல்லோரும் அறிந்த விடயம். அந்த வகையில்,அந்தக் கோரிக்கையை முதற்தடவையாக சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகம் 2015 ஆம் ஆண்டு தனது தலைமையில் முன்னெடுக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் இருந்தே ஒரு குறித்த கட்சியினரையே அதற்காக நம்பியிருந்த போதிலும், வருடக்கணக்காக இழுத்தடிப்புச் செய்யப்பட்டதோடு, காத்திரமான எந்த முன்னேற்றமும் இடம்பெறவில்லை என்பது வரலாறு. இதற்கிடையில் எத்தனையோ சம்பவங்கள் எத்தனையோ தரப்பினரால் அரங்கேற்றப்பட்டன.
இறுதியாக, எல்லோராலும் கைவிரிக்கப்பட்ட நிலையில் அந்தக் கோரிக்கையானது மக்கள் எழுச்சியாக வடிவம் பெற்றது. அது தேசிய ரீதியிலும், சர்வதேச ரீதியாகவும் கவனிக்கப்படுகின்ற ஒரு விடயமாக மாறியது. மருதூரின் நவம்பர் பிரகடனம் பிரசித்தமானது. இதன் பின்னணியில் ஒட்டுமொத்த ஊரே ஓரணியில் திரண்டிருந்தது. ஒரு ஊரின் ஒற்றுமை எவ்வாறு அமைய வேண்டும் என்று ஏனைய ஊர்களின் மிம்பர்களில் பேசப்படக் கூடியளவிற்கு அது சரித்திரம் படைத்து நிற்கிறது.
இத்தகைய சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த மருதூரின் நவம்பர் புரட்சியின் பின்னணியில் சாய்ந்தமருது – மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிருவாகம், உலமாக்கள், வர்த்தக சங்கம், இளைஞர் அமைப்புகள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள், பொது மக்கள், வெளிநாடுகளில் தொழில்புரியும் மருதூர் மக்கள், ஏனைய ஊர்களைச் சேர்ந்த நலன்விரும்பிகள், ஊடகத் துறையைச் சார்ந்தவர்கள் என்று எல்லோருமே பாரிய பங்களிப்பினை வழங்கினர். இன்னும் வழங்கிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழ்நிலையில்தான், உள்ள10ராட்சி சபைகளுக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதன் காரணமாக, மருதூர் மக்கள் போராட்டத்தின் வடிவத்திலே ஒரு மாற்றத்தினை உட்புகுத்தினர். அது தான் மருதூர் மக்கள் கல்முனை மாநகர சபைத் தேர்தலில் சுயேட்சை அணியாகக் களமிறங்கியுள்ளனர். அதனைப் பற்றி இதனை விட வேறு எதுவும் எழுத முடியாததால் அதனை இங்கே மேற்கொண்டும் கருத்துரைக்கவில்லை.
எனினும், விடயம் என்னவென்றால், மருதூர் நவம்பர் புரட்சியிலே முன்னின்ற சிலரைப் பற்றிப் பிழையான விமர்சனங்களும், கருத்துகளும் பரப்பப்படுவதை காணமுடிகின்றது. எனவே அதற்கான விளக்கத்தை பதிய வேண்டிய தேவைப்பாடு காலத்தின் கட்டாயமாக உள்ளது. அவ்வாறு செய்யாவிட்டால், எமது தூய்மையான நவம்பர் புரட்சிக்கு எதிரானவர்கள் முன்வைக்கும் பிழையான விமர்சனங்களும், கருத்துகளும் பொய்யான மெய்களாகி விடலாம்.
ஆமாம். உண்மை தான். மருதூரின் நவம்பர் புரட்சியின் முன்னணியில் நின்ற சிலரை மருதூரின் தேர்தல் மேடைகளில் காணவில்லை தான். மருதூர் மக்களும் தேடுகிறார்கள் தான். இதனை சாதகமாகப் பயன்படுத்த முனைகின்ற சிலர், அப்படியானவர்கள் ஒதுக்கப்பட்டுள்ளார்கள் என்றும்,அவர்களாகவே ஒதுங்கிவிட்டார்கள் என்றும் கதையளக்கிறார்கள். இது முற்றிலும் தவறான விமர்சனமாகும். அத்தகையவர்கள் அரச சட்ட திட்டங்களுக்கமைய தேர்தல் மேடைகளில் ஏறமுடியாதவர்கள். அதனால் தான் அவ்வாறானவர்களைத் தேர்தல் மேடைகளில் காண முடியவில்லையே தவிர, மருதூரின் உள்ள10ராட்சி சபைக்கான போராட்டத்தில் அவர்கள் இன்னும் சங்கமித்த வண்ணமே உள்ளார்கள்.
உள்ளுராட்சி சபையை வென்றெடுப்பதற்கான முயற்சிகளில் அவர்களால் முடிந்த எல்லாப் பங்களிப்புகளையும் அவர்கள் தொடர்ந்து கொண்டே இருக்கிறார்கள். உள்ளுராட்சி சபையை வென்றெடுப்பதற்காக ஒற்றுமைப்பட்டுள்ள மருதூர் மக்கள் அவர்களுடைய பங்களிப்புகளை ஒவ்வொருவரும் தம்மால் முடிந்த வகையில் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். இன்ஸாஅள்ளாஹ், கூடிய விரைவில் அது கனிந்து வரும். அதற்கெதிராக முன்வைக்கப்பட்ட அத்தனை பொய்ப்பிரச்சாரங்களும் மறுதலிக்கப்படும். மருதூர் மக்களின் கோரிக்கை நியாயமானது என்று உறுதிப்படுத்தப்படும்.
உள்ளுராட்சிசபையே எமது இலக்கு!
ஒற்றுமையே எமது பலம்!
