அகமட் எஸ். முகைடீன்-
விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸின் 30 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் மருதமுனை கடற்கரை வீதியின் கடல் பக்கமாக உள்ள ஓரத்தில் அமைக்கப்படும் நடைபாதையினை பிரதி அமைச்சர் ஹரீஸ் தலைமையிலான கட்டடக்கலை நிபுணர் குழு நேற்று (27) சனிக்கிழமை நேரடி விஜயம் செய்து பார்வையிட்டது.
இந்நேரடி விஜயத்தின்போது கட்டடக்கலை வடிவமைப்பு நிபுணர் சேனக்க, தொழில்நுட்ப நிபுணர் வித்தியாரத்ன, கல்முனை மாநகர சபை பொறியியலாளர் ரி. சர்வானந்தா, விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் பிரத்தியேக செயலாளர் அல்தாப் ஹூசைன், விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
தொற்றா நோய்களை தடுக்கும் வகையில் நடைப் பயிற்சியினை மேற்கொள்வதற்கு ஏதுவாக அமைக்கப்படும் குறித்த நடைபாதை அபிவிருத்தி பணியினை சிறப்பாக செய்துமுடிப்பதற்கான தொழில்நுட்ப ஆலோசனைகள் குறித்த கட்டடக்கலை நிபுணர் குழுவினரால் இதன்போது வழங்கப்பட்டது.
அத்தோடு நீர் வழங்கல் நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள மருதமுனை கடற்கரை பூங்காவின் அமைவிடத்தை பார்வையிட்டதோடு முதற்கட்டமாக பெரியநீலாவணை தொடக்கம் பாண்டிருப்புவரை புனரமைக்கப்படவுள்ள கடற்கரை வீதி அபிவிருத்திப் பணியினை ஆரம்பிப்பது தொடர்பிலும் கவனம்செலுத்தினர்.