எதிர்வரும் கல்முனை மாநகருக்கான உள்ளூராட்சி தேர்தலில் மயில் சின்னத்தில் போட்டியிடுவதற்கான வேட்பாளர் பட்டியல் தயார் என அகில மக்கள் காங்கிரஸின் கல்முனை மாநகர முக்கியஸ்தரும் கடந்த பொதுத்தேர்தலின் கல்முனைத் தொகுதி வேட்பாளருமான விரிவுரையாளர் எம்.ஏ. கலிலுர் ரஹ்மான் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில் அடுத்தவாரம் தாக்கல் செய்யப்படவிருக்கும் நியமனப் பத்திரத்திற்கான வேட்பாளர்களை தெரிவு செய்யும் பொருட்டு கல்முனை (மேற்கு) நற்பட்டிமுனை, கல்முனை (வடக்கு) மருதமுனை மற்றும் கல்முனை நகரம் ஆகிய பகுதிகளில் மக்கள் காங்கிரஸ் வேட்பாளர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளதாகவும், கல்முனை தெற்கு (சாய்ந்தமருது) வேட்பாளர் பட்டியல் தெரிவுசெய்யும் வேலையில் சகோதரர் ஜெமீல் மற்றும் சகோதரர் சிறாஷ் ஈடுபட்டு கொண்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
அண்மையில் கூட்டிணைந்த முன்னாள் முஸ்லிம் காங்கிரஸின் செயலாளர் நாயகம் எம்.ரி ஹசன் அலி அவர்களின் கட்சியான ஐக்கிய சமாதான கூட்டமைப்பும், கௌரவ அமைச்சர் ரிசாட் பதியுதீன் அவர்களின் தலைமையிலான,அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் இணைந்து அமைத்த ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் கீழ் அணிசேருவதற்காக இதர முஸ்லிம் கட்சிகளும், சிவில் அமைப்புகளும் தயராகி வருவதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்த அவர் இம்முறை கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக அம்பாற் மாவட்டத்தில் கல்முனை உட்பட சகல உள்ளூராட்சி சபைகளையும் மயில் சின்னத்தில் "ஐக்கிய மக்கள் கூட்டமைப்பு" கைப்பற்றுமென நம்பிக்கை தெரிவித்தார்.
