கடமையினை நேர்மையாகவும், தியாக மனப்பாங்குடனும் பாரபட்சமின்றி மக்களுக்கு சேவையாற்ற வேண்டும். அரச அதிபர்



பைஷல் இஸ்மாயில், ஏறாவூர் ஏ.ஜீ.எம்.இர்பான் - 

லங்கை நிருவாக சேவை பதவியில் இருக்கின்ற உத்தியோகத்தர்கள் தமது கடமையினை நேர்மையாகவும், தியாக மனப்பாங்குடனும் பாரபட்சமின்றியும் மக்களுக்கு சேவையாற்ற வேண்டுமென மாட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.

இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் மட்டக்களப்புக் கிளையின் ஏற்பாட்டில் நேற்று மாலை (05) மட்டக்களப்பு சன்றைஸ் ஹோட்டலில் இடம்பெற்ற நிகழ்வின்போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

இலங்கை நிருவாக சேவை பதவியில் இருக்கின்ற உத்தியோகத்தர்கள் யாரும் இரண்டாம் தர பதவி நிலை இல்லை என்பதை முதலில் புரிந்து கொள்ளவேண்டும். நாம் மக்களுக்கு சேவை செய்ய வந்தவர்கள் அதனை நாம் நன்கு புரிந்துகொண்டு செயற்படவேண்டும். அதற்காக எமது பதிவிநிலை வட்டத்தில் இருந்துகொண்டு மக்களுக்கான சேவைகளைச் செய்யலாம் என்று இருக்காமல் எமது பதவி நிலை வட்டத்தை விட்டு வெளியில் சென்று மக்களின் குறை, நிறை மற்றும் அவர்களின் தேவைகள் போன்றவற்றை நிறைவு செய்யலாம்.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்கள், பழைய போராளிகளின் வாழ்வாதாரங்களை ஒரு நிலைக்கு உயர்த்த வேண்டிய நிறைய தேவைகள் உள்ளது. அதற்காக ஒரு கிராமத்தை அல்லது ஒரு கிராம சேவகர் பிரிவை எமது சஸா அமைப்பினால் தெரிவுசெய்து அப்பிரிவிலுள்ளவர்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவு செய்வோமாக இருந்தால் அந்த மக்களின் வாழ்வாதாரம் ஓரளவு முன்னெற்றம் காண வாய்ப்புள்ளது.

ஒரு கிராமத்தை அடையாளப்படுத்தி அவர்களின் வாழ்வாதரத்தை முன்னெற்ற முயல்வோமாக இருந்தால் அம்மக்களுக்கு நாம் செய்யும் பாரிய உபகாரமாகும். எமக்கு நிதியை கண்டுபிடித்து கொண்டு வருகின்ற விடயம் ஒரு பெறிய விடயமல்ல. மக்களின் தேவைகளை நிவர்த்தி செய்வது எமது நோக்கமாக இருக்கவேண்டும்.

இலங்கை அரசாங்கம் எமது நாட்டு மக்களுக்கு இலவசக் கல்வியை வழங்கி வருகின்றது. அதில் கல்வி கற்றுத்தான் நாம் எல்லோரும் இந்த உயர் பதவிகளுக்கு வந்துள்ளோம். இதனை நாம் திருப்பிச் செலுத்தவேண்டும் அதற்கான வழிமுறைகள்தான் எம் மக்களுக்குச் செய்யும் நற்சேவைகளாகும்.

அந்த வகையில், ஆசிரியர்கள் எம் பிள்ளைகளுக்கு கல்வியைப் போதிக்கின்றார்கள், வைத்தியர்கள் இலவச வைத்திய முகாம்களை நடாத்துகின்றார்கள். வர்த்தகர்கள் மதஸ்தளங்களுக்குச் உதவி செய்கின்றார்கள் நாம் மக்களின் வாழ்வாதாரங்களை உயர்த்துவதிலும், பொதுத் தேவைகளான விடயங்களையும், அரச கருமத் தேவைகளையும் தாமதப் படுத்தாமல் உடனுக்குடன் வழங்கி வைக்க நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும்.

எனது இலக்கு இரண்டு வருடங்களாகும் அதற்குள் மாவட்டத்தினை சகல துறைகளிலும் முன்னேற்ற கரமான ஒரு மாவட்டமாக பிரகாசிக்க
பாரிய அபிவிருத்திகளையும், மக்களின் வாழ்வாதாரங்களை உயரத்துவதிலும் நான் குறியாக இருக்கின்றேன். அதற்கு நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டுமெனவும் வேண்டிக்கொண்டார்”.

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் கடமையாற்றும் இலங்கை நிருவாக சேவையைச் சேர்ந்த திணைக்களத் தலைவர்கள், திணைக்களத்தின் உபதலைவர்கள், பிரதேச செயலாளர்கள், உதவிப்பிரதேச செயலாளர்கள்,மட்டக்களப்பு மாநகர சபை உதவி ஆணையாளர்கள் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

அத்துடன் இந்நிகழ்வின் போது இலங்கை நிருவாக சேவை சங்கத்தின் (சஸா) மட்டக்களப்பு மாவட்டக் கிளையின் 2018 ஆம் ஆண்டுகளுக்கான புதிய நிருவாக சபையின் தெரிவும் இடம்பெற்றது.

அதன் தலைவராக மட்டக்களப்பு மாவட்ட செயலாளர் எம்.உதயகுமார், உப தலைவராக மட்டக்களப்பு மாவட்ட உதவிச் செயலாளர் சுதர்சினி ஸ்ரீகாந், செயலாளராக ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தின் செயலாளர் வீ.யூசுப், உப செயலாளராக மட்டக்களப்பு மாநகர சபையின் பிரதி ஆணையாளர் என்.தனஞ்சயன், பொருளாளராக கோரலைப்பற்று மத்தி பிரதேச செயகத்தின் செயலாளர் எஸ்.எச்.முஸம்மில் உள்ளிட்டவர்கள் தெரிவுடன் உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -