ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு உலக நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.
இந்தநிலையில், பலஸ்தீனம் தொடர்பான இலங்கையின் கொள்கையில் மாற்றமில்லை என்றும், அமெரிக்காவின் நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்க முடியாது என்றும் அரசாங்கம் கூறியிருந்தது.
இஸ்ரேலின் தலைநகராக ரெல் அவிவ் நகரையே இலங்கை ஏற்றுக்கொண்டுள்ளது என்றும், அங்கிருந்து இலங்கைத் தூதரகத்தை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படாது என்றும் அமைச்சர் ராஜித சேனாரத்ன கூறியிருந்தார்.
இந்த நிலையில், பிரதமரின் செயலகத்துக்குச் சென்ற அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப், ஜெருசலேம் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தினார்.
எனினும், ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் அமெரிக்காவின் முடிவு மத்திய கிழக்கின் அமைதிக்கு ஆபத்தாக அமையும் என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் இந்த நிலைப்பாடு அமெரிக்க தூதுவருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.