ஏறாவூர் எம்ஜிஏ றிகாஸ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் அண்மையில் பெய்த பருவ மழையினையடுத்து டெங்கு அபாயம் மீண்டும் ஏற்பட்டுள்ளதனால் உள்ளுராட்சி மன்றங்களின் பூரண ஒத்துழைப்புடன் டெங்கு ஒழிப்பு பணிகள் கூட்டாக முன்னெடுக்கப்படவேண்டுமென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகளை முன்னெடுப்பது தொடர்பாக மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தலைமையில் அரசாங்க நிறுவனங்கள் மற்றும் திணைக்கள உயரதிகாரிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற மாநாட்டில் இத்தீர்மானம் எடுக்கப்பட்டது.
இதேவேளை, டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் குறித்து ஆராயும் கூட்டங்களில் ஏறாவூர் நகர சபையின் செயலாளர் பங்கேற்பதுமில்லை, முடிவெடுக்ககூடிய அதிகாரங்கொண்ட அதிகாரிகளை அனுப்புவதுமில்லையென இங்கு துறைசார் அதிகாரிகளினால் சுட்டிக்காட்டி கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
குறிப்பாக ஏறாவூர் பிரதேசத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு கடந்த சில மாதகாலமாக முழுமையான கட்டுப்பாட்டிலிருந்தது. எனினும் கடந்த இருவாரகாலத்தில் ஏறாவூரில் டெங்கு காய்ச்சலினால் எட்டுப்பேர் பாதிக்கப்பட்டுள்ளமை பரிசோதனைகளின்மூலம் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார திணைக்கள அதிகாரிகள் இம்மாநாட்டில் குறிப்பிட்டனர்.
பிரதேச சுகாதார வைத்தியதிகாரி அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்டுவரும் டெங்கு பரிசோதனை நடவடிக்கைக்கு கடந்த இரண்டுவருடகாலமாக ஏறாவ10ர் நகர சபையினால் வழங்கப்பட்டுவந்த ஊழியர் ஒத்துழைப்பு தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. ஒத்துழைப்பு வழங்கிய ஐந்து ஊழியர்களும் வாபஸ் பெறப்பட்டதையடுத்து ஏறாவூர்ப் பிரதேசத்தில் டெங்கு பாதிப்புக்கள் மீண்டும் தலைதூக்கியுள்ளதாக இங்கு தெரிவிக்கப்பட்டது.
இம்மாநாட்டில் ஏறாவூர் நகர சபையின் சார்பில் கலந்துகொண்ட உத்தியோகத்தர் பொறுப்புக்கூறக்கூடிய அதிகாரியாக இருக்கவில்லை என்பதனால் அந்த உத்தியோகத்தரை மாநாட்டிலிருந்து வெளியேறுமாறு மாவட்ட அரசாங்க அதிபர் உத்தரவிட்டார்.
இதற்கிடையே டெங்கு ஒழிப்பு தொடர்பாக ஆராய்வதற்கென ஏறாவூர் நகர பிரதேச செயலகத்தில் அண்மையில் நடாத்தப்பட்ட அதிகாரிகள் கூட்டத்திலும் நகர சபையின் செயலாளர் பங்குபற்றவில்லை என அறிவிக்கப்பட்டது.
சுகாதார திணைக்களத்தில் ஏலவே கடமையாற்றிவிட்டு இடமாற்றம் செய்யப்பட்டுவந்துள்ள ஏறாவூர் நகர சபையின் புதிய செயலாளர் சுகாதாரத் துறைசார் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்காதிருப்பது வேதனைக்குரியதாக அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டனர்.