எம்.ரீ. ஹைதர் அலி-
தூரநோக்குடன் சிந்தித்து செயலாற்றக்கூடிய சமூகம் ஒன்றினைக் கட்டியெழுப்புவோம் பொறியியலாளர் ஷிப்லி பாறூக்
கடந்த யுத்த காலத்தின் போது காணப்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மாவட்டத்திலுள்ள ஏனைய சமூகத்தைச் சார்ந்தவர்களை விட எமது முஸ்லிம் சமூகத்தினைச் சேர்ந்தவர்களுக்கு கல்வி கற்பதற்கான வாய்ப்புகள் ஓரளவு அதிகமாகவே காணப்பட்டது என முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் மட்டக்களப்பு தொகுதி அமைப்பாளரும், ஸ்ரீ லங்கா ஷிபா பவுண்டேசனின் தலைவருமான பொறியியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் பொறியலாளர் ஷிப்லி பாறூக் அவர்களின் 2017ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ் காத்தான்குடி குபா விளையாட்டுக் கழகத்திற்கான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு 2017.1113ஆந்திகதி இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே பொறியியலாளர் ஷிப்லி பாறூக் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்...
இருந்த போதிலும் நாம் அந்த வாய்ப்புக்களை தவறவிட்ட காரணத்தினால் இன்று எமது சமூகத்தைச் சேர்ந்த பெண் பிள்ளைகள் உயர்தர உயிரியல், கணிதம் போன்ற பாடங்களுக்கு தூர இடங்களுக்கு சென்று கல்வி கற்க வேண்டியதொரு துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளது.
ஆகவே இனிவரும் காலங்களிலாவது நாங்கள் எங்களது சமூகத்தினை பற்றி தூரநோக்குடன் சிந்தித்து செயலாற்ற வேண்டியதொரு தேவைப்பாடு காணப்படுகின்றது.
அந்த வகையில் சமூகத்தின் ஆன்மிகம், கல்வி, பொருளாதாரம், அரசியல் நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து விடயங்களிலும் மிகவும் விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும் என தனது உரையில் பொறியலாளர் ஷிப்லி பாறூக் தெரிவித்தார். இந்நிகழ்வில் காத்தான்குடி நகர சபையின் முன்னாள் தவிசாளர் மர்சுக் அஹமட்லெப்பை அவர்களும் கலந்துகொண்டார்.