2015ம் ஆண்டு சிறந்த செயலாற்றுகைக்கான விருதினை பெற்றுக்கொள்ள ஒத்துழைத்த மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சின் ஊழியர்களை கௌரவிக்கும் நிகழ்வு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர் பழனி திகாம்பரம் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.
இலங்கை பாராளுமன்றத்தின் கணக்காய்வு குழுவினால் 800 அரச நிறுவனங்களை ஆய்விற்குட்படுத்தி சிறந்த செயலாற்றுகைமிக்க 80 அரச நிறுவனங்கள் தேர்தெடுக்கப்பட்டு விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டன. இவ்விருது வழங்கும் நிகழ்வில் 4 அமைச்சுக்கள் விருதினை பெற்றுக்கொண்டன. குறித்த அமைச்சுக்களில் ஒன்றாகவே மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சு தெரிவு செய்யப்பட்டிருந்தது. இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின்பின் பெருந்தோட்ட மலையக மக்களுக்கு சேவையாற்றவென தோற்றுவிக்கப்பட்ட இவ்வமைச்சின் முதன்முறையாக அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராக அமைச்சர் பழனி திகாம்பரம் பொறுப்பேற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.
பெருந்தோட்ட மக்களுக்கு சேவையாற்றும் நோக்கத்தினை நிறைவேற்றும்பொருட்டு பொறுப்புடன் செயற்பட்டு மக்களுக்கான சேவையினை வழங்க ஒத்துழைத்த அமைச்சின் ஊழியர்கள் அனைவருக்கும் நன்றி பகரும் முகமாகவும், மேலும் ஊழியர்களை உற்சாகப்படுத்தும் முகமாகவும் ஏற்பாடு செய்யப்பட்ட இக்கௌரவிப்பு நிகழ்வில் அமைச்சின் செயலாளர் உட்பட அனைத்து ஊழியர்களும் கலந்து கொண்டனர்.