காரைதீவு நிருபர் சகா-
எமது வலயத்திற்கு பெருமைசேர்த்துத்தந்த மிகவும் பின்தங்கிய மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலையின் வரலாற்றில் புதுமை படைத்த மாவட்டத்தின் 2ம்நிலை மாணவி ஜிவானுஜா மற்றும் 10புலமையாளர்கள் கற்பித்த ஆசிரியர் விமலகீதன் அதிபர் சுந்தரநாதன் துணைநின்ற பெற்றோர் கல்விச்சமுகத்தினர் அனைவரையும் மனதார வாழ்த்திப்பாராட்டுகிறேன்.
இவ்வாறு மல்வத்தை புதுநகர் அ.த.க.பாடசாலையின் சாதனையாளர்கள் பாராட்டுவிழாவில் பிரதமஅதிதியாகக்கலந்துகொண்டுரையாற்றிய சம்மாந்துறை வலயக்கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹூதுல்நஜீம் புகழாரம் சூட்டினார்.
இவ்விழா நேற்று(16) அதிபர் நல்லரெத்தினம் சுந்தரநாதன் தலைமையில் கோலாகலமாக நடைபெற்றது.
விழாவில் கௌரவ அதிதிகளாக மல்வத்தை இலங்கைவங்கி முகாமையாளர் ஆர்.ரஜனிகாந்த் பிரதிக்கல்விப்பணிப்பாளர்களான எஸ்.புவனேந்திரன் எம்.எச்.எம்.ஜாபீர் கோட்டக்கல்விப்பணிப்பாளர் எம்எ.சபூர்த்தம்பி உதவிக்கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா பாடசாலை இணைப்பாளர் எ.அச்சிமொகமட் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
பணிப்பாளர் நஜீம் மேலும் உரையாற்றுகையில்:
இங்கு வளங்கள் குறைந்திருந்தாலும் கல்விவளம் நிறைய உள்ளது. பெற்றோர்கள் இந்தப்பரீட்சையோடு இளைப்பாறிவிடக்கூடாது.
இந்தச்சாதனையாளர்களை கபொத. சா.த. மற்றும் உயர்தரம் வரையும் அதே உத்வேகத்தில் கொண்டுசெல்லவேண்டும் என்பது எனது வேண்டுகோள்.
அம்பாறை மாவட்டத்தின் 2ம் நிலை பெற்ற 187புள்ளிகளைப்பெற்ற செல்வி ஜிவானுஜா புதுநகரின் மரியாதையை மட்டுமல்ல எமது வலயத்தின் மரியாதையையும் காப்பாற்றியுள்ளார். ஏனைய பாடசாலைகள் இங்குவந்து பார்த்து அவர்களும் இதனைப்பின்பற்றி சாதனைபடைக்கவேண்டும். என்றார்.
விழாவில் பெற்றோரால் சாதனை மாணவர்கள் ஆசிரியர் த.விமகீதன் அதிபர் ந.சுந்தரநாதன் மற்றும் ஆசிரியர்கள் பரிசுகள் வழங்கி பாராட்டிக்கௌரவிக்கப்பட்டனர்.