ஏதாவது ஒரு கலவர நிலைமை ஏற்பட்ட பிறகு பிரபலங்களையும் கொழும்பில் உள்ள தலைமைகளையும் அழைப்பதையே நாம் வழக்கமாக கொண்டிருக்கிறோம், ஆனால் நாம் வாழும் யுகம் வேறு, நாம் நாளுக்கு நாள் நூதனமான எதிர்பார்க்காத புதுப்புது சவால்களையே எதிர்கொள்கிறோம், அவ்வாறான நிலைமைகள் வருமுன் காப்பதில் நாம் கரிசனையற்றிருக்கிறோம்.
இருக்கின்ற களநிலவரங்களைக் கையாள்வது ஒருபுறமிருக்க திட்டமிட்டு அரங்கேற்றப் படுகின்ற களநிலவரங்கள் குறித்து சகல சமூகங்களும் மிகவும் விழிப்பாக இருந்து கொள்ள வேண்டும்.
பெரும்பான்மையான பெரும்பான்மை சமூகத்தினர் மிகவும் நல்லவர்கள் என்பதே தீய சக்திகளுக்கு முன்னுள்ள மிகப் பெரும் சவாலாகும். பொதுசன அபிப்பிராயத்தை திசை திருப்புவதற்கான முயற்சிகள் இடம் பெறுவதற்குரிய சாத்தியப் பாடுகள் நிறையவே இருக்கின்றன.
கதாநாயகர்களும்,வில்லர்களும் கதைகளும், வசனங்களும், நடிகர்களும், சண்டைக் கட்சிகளும் ஒரேதரப்பு தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் மூலம் நெறியாழ்கை செய்யப் படும் வரலாற்றை கடந்த காலங்களில் நாம் கண்கூடாக கண்டிருக்கின்றோம்.
எல்லா மட்டங்களிலும், விழிப்புணர்வுடனும், அவதானத்துடனும், கூட்டுப் பொறுப்புடனும், தலைமைத்துவக் கட்டுக்கோப்புடனும் முன்னெச்சரிக்கையுடன் சகலரும் நடந்து கொள்ள வேண்டும்.
எனது எல்லா நண்பர்களும் அவர்கள் எங்கிருந்தாலும் சமாதான சகவாழ்வின் தூதுவர்களாகவே இருப்பார்கள். இன்ஷா அல்லாஹ்.
குறிப்பிட்ட ஒரு இனத்திற்கு எதிரான சவால்கள் முழு தேசத்தினதும் அமைதி சமாதானம் பாதுகாப்பு ஸ்திரத்தன்மை என்பவற்றிற்கு விடுக்கப்பபடும் அச்சுறுத்தலாகும்.
எமது விகிதாசார வரையறைகளிற்குள் கட்டுண்டு அவற்றிற்கு முகம் கொடுக்க முடியாது, அரசாங்கம், எதிர்கட்சி, பிராந்தியத்தில் உள்ள ஏனைய சிவில், மத தலைமைகள், புத்தி ஜீவிகள், பாதுகாப்பு தரப்பினர், தேசத்தின் சகல முற்போக்கு சக்திகள் என பல்வேறு தரப்புக்ககளுடனும் நல்லுறவுகளை நாம் பேணிக் கொள்ளல் வேண்டும்.
எதிரிகளை இலகுவாக உருவாக்கி விடலாம், எங்களை சரியாக புரிந்து கொள்கின்ற நண்பர்களை உருவாக்குவதே கடினமான பணி, இடை நடுவில் இருப்பவர்களை ஒரேயடியாக மறுபக்கம் தள்ளிவிடும் எழுத்துக்கள் பேச்சுக்கள் எதிர் வினையாற்றல்கள் ஆபத்தானவை.
எல்லா சமூகங்களிலும் தீய சக்திகள் மிக மிக சிறிய கூட்டத்தினரே. தீய சக்திகளை அரசியல் நோக்கங்களிற்காக பல்வேறு உள்நாட்டு, வெளிநாட்டு மற்றும் பிராந்திய சக்திகள் கருவிகளாக கூலிக்கு அமர்த்தியுள்ளனர்.
தேசிய அளவில் செயற்படும் எமது சிவில் சன்மார்கத் தலைமைகளுடன் தொடர்பில் இருப்பதோடு, ஒவ்வொரு மஹல்லாவிலும் சமூகத்தின் எல்லா தரப்புக்களையும் உள்வாங்கிய ஆலோசனை சபைகளை நிறுவி அழகிய தலைமைத்துவக் கட்டுக் கோப்பை ஏற்படுத்திக் கொள்ளல் வேண்டும்.
கடந்த காலங்களில் கட்டவிழ்த்து விடப்பட்ட இனமத காழ்ப்புணர்வு பரப்புரைகள் வன்முறைகளிற்கு பின்னால் பல்வேறு அரசியல் நிகழ்ச்சி நிரல்கள் இருந்தது போல் தற்பொழுது ஏற்பட்டுள்ள பதட்ட நிலைகளிற்குப் பின்னாலும் அரசியல் நிகழ்ச்சி நிரல் இருப்பதாக ஜனாதிபதி மற்றும் பிரதம மந்திரி இருவரும் தெரிவித்துள்ளனர்.
இந்த நாட்டில் யாருக்கும் அஞ்சி வாழவோ கெஞ்சி வாழவோ வேண்டிய அவசியம் எந்தவொரு சிறுபான்மை சமூகத்திற்கும் இல்லை, என்றாலும் அரசியலும் இராஜ தந்திரமும் முஸ்லிம் சமூகம் பறிகொடுத்து பரிதவிக்கும் பிரதான ஆயுதங்களாகும்.
குறிப்பாக சமூக ஊடகங்களை மிகவும் பொறுப்புணர்வுடன் நாம் பயன்படுத்துதல் வேண்டும், பதிவுகள் மாத்திரமல்ல பகிர்வுகளும் கூட.
எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் இருகரமேந்தி இந்த நாட்டில் வாழும் நல்லோர்கள் எல்லோர்கள் மீதும் கருணை காட்டுமாறும்,நேரிய வழியை நஸீபாக்குமாறும் துஆ செய்து கொள்வோம், தீய சக்திகளின் சதித் திட்டங்களை அவர்களுக்கெதிராகவே திருப்பிவிடும் வல்லமை அவனுக்கே உண்டு.
