நேற்று தங்காலையில் இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றிய அவர் மேலும் தெரிவிக்கையில்..
நாட்டில் மிக நீண்ட காலமாக இனவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்தமைக்கான வரலாறுகள் உண்டு.அது எமது ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதியில் மீண்டும் கோர வடிவம் எடுக்க முயற்சித்தது.எமது ஆட்சியானது யாராலும் உடைக்க முடியாதளவு மிகப் பலமாக இருந்ததால்,அதனை உடைக்க பல சதிகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சிறுபான்மை மக்களை எங்களிடமிருந்து பிரித்தெடுக்க அரசியல் நோக்கம் கொண்ட இனவாத தீயை மூட்டி விட்டிருந்தனர்.
அன்று சிலர் விதைத்த இனவாத தீயானது சிலர் மனங்களில் நஞ்சாக பதிந்து விட்டது.ஒரு பாரிய நாசகார செயலை முன்னெடுக்க ஒருவரின் கையில் ஒரு தீக்குச்சி இருந்தாலே போதுமாகும். நஞ்சு விதைக்கப்பட்டுள்ள மக்களது இதயங்களை சுத்தப்படுத்தும் வரை இலங்கையில் இனவாத குழப்பங்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கும்.
உடலின் எப் பகுதியில் பிரச்சினை உள்ளது என அறிந்து வைத்தியம் செய்யும் போது நோய் தீரும். இன்று பிரச்சினையை முடித்துவிட்டோம் என கூறுவது எல்லாம் அறிவுடமையாகாது. இன நல்லுறவை ஏற்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்வதே நிரந்தர தீர்வாகும். இன்று கிந்தோட்டை பிரச்சினையின் பின்னால் இவ்வரசின் வேறு ஒரு நிகழ்ச்சி நிரல் உள்ளதான சந்தேகம் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
இவ்வரசு இன நல்லுறவை வளர்க்க அமைச்சை உருவாக்கி மனோ கணேசன் கையில் வழங்கியுள்ளது. இன நல்லுறவை கட்டியெழுப்பும் பொறுப்பை முன்னாள் ஜனாதிபதி சந்திரரிகாவிடமும் ஒப்படைத்துள்ளது. இவர்கள் இது வரை எந்தவிதமான உருப்படியான திட்டங்களையும் முன்வைக்கவில்லை.இப்படி இருந்தால் எப்படி இலங்கையில் இன நல்லுறவு ஏற்படும்.
இவ்வரசானது இன நல்லுறவை கட்டியெழுப்ப நீண்டகால திட்டங்களை தீட்ட வேண்டும்.அதுவே இன்று இலங்கை நாட்டுக்கு மிக அவசரமானதும் அவசியமானதுமான தேவையாக உள்ளது.இன்னும் இவ்வரசானது இன நல்லுறவை கட்டியெழுப்புவது போன்ற இலங்கை நாட்டின் பொது நலன்களில் கவனம் செலுத்தாது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை எப்படி எதிர்கொள்வது என்பதிலேயே காலம் கடத்துமாக இருந்தால் மிகக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என குறிப்பிட்ட்டார்.
