நிந்தவூர் பிரதேசத்தில் இவ்வருடம் 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் திறமைச் சித்தியெய்திய மாணவர்கள் 100பேரைப் பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு இன்று நிந்தவூர்ப் பிரதேச சபைக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
நிந்தவூர் 'பெஸ்ட் ஒப் யங்' சமூக சேவை அமைப்பின் தலைவர் ஊடவியலாளர் ஏ.புஹாது தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு மாணவர்களைக் கௌரவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் முன்னாள் மாகாண சபை உறுப்பினர் கே.எம்.அப்துல் றசாக், இளம் அரசியல் பிரமுகர் சட்டத்தரணி.ஏ.எல்.றியாஸ் ஆதம், ஓய்வுபெற்ற அதிபர் சாமசிறி.எஸ்.அஹமது, இலங்கைப் போக்குவரத்துச் சபையின் கிழக்கு மாகாண பிராந்திய முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் உள்ளிட்ட உயரதிகாரிகள், கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரதம அதிதி சட்டத்தரணி ஆரீப் சம்சுதீன் இங்கு கருத்துத் தெரிவிக்கையில்:- '5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவதற்கு இம்மாணவர்களை ஊக்கப்படுத்தியதில் அக்கரை கொண்டு செயற்பட்ட பெற்றோர், இவர்களை வாழ்வில் சிறந்த மனிதர்களாக உருவாகுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். ஏனனில் இன்று கல்விமான்கள் உருவாகுகிறார்கள். ஆனால், அவர்களிடத்தில் சிறந்த மனிதத்துவம் இல்லை என்பது என்று சமூகத்தால் கண்டறியப்பட்டுள்ளது. எனவே, சிறந்த நற்பிரஜைகளை உருவாக்கப் பாடுபடுவோம்' எனக் கேட்டுக் கொண்டார்.





