அன்றாடம் செய்பவைகளை
அப்பால் தள்ளி விட்டு
வித்தியாசமாய் வாழ்ந்து பார்
வேறுலகம் நாடிப் பார்.
கதைப் புத்தகம் எடுத்து
கடைசியிலிருந்து வாசி.
புகைப்படம் பிடிக்காத நேரத்திலும்
புன்னகையுடன் தோளில் கை போடு
காப்பி போட்ட மனைவிக்கு
கட்டை விரலால் லைக் போடு
அழகில்லாத பெண்ணுக்கும்
அமர்ந்திருக்கும்
ஆசனத்தைக் கொடு
வெய்யிலின் சூட்டில்
விறைப்பாக நில்.
பின்
பக்கத்திலுள்ள வேப்பை நிழலில்
பக்க வாட்டில் படு
ஜன்னலைத் திறந்து வைத்து
நிலாவைப் பார்த்த படியே
நித்திரை கொள்.
செருப்புப் போடாமல்
சேற்றில் நட.
நெருப்பை வாசலில் மூட்டி
நீல வானைப் பார்த்து ரசி.
காபன் புகையில்லாக்
காட்டுக்குச் சென்று
இரண்டு மூன்று நாட்கள்
இருந்து விட்டு வா.
அணில் கடித்த கொய்யாவை
அடுத்த பக்கம் கடித்து
ரசாயனம் கலக்கா சுவையை
ரசித்து உண்
வாட்டும் துன்பம் வரும்போது
வாப்பாவை அடக்கிய இடம் சென்று
வாய்விட்டு அழு.
படித்த பாடசாலையின்
படிக்கட்டில் உட்கார்ந்து
முடிந்து போன வாழ்வின்
முகவரியைத் தேடு
ஆரோக்கியாய் இருக்கும் போதே
ஆஸ்பத்திரியை நாடி
உள்ளிருக்கும் நோய்க்கு
உடனடித் தீர்வு காண்
உயிர் போக முன்
ஒரே ஒரு தடவையேனும்
மனிதாக வாழ்ந்து பார்....!