அப்துல்சலாம் யாசீம்-
மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் நிரந்தரமாகத் தீர்க்கப்பட்டால் மட்டுமே நாட்டில் சமாதானம் ஏற்படும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். திருகோணமலை இந்து கலாசார மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை) இடம்பெற்ற தேசிய நல்லிணக்க நிகழ்ச்சித்திட்டம் தொடர்பான நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்;
'உண்மையான சமாதானம் ஏற்பட வேண்டுமாக இருந்தால் மக்களால் ஏற்றுக்கொள்ளக் கூடிய அரசியல் சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும். ஆட்சிமுறைகள் மக்களின் சம்மதத்துடனும் இணக்கத்துடனும் நடைபெறவில்லை. இதன் காரணமாகவே நாம் இன்று அனைத்துக் கட்சிகளினதும் முக்கியமாக மக்களின் சம்மதத்துடன் இந்த புதிய அரசியல் சாசனத்தினை ஏற்படுத்த முனைகின்றோம்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையினைப் பெறுவதுடன் மக்களது அங்கீகாரத்துடன் இப்புதிய அரசியல் சாசனத்தினை வெற்றிபெறச் செய்வதன் மூலம் நாட்டில் நிரந்தரமானதும் உறுதியானதுமான சமாதானத்தினை அடைய முடியும்' என எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மேலும் தெரிவித்தார்.