பெண் குழந்தை ஒன்று அழுகையுடனும் எரிச்சலுடனும் கோபத்துடனும் வீட்டுப்பாடத்தை படிக்கும் காணொளி குறித்து தன்னுடைய அதிர்ச்சியையம் ஆத்திரத்தையும் இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோலி இன்ஸ்டாகிராம் மற்றும் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.
கடந்த சில தினங்களாக சமூக ஊடகங்களான வாட்ஸ் ஆப், ஃபேஸ்புக் மற்றும் டிவிட்டர் போன்றவற்றில் ஒரு குழந்தை அழுது கொண்டே மிக்க கஷ்டத்துடன் பாடம் படிக்கும் வீடியோ வெளிவந்து கொண்டிருக்கிறது.
அதில், குழந்தைக்கு பாடம் சொல்லித் தருபவர் குழந்தையை மிரட்டுகிறார். கன்னத்தில் அடிக்கிறார். இதனால் குழந்தை அழுது கொண்டே நோட்டில் எழுதப்பட்டிருக்கும் இலக்கங்களை திரும்பத் திரும்பப் படிக்கிறது. அத்தோடு தன்னை விட்டுவிடும்படிக் கையெடுத்துக் கும்பிடவும் செய்கிறது.
இந்த காணொளியின் ஒரு பகுதியை இந்திய கிரிக்கெட் அணித்தலைவரான விராட் கோலி, தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கில் பதிவு செய்து தனது அதிர்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
தன்னுடைய பதிவில் விராட் கோஹ்லி
,''குழந்தையின் கோபமும், வலியும் இங்கு புறக்கணிக்கப்பட்டு, குழந்தையை படிக்க வைக்க வேண்டும் என்ற ஒருவரின் சுயநலமே மேலோங்கி இருக்கிறது. இரக்கம் என்பதே தற்போது ஜன்னலுக்கு வெளியே மொத்தமாக போய்விட்டது.'' என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், ''மற்றொரு பரிமாணத்தில் இந்த காணொளி எனக்கு அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்துகிறது. ஒரு குழந்தை மிரட்டப்பட்டால், ஒருபோதும் அதனால் கற்றுக்கொள்ள முடியாது.'' என்றும் தெரிவித்துள்ளார்.
இது போன்றே பிரபல அதிரடி ஆட்டக்காரர் ஷிகார் தவானும் இந்த வீடியோவை ஷேர் செய்துள்ளார்.