குறிப்பிட்ட அரசியல்வாதியின் வெற்றிக்காக அவரைச் சுற்றி நின்று உழைக்கும் அவர்கள் அதற்குக் கூலியாக பல சலுகைகளை அரசியல்வாதியிடம் இருந்து பெற்றுக்கொள்கின்றனர்.
அவ்வாறு பெற்றுக்கொள்ளும்போது ஏழைகளுக்குக் கிடைக்க வேண்டியவற்றைச் சுருட்டிக்கொள்வதுதான் கவைக்குறிய விடயம்.
அவ்வாறு ஒருவர் சுருட்டப் போய் அமைச்சர் ஒருவரால் விரட்டப்பட்ட சம்பவம் ஒன்று அண்மையில் குருநாகலில் இடம்பெற்றது.
குருநாகல் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதி அமைச்சர் அசோக அபயசிங்க அவரது வெற்றிக்காக உழைத்தவர்களுடன் சந்திப்பொன்றை மேற்கொண்டார்.அந்தச் சந்திப்பில் பலரும் பல்வேறு வகையான உதவிகளை அமைச்சரிடம் கேட்டனர்.
அவர்களுள் ஒருவர் தனக்கு சமுர்த்தி நிவாரணம் தந்தால் மட்டும் போதும் என்றார்.அவர் யார் என்று அமைச்சர் திரும்பிப் பார்த்தார்.அமைச்சருக்கோ அதிர்ச்சி.
காரணம் சமுர்த்தி நிவாரணம் கேட்டவர் இரண்டு அரிசி ஆலைகளுக்குச் சொந்தக்காரர்.
சமுர்த்தி நிவாரணம் நாளொன்றுக்கு 300ரூபாவுக்கும் குறைவான வருமானம் கிடைக்கும் குடும்பங்களுக்கு வழங்கும் நிவாரண உதவியாகும்.வசதி படைத்த நீங்கள் அதைக் கேட்பது எந்த வகையில் நியாயம் என்று அமைச்சர் அந்த நபரிடம் கேட்டார்.
அமைச்சரின் வெற்றிக்காக உழைத்தவர் என்ற மமதையில் இருந்த அந்த நபர் அமைச்சரின் எந்தவொரு விளக்கத்தையும் கேட்க மறுத்து தர்க்கம் புரிந்தார்.இறுதியில் அந்த நபரை அங்கிருந்து விரட்டுவதைத் தவிர அமைச்சருக்கு வேறு வழி தெரியவில்லை.
இவ்வாறு விரட்டப்பட்ட வேண்டியவர்கள் இன்னும் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள் அமைச்சரே!அவர்களின் கொஞ்சம் விரட்டப் பாருங்கள்.
அப்போதாவது ஏழைகளுக்கு நல்லது நடக்கின்றதா என்று பார்ப்போம்.
எம்.ஐ.முபாறக்-சிரேஷ்ட ஊடகவியலாளர்-