இந்த நாட்டு முஸ்லிம்களுடன் முகவர்கள் மூலம் தொடர்பை பேணியதால்தான் முஸ்லிம்கள் எம்மை பற்றி சரியான தெளிவை பெறவில்லை என அம்பாந்தோட்டை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
திருகோணமலை மாவட்ட ஜம்மிய்யதுல் உலமா சபை தலைவர் மௌலவி கலாநிதி நஸார் தலைமையில் கிண்ணியாவில் இடம்பெற்ற கூட்டத்தில் உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
எம்மிடம் இருந்து ஆட்சியை பறிக்க மேற்குலகம் செய்த சதியில் இந்த நாட்டு முஸ்லிம்கள் சிக்கிக்கொண்டனர். அதை இப்போது அவர்கள் உணருகின்றனர்.எம்மை சந்திக்கும் முஸ்லிம்கள் மூலம் நான் இதனை அறிந்துகொள்கிறேன்.
அன்று மூதூர், கிண்ணியா, காத்தான்குடி பிரதேசங்களில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் விடுதலை புலிகளால் கொலை செய்யப்பட்டனர். இந் நிலையில் சுமார் முப்பது வருட கொடூர யுத்தத்திற்கு நாம் முற்றுப்புள்ளி வைத்தோம். எமது அர்ப்பணிப்பு காரணமாக வடக்கு, கிழக்கு முஸ்லிம்கள் இன்று சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனர்.
அது தவிர எமது காலத்தில் வடக்கு கிழக்கில் வரலாறு காணாத பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நாம் மேற்கொண்டோம்.வடக்கு, கிழக்கில் உள்ள முஸ்லிம் அரசியல் தலைவர்கள் மக்களுக்காக கேட்ட அனைத்து அபிவிருத்திகளையும் நாம் செய்துகொடுத்தோம். மக்களுக்கு அபிவிருத்திகள் தொழில் வாய்ப்புகளுக்கும் பஞ்சம் இருக்கவில்லை.ஆனால் இன்று என்ன நடக்கிறது என்பதை மக்கள் அறிந்துகொண்டுள்ளார்கள்.
தற்போது முஸ்லிம்கள் எம்மை சந்திக்கிறார்கள்.எமக்கு ஆதரவளிப்பதாக உறுதி அளிக்கிறார்கள்.முன்பு விட்ட தவறை நாம் இனிமேல் விடமாட்டோம்.முஸ்லிம் மக்களுடன் நேரடியாக தொடர்பை பேணி அவர்கள் எமக்குள்ள நல்லுறவை மேலும் வளர்த்துக்கொள்வோம் என குறிப்பிட்டார்.