ஏ.எச்.ஏ. ஹுஸைன் -
கிழக்கு மாகாணத்தின் வளர்ச்சிக்குத் தடையாகவுள்ள விடயங்களை அகற்றி அபிவிருத்தி நோக்கிப் பயணிக்க அனைவரினதும் ஒத்துழைப்புத் தேவை என கிழக்கின் புதிய ஆளுநராகப் பதவியேற்றுக் கொண்ட ரோஹித்த போகொல்லாகம தெரிவித்தார்.
செவ்வாய்க்கிழமை 11.07.2017 கிழக்கு மாகாண ஆளுநர் அலவலகத்தில் மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட் தலைமையில் இடம்டிபற்ற பதவியேற்பின் அவர் கிழக்கு மக்களுக்காக உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்திக்கு பின்னடைவாக உள்ள முக்கிய காரணங்களை தான் நன்கு அறிந்துள்ளதாகவும் அதனை சீர்தூக்கிப் பார்த்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கூறினார்.
யுத்தப் பாதிப்பு, கல்விப் பின்னடைவு, இயற்கை வளம், மனித வளம் பயன்படுத்தப்படாமை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் கிழக்கு மாகாண அபிவிருத்தி பின்னடைவைக் கண்டுள்ளது பற்றி தான் அறிந்து வைத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
புதிய ஆளுநரை வரவேற்றுப் பேசிய கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், 'உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களில் அனுபவசாலியான கல்விமான், புதிய ஆளுநர் கிழக்கு மாகாணம் வாழும் முழுவதும் மூவின மக்களுக்கும் சமமாக தனது சேவைகளை வழங்க வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். அதற்கான முழு ஒத்துழைப்பையும் நடைமுறையில் நல்லாட்சியைக் கொண்டுள்ள எமது மாகாண நிருவாகம் வழங்கும்' என்று தெரிவித்தார்.
ஆளுநர் பதவியேற்பு நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்தில் கிழக்கு மாகாண முதலமைச்சர் செய்னுலாப்தீன் நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா மஹ்ரூப், மாகாண அமைச்சர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பற்கேற்புடன் வைபவ ரீதியாக இடம்பெற்றது.