மட்டக்களப்பு கல்குடா கல்வி வலயத்தில் அமைந்துள்ள அதி கஷ்டப் பாடசாலைகளில் ஒன்றான மதுரங்கேணிக்குளம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்கள் பயன்படுத்தும் பொருட்டு பாடப்பயிற்சி, வினாவிடைப் புத்தகங்களும் அரிச்சுவடிகளும் காகிதாதிகள் சிலவும் புதன்கிழமை 05.07.2017 கையளிக்கப்பட்டதாக அஹிம்சா நிறுவனத் தலைவர் வினாயகமூர்த்தி விஜயராஜா தெரிவித்தார்.
இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரண பரீட்சைக்குத் தோற்றவிருக்கும் மாணவர்களைப் பரீட்சைக்குத் தயாராக்கி ஊக்கப்டுத்தும் முயற்சியாக இது மேற்கொள்ளப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
மட்டக்களப்பு நகரிலிருந்து சுமார் 70 கிலோமீற்றர் தொலைவில் அமைந்துள்ள இந்த அதி கஸ்டப் பிரதேசப் பாடசாலை 8 ஆசிரியர்களைக்கொண்டு 154 மாணவர்களுடன் இயங்கி வருகின்றது.
பலவருடங்களுக்கு மேலாக இப்பாடசாலைக்கு ஆரம்பக்கல்வி ஆசிரியர்கள் இல்லை. இதனால் இங்கு கற்கும் மாணவர்களில் அதிகமானோர் எழுதுவதிலும் வாசிப்பதிலும் பின்னடைவை எதிர்நோக்கி வருகின்றனர்.
போக்குவரத்து வசதி, குடிநீர் வசதியீனம் உட்பட பல்வேறு அசௌகரியங்கள் நிலவுகின்ற போதிலும் இங்கு கற்பிக்கின்ற ஆசிரியர்கள் மிகுந்த சிரமத்தின் ஏதோ ஒருவகையில் சமாளித்துக் கொண்டு தங்களது கடமைகளை தங்களால் இயலுமானவரை மேற்கொண்டு வருகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.
மேற்படி பாடசாலையில் இடம்பெற்ற வினாவிடை நூல்கள் கையளிக்கும் இந்நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவைச் சங்க மட்டக்களப்பு மாவட்டக் கிளைத் தலைவர் ரீ. வசந்தராஜா பாடசாலை அதிபர் அதிபர் எஸ். மங்களரூபன் உட்பட மாணவர்கள் ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.