ஹஸ்பர் ஏ ஹலீம்-
தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் சேருவில பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட சமுதாயம் சார் அமைப்புக்களிடமிருந்து பொறுப்பேற்கப்பட்ட நீர்வழங்கல் திட்டத்தினை ஒருங்கிணைந்த நீர்வழங்கல் திட்டமாக மாற்றப்பட்டு பொதுமக்களிடம் கையளிக்கும் நிகழ்வு வைபவரீதியாக நகர திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சர் றவூப் ஹக்கீமினால் நாளை மறுதினம் (15) பொதுமக்களிடம் மாலை 04.00 மணிக்கு கையளிக்கப்படவுள்ளது.
இத்திட்டம் உள்ளூர் வங்கிகளின் நிதியுதவியூடாக 808.5 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டதுடன் இதனூடாக 3500 நீரிணைப்புக்கள் வழங்கப்படவுள்ளது.அன்றைய தினம் அமைச்சர் தலைமையில் திருகோணமலை பிராந்திய காரியாலயத்தில் குடி நீர் பிரச்சினைகள் தொடர்பாக பொதுமக்களுக்கான நடமாடும் சேவையும் காலை 09.00 மணி முதல் இடம்பெறவுள்ளதாகவும் நீர்வழங்கல் சபை பொதுமக்களுக்கு ஏற்கனவே அறிவித்துள்ளது.
இவ் வைபவத்தில் எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் கிழக்குமாகாண ஆளுனர் ரோஹித போகல்லாகம முதலமைச்சர் நஸீர் அஹமட் பிரதியமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாகாண சபை உறுப்பினர்கள் உயரதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்கவுள்ளனர்.