தனக்கு எதிராக கிடைக்கும் முறைப்படுகளை விசாரிக்கப்போகிறோம் நீதியை நிலைநாட்டப்போகிறோம் எனக் கூறிக்கொண்டு தங்களை தேடி யாரும் வரவேண்டாம் என் தான் பொலிஸ் மா அதிபருக்கு கூறிவைக்க விரும்புவதாக ஞானசார தேரர் குறிப்பிடுள்ளார்.
இன்று பொதுபல சேனா அமைப்பு நடத்திய ஊடக மாநாட்டில் கருத்து வெளியிட்ட அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்;
நாம் இஸ்லாம் மார்க்கத்தை இழிவுபடுத்திவிட்டதாக பல தரப்பில் இருந்தும் பொலிஸ் மா அதிபருக்கும் இன்னும் பொலிஸ் தலைமையகத்திற்கும் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்படுவதாக அறிய முடிகிறது.
முறைப்பாடுகளை எழுதிக்கொள்வதற்கு கடதாசி போதவில்லை என்றால் நாம் கடதாசி அனுப்புகிறோம். தேவை என்றால் சீ ஆர் புத்தகம் அனுப்புகிறோம். முறைப்பாடுகளை எழுதுங்கள் கிடைக்கும் முறைப்படுகளை விசாரிக்கப்போகிறோம் நீதியை நிலைநாட்டப்போகிறோம் எனக் கூறி எங்களை தேடி வரவேண்டாம். அது எங்கு போய் முடியும் என தெரியாது.
விசாரணை செய்ய வேண்டுமாக இருந்தால் ஆரம்பத்தில் இருந்து விசாரணை செய்யுங்கள். இந்த தடவை எம்மோடு விளையாட வரவேண்டாம் அது தவறான இடத்தில் போய் முடியும். ஆகவே நாட்டில் சிங்களவர்களுக்கு உள்ள பிரச்சினை தொடர்பில் செவிசாய்க்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என குறிப்பிட்டுள்ளார்.
