ஏ.எச்.ஏ.ஹுஸைன்-
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள ஏறாவூர் நகர முதலாம் குறிச்சி முஹைதீன் ஜும்ஆப் பள்ளிவாசலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல் செவ்வாய்க்கிழமை (23.05.2017) அதிகாலை உடைக்கப்பட்டு, அதிலிருந்த ஒரு தொகைப் பணம் திருடப்பட்டுள்ளதாக தமக்கு முறையிடப்பட்டுள்ளது என ஏறாவூர் பொலிஸ் பொறுப்பதிகாரி சிந்தக பீரிஸ் தெரிவித்தார்.
பள்ளிவாசல் புனமைப்பு மற்றும் பள்ளிவாசல் நிருவாகப் பணிகளுக்காக பொதுமக்களிடமிருந்து நிதி சேகரிப்பதற்காக பள்ளிவாசலில் உண்டியல் வைக்கப்பட்டிருந்ததாக பள்ளிவாசல் நிருவாகத்தினர் தெரிவித்தனர். உண்டியலில் இடப்பட்டிருந்த ஒரு தொகை சில்லறைகளையும் தாள் நாணயங்களையும் திருடியவர்கள் சேதமாக்கப்பட்ட உண்டியலை கைவிட்டுச் சென்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதிகாலைத் தொழுகைக்காக பள்ளிவாசலுக்கு வந்தவர்களே மேற்படி உண்டியல் உடைத்து திருடப்பட்டிருப்பதை அறிந்து நிருவாகத்திற்கும் பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.