ஒரு மணித்தியாலத்தில் இந்த நாட்டில் கலவரத்தை ஏற்படுத்த முடியும். ஒன்றை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள் அது எனக்குத் தேவை என்றால் மாத்திரமே. என்றாலும் கலவரம், மோதல் மற்றும் இரத்தத்தைச் சிந்தி இந்தப் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
பொதுபல சேனாவுக்கு ஆதரவான இணையத்தளம் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணல் ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
பொலிஸாரால் தேடப்பட்டு வரும் நிலையிலேயே, குறித்த இணையதள ஊடகவியலாளரான ஸ்ரீ சமந்த ரத்னாசேகர என்ற ஊடகவியலாளர் ஞானசார தேரரை நேரில் சந்தித்து இந்த நேர்காணலை மேற்கொண்டுள்ளார்.
குறித்த நேர்காணலில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
கைதாகவோ, சிறைக்குச் செல்லவோ அல்லது மரணிக்கவோ பயம் உள்ள ஒரு தேரர் அல்ல நான், எல்லாவற்றுக்கும் ஒரு ஒழுங்கு காணப்படுகிறது. அடிப்படை வாதிகளைத் திருப்பதி படுத்த நாய் போல் என்னைக் கைது செய்ய இடமளிக்க முடியாது.
அதேவேளை இந்த முறை சிறைக்கு செல்லும் போது நான் தனியாக போகமாட்டேன், விக்னேஸ்வரன், அஸாத் சாலி, முஜீபுர் ரஹ்மான், ரிஷாட் பதியுதீன் அல்லது ரவூப் ஹக்கீம் ஆகியவர்களின் ஒருவருடன் இம்முறை சிறைக்கு செல்வதாகவும் ஞானசார தேரர் தெரிவித்துள்ளார்.
மேலும் சிங்களவர்களுக்காக வேலை செய்து ஒரு போதும் எமக்கு நல்லவர்களாக மரணிக்க முடியாது, தர்மபால தேரருக்கும் அதே நடந்தது. எம்மை எங்காவது கொலை செய்து போட்டால், ஒரு கொடியாவது போடமாட்டார்கள். அது தான் பெரும்பான்மையான சிங்களவர்களின் நிலை, என்றாலும் எமக்கு அன்பு செலுத்தும் ஒரு பிரிவினர் உள்ளனர். அவர்களையாவது ஒரு இலக்கை நோக்கிப் பயணிக்க நாம் பாடுபட வேண்டும். அது எமது நாட்டின் எதிர்கால நலன் கருதி என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
டெய்லிசிலோன்