மருதமுனை மக்களை வெறும் வாக்கு வங்கிகளாகவே பார்க்கின்றனர் - துல்ஷான்

ஜெம்சித் (ஏ) றகுமான்-
ருதமுனை மக்களை அரசியல்வாதிகள் வெறும் வாக்கு வங்கிகளாகப் பார்ப்பதை இனியும் அனுமதிக்க முடியாது.மருதமுனை மக்களிற்கு அரசியல் அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும்.மருதமுனை மக்களின் வாக்குகளை குறிவைத்து மாத்திரம் சில அரசியல்வாதிகள் வந்து செல்கின்றனர்.

முன்னாள் பிரதேச செயலாளரும், முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட காணி ஆணையாளருமான தாசிம் அவர்களின் தலைமையில் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும், வர்த்தக கைத்தொழில் அமைச்சின் இணைப்பாளருமான சட்டத்தரணி துலக்கர் நயீம் அவர்களின் ஏற்பாட்டில் அவரது இல்லத்தில் 2017.03.18 ம் திகதி (சனிக்கிழமை) இடம்பெற்ற தற்கால அரசியல் பற்றிய கலந்துரையாடல் நிகழ்வின் போது உரையாற்றுகையிலேயே சட்டத்தரணி துல்கர் நயீம் மேற்கண்டவாறு கூறினார்.

தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்;

அம்பாறை மாவட்டத்தின் கல்முனைத் தொகுதியில் அமைந்துள்ள சுமார் 12000 வாக்காளர்களை உள்ளடக்கியுள்ள கிராமமே மருதமுனையாகும்.இங்கு வந்து செல்கின்ற சில அரசியல்வாதிகள் மக்களை வாக்கு வங்கிகளாகவே பார்க்கின்றனர்.பாராளுமன்ற மற்றும் மாகாணசபை அதிகாரங்களை மருதமுனை ருசிக்க தகுதியற்ற கிராமமாகவே சில அரசில்வாதிகள் பார்க்கின்றனர். இவர்கள் மருதமுனை மண்ணிற்கு பாராளுமன்ற, மாகாணசபை அதிகாரங்களை வழங்குவதற்கு தயக்கம் காட்டுவதற்கான காரணம் என்ன? என்பதை விளங்காதவர்களாக இம் மக்கள் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். மருதமுனை மண்ணிற்கு உரித்தான அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்ற வேண்டுமாக இருந்தால் எமக்கு அரசியல் அதிகாரம் வழங்கப்பட வேண்டும்.

காலா காலம் மு.கா வை ஆதரித்து வாக்களிக்கும் மக்கள் இன்று அக்கட்சி மீது அதிருப்தியடைந்துள்ளனர். வாக்குறுதிகளை மட்டும் தேர்தல் காலங்களில் வந்து கூறுவிட்டு செல்பவர்களாகவே இருக்கின்றனர். தேர்தல் வந்தால் மட்டுமே இவர்களை மருதமுனைக்குள் காண முடிகிறது. மருதமுனைக்கான அபிவிருத்தி செயற்பாடுகளையும் தடுப்பவர்களாகவும் குறிப்பிட்டமு.கா அரசியல்வாதிகள் ஈடுபடுகின்றனர். யார் குற்றினாலும் பரவாயில்லை அரிசி தான் எமக்கு வேண்டும் என்பதை புரிந்து கொள்ள முடியாத சில அரசியல்வாதிகளும் அவர்களுடன் சோரம் போகின்றமை வருத்தமளிக்கிறது.

நான் கிழக்கு மாகாணசபை உறுப்பினராக இருந்த காலகட்டங்களில் ஏராளமான அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்திருக்கின்றேன். மருதமுனை மக்களின் முற்று முழுதான ஆதரவு இல்லாதபட்சத்திலும் கூட மருதமுனைக்கான அபிவிருத்தி வேலைகளை கைவிடவில்லை. மாகாணசபை உறுப்பினராக இருந்த போது இரண்டு பாடசாலைகளை பெற்றுக் கொடுத்தேன். மருதமுனையில் உள்ள முக்கியமான பாதைகள் அனைத்தையும் ஜய்கா(JAIKA) திட்டத்தின் கீழ் கொங்றீட் வீதிகளாக செப்பனிட்டிருக்கிறேன். 20 க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்புகள் வழங்கி இருக்கிறேன்.

மாகாணசபை உறுப்பினராக இருந்த போது மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி திட்டங்கள் அனைத்திலும் எந்தவிதமான முறைகேட்டையும் மேற்கொண்டதில்லை. மாகாணசபை உறுப்பினராக கிடைத்த அதிகாரத்தை அமானிதமாகவே பார்த்தேன். மாகாணசபை உறுப்பினர் எனும் அமானிதத்தை முடிந்தவரை நேர்மையாகவும், நேர்த்தியாகவும் செய்து காட்டி இருக்கிறேன். எதிர்வரும் காலங்களில் தேர்தல்களில் போட்டி இட வேண்டும் என்ற எந்த ஓர் எண்ணப்பாடும் இல்லை. அரசியல் அதிகாரத்தை எடுக்க வேண்டும் எனும் நோக்கமும் கிடையாது. என்பதை சொல்லி வைக்க விரும்புகின்றேன்.

அமைச்சர் றிஷாட் பதியுதன் தற்போதுள்ள முஸ்லிம் தலைவர்களுக்குள் நேர்மையாகவும், மக்களை பற்றியும் சிந்திக்கூடிய தனித்துவமான தலைவர். முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை பாதுகாக்கவும், மக்களை அபிவிருத்தி பாதைக்கு இட்டுச் செல்லவும் அவர் எடுக்கும் பிரயத்தனங்கள் பாராட்டப்பட வேண்டியதாகும். அமைச்சர் றிஷாட் பதியுதீனை சிறுபராயம் முதல் நன்கு அறிந்திருக்கிறேன். சிறுவயது முதல் அவர் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதில் முந்தியடித்து கொண்டிருப்பார். அந்த சமூக சேவை மனப்பாங்கினை பார்த்தே அவருடைய தலைமைத்துவத்தின் கீழ் செயற்பட முன் வந்தேன். அமைச்சர் றிஷாட் பதியுதீனின் தலைமைத்துவத்தின் கீழ் மருதமுனைக்கான அபிவிருத்தி செயற்பாடுகளையும், அரசியல் அதிகாரங்களையும் பெற்றுக் கொள்ள முடியும். எனவே அவருடைய கரங்களை பலப்படுத்த நாம் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.

மருதமுனை மக்களை கறிவேப்பிலையாக தேர்தல் காலங்களில் மட்டும் பயன்படுத்திவிட்டு தூக்கி எறிந்துவிட்டு செல்லும் ஹரீஸ் போன்ற அரசியல்வாதிகளை இனி மேலும் மக்கள் நம்பி ஏமாந்துவிடக் கூடாது.தேர்தல் காலங்களில் இளைஞர்களை உணர்ச்சி வசப்படுத்தி அவர்களுக்கான வேலைவாய்ப்பு வாக்குறுதிகளை வழங்கி விட்டு இறுதியில் பசைவாளிகளாக மாற்றிவிட்டு போவதை எதிர்காலத்தில் அனுமதிக்கமுடியாது.அபிவிருத்தி எனும் தோரணையில் 100M களுக்கு வீதிகளை செப்னிட்டு செல்கின்றனர்.இதை நாங்கள் கண்கூடாக பார்த்துக் கொண்டிருக்கிறோம்.

மாகாணசபை உறுப்பினராக இருந்த காலப்பகுதியில் துல்ஷான் மருதமுனைக்கு செய்த அபிவிருத்தியில் கடுகளவேனும் மருதமுனை மக்களின் வாக்குககளை பெற்ற பிரதி அமைச்சர் ஹரீஸ் மற்றும் மாகாணசபை உறுப்பினர் தவம் போன்றோர்களால் செய்ய முடியாமல் உள்ளது.அவர்களால் முடிந்தால் செய்து காட்ட வேண்டும்.அதை விடுத்து ஊடகங்களில் துல்ஷானை விமர்சனம் செய்வதன் மூலம் எந்த பயனும் கிடைக்க போவதில்லை.

அமைச்சர் றிஷாட்டுடன் இணைவதன் மூலம் எம் மண்ணிற்கான அனைத்து அபிவிருத்திகளையும் செய்து கொள்ள முடியும்.அதற்கான உறுதிமொழியை இவ்விடத்தில் அளிக்கிறேன்.அமைச்சர் றிஷாட்டின் தலைமையின் கீழ் ஒன்றினைவது காலத்தின் தேவையாகும். இந்த இடத்தில் கூடி இருக்கும் அனைவரும் மு.காவின் ஆரம்பக்கட்ட போராளிகளே.உங்களின் மனங்களில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை போன்றே இன்று மக்கள் மத்தியில் மு.கா வீழ்ச்சி கண்டு அமைச்சர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அ.இ.ம.கா எழுச்சி கண்டுள்ளது.நாளுக்கு நாள் மக்கள் உண்மையின் பக்கம் திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.உணர்ச்சி அரசியல் மூலம் மருதமுனை அடைந்த பயன்கள் எதுவுமில்லை.படித்த மக்களாக இருந்து கொண்டு இனியும் ஏமாறும் மக்களாக நாம் இருந்துவிடக் கூடாது.-எனக் கூறினார்.

இந்நிகழ்வின் போது நூற்றுக்கும் அதிகமான அடிப்படை முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் அகில இலங்கை மக்கள் காங்கிரசில் இணைந்து கொண்டனர் . இந்நிகழ்வில் கல்முனைத்தொகுதி அகில இலங்கை மக்கள் காங்கிரசின் அமைப்பாளரும் நாடறிந்த பிரபல அறிவிப்பாளருமான A.R.M.ஜிப்ரி அதிதியாக கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -