அப்துல்சலாம் யாசீம்-
கிழக்கு மாகாண சபைக்கு முன்னால் தொண்டர் ஆசிரியர்கள் இன்று (22) பிற்பகல் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்ட 445 தொண்டராசிரியரின் நிரந்தர நியமனத்தை பெற்றுத்தருமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
20 வருடங்களுக்கு மேலாக நிரந்தர நியமனத்திற்காக பல போராட்டங்களின் பின்னர் மத்திய அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது. கிழக்கு மாகாணத்தில் 445 தொண்டராசிரியர்களுக்கான நிரந்தர நியமனத்திற்கு அங்கீகாரம் வழங்கி இரண்டு மாதங்களையும் தாண்டி இன்றுவரை கிழக்கு மாகாண கல்வியியல் சார் அதிகாரிகளோ கிழக்கு மாகாண கல்வி அமைச்சரோ எந்தவிதமான நடவடிக்ைககளிலும் இறங்காமல் இருப்பது பாரிய கவலையையும் சந்தேகத்தையும் ஏற்படுத்துவதாகவும் ஆர்ப்பாட்டக்காரர்கள் தெரிவிக்கின்றனர்.
இதே வேளை இந்த தொண்டராசிரியர்களின் பெயர்ப்ட்டியல் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.,தண்டாயுதபாணி அவர்களால் 2007ம் ஆண்டு அதாவது இறுதியாக நடைபெற்ற நேர்முகப்பரீட்சைக்கான கடிதத்தின் பிரதியின் அடிப்படையில் உண்மையான 445 தொண்டராசிரியர்களின் பெயர்கள் இணங்காணப்பட்டு கிழக்கு மாகாண அமைச்சரவையின் அனுமதியைப்பெற்று மத்திய அரசின் அனுமதிக்காக கல்வி அமைச்சர் அகில விறாஜ் காரியவசம் அவர்களுக்கு அனுப்பப்ட்டு ஓரிரு மாதங்களில் அனுமதி பெறப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.
மத்திய அரசினால் அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ள 445 கிழக்கு மாகாண தொண்டராசிரியர்களையும் உடனடியாக நேர்முகப்பரீட்சைக்கு அழைத்து தகுதியானவர்களை இணங்கண்டு அவர்களுக்கு நிரந்தர நியமனத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் கிழக்கு மாகாண தொண்டராசிரியர்கள் வேண்டுகோள் விடுக்கின்றனர்.