பழுலுல்லாஹ் பர்ஹான்-
தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைச் செயலகம் 11-03-2017 நேற்று சனிக்கிழமை இலக்கம் 127/55,புதிய கல்முனை வீதி.கல்லடி,மட்டக்களப்பு எனும் முகவரியில் திறந்து வைக்கப்பட்டது.
மேற்படி தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைச் செயலகத்தை முன்னணியின் தலைவரும்,தவிசாளரும்,முன்னாள் பிரதியமைச்சருமான விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) நாடா வெட்டி உத்தியோகபூர்வமாக திறந்து வைத்தார்.
குறித்த தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் தலைமைச் செயலக திறப்பு விழாவில் முன்னணியின் பொதுச் செயலாளர் வி.கமலதாஸ்,அதன் அம்பாறை மாவட்ட உறுப்பினரும்,முன்னாள் கிழக்கு மாகாண விவசாய அமைச்சருமான நவரட்ணராஜா,அதன் பிரச்சார செயலாளர் திருமதி உருத்திரமலர் ஞானபாஸ்கரன்;,அதன் பிரதித் தவிசாளர் சோமசுந்தரம் ஸ்ரீ ஹரன் உட்பட தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
தலைமைச் செயலக திறப்பு விழாவை தொடர்ந்து தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் மத்திய குழுக் கூட்டம் முன்னணியின் தலைமைச் செயலகத்தில் இடம்பெற்றது.
இதில் வடக்கு,கிழக்கு,மலையகம் சார்ந்த பிரதிநிதிகள் கட்சியின் முன்னெடுப்பு பற்றிய மீளாய்வு,கட்சியின் கொள்கைகள் பற்றிய ஒரு பார்வை,சமகால ஜெனீவா நிகழ்வுகள் பற்றிய ஒரு பார்வை,கட்சியின் அங்கத்தவர்களின் ஒழுக்கம் சார்ந்த விடயங்கள்,எதிர்வரும் மாதத்தில் வன்னி,கொழும்பு காரியாலயங்கள் திறப்பது பற்றிய தீர்மானம்,ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவுகளுக்கும் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு பொறுப்புக்கள் வழங்கல் போன்ற பல்வேறு முக்கிய விடயங்கள் கலந்துரையாடப்பட்டதாகவும் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் வி.கமலதாஸ் தெரிவித்தார்.