ஹாசிப் யாஸீன்-
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை நிபுணராகக் கடமையாற்றிய பீ.கே.ரவீந்திரன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலைக்கு மாற்றலாகிச்செல்வதையிட்டு சேவை நலன் பாராட்டு நிகழ்வு (31) செவ்வாய்க்கிழமை வைத்தியசாலை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றகுமான் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வைத்திய நிபுணர்களான ஏ.எம்.றசீன், எம்.எம்.ஹபீழ், கண் வைத்தியர் எம்.எம்.ஏ.றிசாட், உளவள வைத்தியர் எம்.சறாப்தீன்,தர முகாமைத்துவ கட்டுப்பாட்டு பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாஹிர் உள்ளிட்ட வைத்தியர்கள், தாதியர்கள், உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
சத்திர சிகிச்சை நிபுணர் பீ.கே.ரவீந்திரன் கடந்த ஆறு வருடங்களாக சிறப்பாக கடமையாற்றி கல்முனை பிரதேச மக்களினதும், வைத்தியசாலை உத்தியோகத்தர்களினதும் நன் மதிப்பைப் பெற்றவர்.
அன்னாரின் இச்சேவையினை பாராட்டி வைத்தியசாலை வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் நினைவுப் பரிசு வழங்கி, பொன்னாடை போர்த்தி, கவிதை மற்றும் வாழ்த்துப்பா பாடி கௌரவித்தனர்.
நிகழ்வில் விஷேடமாக வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எப்.றகுமான் வைத்திய நிபுணர் ரவீந்திரன் மக்களுக்கும் வைத்தியசாலையின் வளர்ச்சிக்கும் ஆற்றிய உயரிய சேவைக்கு தங்கமோதிரம் அணிவித்து கௌரவித்தார்.
சத்திர சிகிச்சை நிபுணர் ரவீநதிரன் மாற்றலாகி செல்லும் இடத்திற்கு மருதமுனையைச் சேர்ந்த சத்திர சிகிச்சை நிபுணர் எம்.எம்.சமீம் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.