எஸ்.ஹமீத்-
நேற்று வெள்ளை மாளிகையில் ஜப்பானிய பிரதமர் ஷின்சோ அபேயை வரவேற்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் இருதரப்புப் பேச்சு வார்த்தைகளை முன்னெடுத்துக் கொண்டிருந்த சமயத்தில் ஜப்பான் கடலின் மேலாகப் பாரிய ஏவுகணையைச் செலுத்திப் பரிசோதித்திருக்கிறார் வட கொரியாவின் சர்வாதிகாரி கிம் ஜோங் உன். இது ஒரு விஷமச் செயல் எனவும் அமெரிக்க ஜனாதிபதியை உசுப்பி விடவும், ஜப்பானிய பிரதமருக்குத் திடுக்கத்தைக் கொடுக்கவுமே சர்வாதிகாரி கிம் ஜோங் உன் இவ்வாறு நடந்து கொண்டிருப்பதாக விமர்சகர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் வட கொரியா ஏவிய முதலாவது ஏவுகணை இதுவாகும். இதற்கு முன்னரும் ஏவுகணைகளைப் பரீட்சிப்பதாகச் சொல்லி வட கொரியா நடந்து கொண்ட சம்பவங்கள் உலகின் ஒட்டு மொத்த கண்டனத்துக்கும் ஆளாகியிருக்கின்றன.
இதுபற்றி தென் கொரிய பாதுகாப்பு அமைச்சகம் விடுத்துள்ள அறிக்கையில் ''ஏவுகணை ஏவப்பட்டதொன்றும் தற்செயல் நிகழ்வல்ல. தன்னிடமுள்ள நியூக்கிலியர் மற்றும் ஏவுகணைச் சக்தியை உலகத்துக்குக் காட்டுவதன் திட்டமிட்ட நோக்கமே வட கொரியாவினுடையது. மாத்திரமன்றி, அமெரிக்காவின் புதிய தலைமையைத் தூண்டுகின்ற நோக்கமும் இதிலுள்ளது.!'' என்று சாடியுள்ளது.
''இது பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு செயல்!'' என்று ஜப்பானிய பிரதமர் கருத்து வெளியிட்டுள்ளார்.
இந்தச் சம்பவத்தின் பின்னர் நிருபர்களிடம் பேசிய ட்ரம்ப் ''அமெரிக்கா தங்களது உற்ற நண்பனான ஜப்பானின் பின்னால் எழுந்து நிற்குமென்றும், அமெரிக்காவின் 100 வீதமான ஆதரவு ஜப்பானுக்கு உண்டு என்றும் கூறியுள்ளார்.