சுலைமான் றாபி-
கொழும்பிற்கு செல்லும் பொது மக்களின் நன்மை கருதி நிந்தவூரில் எதிர்வரும் இரண்டு மாதத்திற்குள் நிரந்தர பஸ் தரிப்பிட நிலையம் அமைக்கப்படும் என இலங்கை போக்கு வரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய பிரதம முகாமையாளர் ஏ.எல்.சித்தீக் நேற்று (12) நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பினர் ஏற்பாடு செய்த மண்ணின் மகுடம் கௌரவிப்பு நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில் :
கொழும்பிற்கு செல்வதற்கு தற்போது அதிகமான பொது மக்கள் இலங்கை போக்கு வரத்துச் சபையின் பஸ் வண்டியில் செல்வதனையே விரும்புகின்றனர். இதனால் அம்பாறை மாவட்டத்தில் உள்ள நிந்தவூர் பிரதேசத்தில் ஒரு நிரந்தரமான இடமொன்றில் கொழும்பு, கண்டி, கட்டுநாயக்க போன்ற இடங்களுக்குச் செல்வதற்கான ஆசனப் பதிவுகளை மேற்கொள்வதோடு, பஸ் வண்டிகள் தரித்து நின்று இங்கிருந்தே குறிப்பிட்ட இடங்களுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளோம்.
அதே போன்று நிந்தவூர் அல்லிமுலை சந்தி ஊடாக இறக்காமம், வரிப்பத்தான்சேனை அம்பாறை, கண்டி, கொழும்பு கட்டுநாயக்க போன்ற இடங்களுக்கும் செல்வதற்காக பஸ் சேவைகளை எதிர்வரும் இரண்டு மாதங்களுக்குள் வழங்கவுள்ளோம் எனத் தெரிவித்தார்.
இதேவேளை நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் தலைவரும், ஊடகவியலாளருமான ஏ. புகாது தலைமையில் இடம்பெற்ற மண்ணின் மகுடம் 2017 கௌரவிப்பு நிகழ்வில் கடந்த 2016 ம் ஆண்டில் க.பொ.த (உ/த ) பரீட்சையில் சித்தியடைந்து பல்கலைக் கழகத்திற்கு தெரிவான 46 மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டதோடு, அண்மையில் கலாபூஷணம் விருது பெற்ற முன்னாள் நிந்தவூர் கோடடக் கல்வித் பணிப்பாளர் ஏ.எல்.எம். அமீன், ஓய்வு நிலை அதிபர் எஸ். அஹமது, இலங்கை போக்கு வரத்துச் சபையின் கிழக்குப் பிராந்திய பிரதம முகாமையாளர் ஏ.எல். சித்தீக் ஆகியோர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் கல்முனை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜலீல், தொழிலதிபரும், பொறியியலாருமான இசட். எம். ஹைரு, நிந்தவூர் பெஸ்ட் ஒப் யங் சமூக சேவைகள் ஒழுங்கமைப்பின் ஸ்தாபக தலைவர் ஐ.எம். நிஸ்மி, வங்கி முகாமையாளர் ஏ.எல். அன்வர்டீன், மதீனா மகா வித்தியாலய அதிபர் எம். ஷரீப்டீன் உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.