புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்வின் பண்முகப்படுத்தப்பட்ட 2016ஆம் ஆண்டுக்கான வரவு – செலவு திட்ட நிதியொதுக்கீட்டின் கீழ் கொழும்பு, வெல்லம்பிடிய சார்ஸ் கார்டன் பிரதேசத்தில் இயங்கி வரும் தாருஸ் ஸலாம் அஹதிய்யா பாடசாலைக்கு ஒன்றரை இலட்சம் பொறுமதியான போட்டோ கொப்பி இயந்திரமொன்று பெற்றுக்கொடுக்கப்பட்டது.
குறித்த அறநெறி பாடசாலையின் அதிபரும், கொடிக்காவத்தை - முல்லேரியா பிரதேச சபை முன்னாள் உறுப்பினருமான ஏ. ஸனீர் மௌலவி அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க மேற்படி போட்டோ கொப்பி இயந்திரம் பெற்றுக் கொடுக்கப்பட்டது.
இதனை உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு இன்று புதன்கிழமை இராஜாங்க அமைச்சின் காரியாலயத்தில் நடைபெற்றது. இதில் மட்டக்களப்பு கெம்பஸ் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹிராஸ் ஹிஸ்புல்லாஹ், இராஜாங்க அமைச்சரின் இணைப்புச் செயலாளர் றுஸ்வின் மொஹமட் மற்றும் அஹதிய்யா பாடசாலையின் நிர்வாக அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.
வெல்லம்பிடிய சார்ள்ஸ் கார்டன் பிரதேசத்தில் இயங்கி வரும் மேற்படி அறநெறி பாடசாலையில் 500 மாணவர்கள் கல்வி கற்கின்றதுடன் 35 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். பல குறைபாடுகளுக்கு மத்தியிலும் சிறப்பாக இயங்கி வரும் இந்த அறநெறி பாடசாலைக்கு போட்டோ கொப்பி இயந்திரமொன்றைப் பெற்றுத் தருமாறு கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதற்கமைய இராஜாங்க அமைச்சர் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தனது வெளிமாவட்டங்களுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து அதனை பெற்றுக் கொடுத்திருந்தமைக் குறிப்பிடத்தக்கது.
