எஸ்.அஷ்ரப்கான்-
நல்லாட்சியை கொண்டு வந்தமைக்காக தன் தலையில் தானே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் என ஆசாத் சாலி சொல்லியுள்ளார். செருப்பால் மட்டுமல்ல தும்புக்கட்டையாலும் அடித்துக்கொள்ள வேண்டிய நிலை உள்ளது என்பதே உண்மை என உலமா கட்சித்தலைவர் குறிப்பிட்டார்.
கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற ஆதரவாளர் சந்திப்பில் அவர் தெரிவித்ததாவது,
இன்று இந்த நல்லாட்சி அரசு இதுவரை முஸ்லிம்களுக்கென எந்தவொரு உரிமையையும் வழங்காத நிலையில் நம்க்கென இருக்கும் உரிமைகளையும் தட்டிப்பறித்துக்கொண்டிருக்கிறது. இதனை பார்க்கும் போது ஆசாத் சாலி மட்டுமல்ல நல்லாட்சி அரசை கொண்டு வர முதலில் களம் இறங்கிய முஸ்லிம் சிவில் சமூகமும் தமது தலையில் தாமே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் என்பதே உண்மை. இதற்கென ஒரு ஜும்ஆ நாளை ஒதுக்கி அனைவரும் ஆசாத் சாலி தலைமையில் செருப்பால் தத்தம் தலையில் அடித்துக்கொள்வது தவிர வேறு வழியில்லை.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முழு முஸ்லிம் சமூகமும் ஒரு பக்கம் நிற்க உலமா கட்சி மட்டும் மஹிந்த பக்கம் நின்ற போது எம்மை நக்கலாகவும் வேடிக்கையாகவும் துரோகியாகவும் பார்த்த சமூகம் இன்று தன் தலையில் தானே மண் அள்ளிப்போட்டுக்கொண்டுள்ள நிலையில் உள்ளது. அன்று நாம் தெளிவாக சொன்னோம் மஹிந்த ராஜபக்ஷவை விட மைத்ரி ரணில் ஹெல உறுமய கூட்டு ஆபத்தானது என்று. ஆனால் ஆசாத் சாலி, நல்லாட்சி முன்னணி போன்றோர் டயஸ்போராவின் நிகழ்ச்சி நிரலுக்கு பலியாகி முஸ்லிம் சமூகத்தை வழிகெடுத்து விட்டார்கள்.
மஹிந்த ராஜபக்ஷ பயங்கரவாதத்தை ஒழித்து வடக்கு கிழக்கு முஸ்லிம்களின் உயிர்களை பாதுகாத்தவர். அந்நிலையிலும் வடக்கு கிழக்கு முஸ்லிம் மக்கள் கூட மஹிந்தவுக்கு வாக்களிக்காத நன்றி கெட்ட செயலுக்காக இன்று முழு சமூகமும் இறை தண்டனையை அனுபவித்துக்கொண்டிருக்கிறது. இந்த நாட்டு அரசியலில் பணமோ பதவியோ பற்றி கொஞ்சமும் நினைக்காமல் சமூகத்தின் எதிர்காலம் பற்றி மட்டுமே உலமா கட்சி சிந்தித்து முடிவெடுக்கும் என்பது இன்று நல்லாட்சியை கொண்டு வந்தவர்கள் தம்மைத்தாமே செருப்பால் அடித்துக்கொள்ள வேண்டும் என அவர்களே சொல்வதிலிருந்து தெளிவாகிறது என உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தனதுரையில் குறிப்பிட்டார்.