அமைச்சர் தலதா அதுகோரலவுக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றை முன்வைத்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.
மேலும், தலதா அதுகோரலவுக்கு எதிராக, குற்றப் புலனாய்வுப் பிரிவிலும் முறைப்பாடு வழங்கியுள்ளதாக மஹிந்தானந்த அளுத்கமகே கூறியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கத்திலுள்ள ஊழல்வாதிகளுக்கு எதிராக, இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யும் வேலைத் திட்டத்தின் அடிப்படையில், நான்காவது நபராக தலதாவுக்கு எதிராக இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
முன்னதாக, அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம உள்ளிட்ட மூவருக்கு எதிராக இவ்வாறு முறையிடப்பட்டுள்ளது.
இதேவேளை, வருடத்திற்கு மூன்று இலட்சம் இலங்கையர்கள் பொருளாதார பிரச்சினைகள் காரணமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புக்காக செல்வதாக, இதன்போது கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் நிஷேராஸ பிரேமரத்ன தெரிவித்துள்ளார்.
இவர்களுக்காக அமைச்சர் தலதா அதுகோரலவின் தலையீட்டில், காப்புறுதி திட்டம் ஒன்று 2015.08.26ம் திகதி முதல் அறிமுகப்படுத்தப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதில் பாரியளவு நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
